Tuesday, December 30, 2014

சட்டத்தை நிரந்தரமாக ஏமாற்ற முடியாது என்பதை உணர்த்தும் பெங்களூர் சிறப்பு கோர்ட் தீர்ப்பு; ராமதாஸ்

 

ஏமாற்றங்கள் மறைந்து மாற்றம் காண ஆங்கில புத்தாண்டில் உறுதி ஏற்போம் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 

ஒவ்வொரு புத்தாண்டும் புதிய நம்பிக்கையுடன் தான் பிறக்கிறது. கடந்து போன ஆண்டில் எத்தனையோ ஏமாற்றங்களைச் சந்தித்தாலும் அவையும் கடந்து போகும் என்ற மன உறுதியுடன் தான் புத்தாண்டை நாம் எதிர்கொள்கிறோம். அந்த வகையில் சோதனைகள் நிறைந்த 2014 ஆம் ஆண்டு முடிந்து சாதனைகள் நிகழக் கூடிய 2015 ஆம் ஆண்டை வரவேற்கும் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும்  இதயங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முந்தைய ஆண்டுகளைப் போலவே 2014 ஆம் ஆண்டும் நம்பிக்கையுடன் தான் பிறந்தது. ஆனால், அந்த ஆண்டின் மாற்றங்கள் நிகழ்ந்ததைப் போலவே ஏமாற்றங்களும் மக்களை வாட்டின. மக்களின் துயரங்கள் தீர மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் இருந்தது. அதன்படியே ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. மாற்றம் தான் ஏற்பட்டதே தவிர மலர்ச்சி ஏற்படவில்லை; மாறாக எல்லா முனைகளிலும் மக்களுக்கு ஏமாற்றம் தான் தொடர்ந்தது. 

ஊழல் செய்துவிட்டு சட்டத்தை சில நாட்கள் ஏமாற்றலாம்; சில மாதங்கள் ஏமாற்றலாம்; நிரந்தரமாக ஏமாற்ற முடியாது என்பதை உணர்த்தும் வகையில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பு அமைந்தது. ஆனால், அதன் பிறகும் ஊழல் குறையவில்லை. அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுவதுடன், அரசு நிர்வாகம் என்று ஒன்று நடக்கிறதா? என்பதே தெரியாத அளவுக்கு தமிழக அரசு முடங்கிக் கிடக்கிறது. 

போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தால் பொதுமக்களும், சர்க்கரை ஆலை பணியாளர்களின் வேலைநிறுத்தத்தால் கரும்பு விவசாயிகளும் தவிக்கும் நிலையிலும் இப்பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்காமல் தூங்கிக் கொண்டிருக்கிறது தமிழக நிர்வாகம்.

இன்னொரு புறம் கனிமவளக் கொள்ளை குறித்த விசாரணையில் ஒவ்வொரு நாளும் வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கும் நிலையில், கொள்ளைக்கு காரணமானவர்களை காப்பாற்ற அரசே முயல்வது கவலை தருகிறது. 

முல்லைப்பெரியாற்று அணை வழக்கில் தீர்வு கிடைத்தால், காவிரியின் குறுக்கே புதிய தடுப்பணைகளை கட்டும் கர்நாடக அரசின் திட்டம் உழவர்கள் கண்களில் கண்ணீரை வரவழைத்திருக்கிறது. மின்சாரத்தைப் பொறுத்தவரை இயற்கை அன்னை கை கொடுத்த ஒருசில நாட்களைத் தவிர்த்து மீதமுள்ள நாட்கள் அனைத்தும் தமிழகத்திற்கு இருண்ட காலமாகவே இருக்கிறது.

2014 ஆம் ஆண்டு சோகங்களுக்கும் குறைவைக்கவில்லை. ஆட்சியாளர்களும், அதிகாரிகளும்  நடத்திய முறைகேடுகளால் மவுலிவாக்கம் அடுக்குமாடிக் கட்டிடம் தகர்ந்து விழுந்து அப்பாவி மக்கள் 61 பேர் உயிரிழந்தனர். ஆட்சியாளர்களின் வருமான வேட்கை காரணமாக அரசு விற்கும் மதுவைக் குடித்து ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள்; 2 லட்சம் குடும்பங்கள் ஆதரவற்றவை ஆகின்றன.ஆனாலும், ஆட்சியாளர்கள் இலக்கு வைத்து மது விற்பனை செய்து கொண்டிருக்கின்றனர்.

ஏமாற்றங்களையும், துயரங்களையும் விரட்டி, மகிழ்ச்சியையும், மலர்ச்சியையும் ஏற்படுத்துவதற்கான மந்திரம் மக்களின் ஆள்காட்டி விரலின் நுனியில் தான் இருக்கிறது. மக்கள் விரும்பும் அந்த மாற்றத்தை ஏற்படுத்த இந்த புத்தாண்டில் அடித்தளம் அமைத்து அடுத்த ஆண்டில் செயல்படுத்திக் காட்ட இந்த புத்தாண்டுநாளில் அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்று கூறி அனைவருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மீண்டும் ஒரு முறை ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 

ஆவின் பால் ஊழல்: அமைச்சர், அதிகாரிகளை தப்ப விடக் கூடாது: ராமதாஸ்


ஆவின் பால் ஊழல்: அமைச்சர், அதிகாரிகளை தப்ப விடக் கூடாது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஆவின் பால் கலப்பட ஊழலில் அதிகாரிகளுக்கு உள்ள தொடர்பு குறித்து முறையான விசாரணை நடத்தப்படாவிட்டால், ஆவின் ஊழல் குறித்து சிபி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டியிருக்கும் என்று சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. பால் கலப்பட ஊழலில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளிகளை காப்பாற்ற தமிழக காவல்துறை முயல்வதை இது அம்பலப்படுத்தியிருக்கிறது.

ஆவின் பால் கலப்பட ஊழல் கடந்த ஆகஸ்ட் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட நாளில் இருந்தே இந்த ஊழலின் பின்னணியில் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் இருப்பதாகவும், இதுகுறித்து சிறப்பு புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறேன்.  ஆரம்பத்தில் இதை ஏதோ சாதாரணமான விஷயம் போல காட்டி, மூடிமறைக்க முயன்ற தமிழக அரசு, எதிர்க்கட்சிகள் அளித்த கடுமையான நெருக்கடி காரணமாக குற்றப்புலனாய்வுப் பிரிவு (சி.பி.சி.ஐ.டி) விசாரணைக்கு ஆணையிட்டது. ஆனால், கலப்பட ஊழல் கண்டுபிடிக்கப்பட்டு 135 நாட்களாகிவிட்ட போதிலும்,இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார், யார்? என்பதை காவல்துறையினர் கண்டுபிடிக்கவில்லை. மாறாக இவ்வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் மீது மட்டும் பெயரளவில் வழக்கு நடத்திவிட்டு, இதில் தொடர்புடைய பெரும்புள்ளிகளை காப்பாற்றவே தமிழக காவல்துறை போராடிக் கொண்டிருக்கிறது.

ஆவின் நிறுவனத்தில் பொது மேலாளர் நிலையில் உள்ள சில அதிகாரிகளுக்கு இந்த ஊழலில் தொடர்பு இருப்பதாக ஆரம்பத்திலிருந்தே கூறப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அ.தி.மு.க. நிர்வாகி வைத்தியநாதனுக்கு உழவர்களிடம் கொள்முதல் செய்யப்படும் பாலை வாகனம்  மூலம் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் விதிகளை மீறி வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த சில அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர் என்றும் கூறப்படுகிறது. பால் கலப்பட ஊழல் வெளியான சில நாட்களில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த மாதவரம் மூர்த்தி திடீரென நீக்கப்பட்டார். அவர் நீக்கப்பட்டதற்கான காரணம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், பால் கலப்பட ஊழலில் உள்ள தொடர்பு காரணமாக அவர் பதவி நீக்கப்பட்டிருக்கக் கூடும் என்ற இயல்பான ஐயம் குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு ஏற்பட்டிருக்க வேண்டும்; அதனடிப்படையில் அவரிடமும், ஆவின் அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு விசாரணை நடத்தப்படவில்லை என்பதிலிருந்தே அவர்களைக் காப்பாற்ற காவல்துறை முயற்சி செய்கிறது என்பதை உணர முடியும்.

அதேபோல், பால் கலப்படம் காரணமாக ஆவின் நிறுவனத்திற்கு ரூ.2.89 லட்சம் மட்டுமே இழப்பு ஏற்பட்டிருப்பதாக குற்றப்புலனாய்வுப் பிரிவின் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டிருப்பதும் உண்மையை மூடி மறைக்கும் செயலாகும். ஒவ்வொரு நாளும் சுமார் 2 லட்சம் லிட்டர் வீதம் பால் திருடப்பட்டதாகவும், இந்த வகையில் ஆண்டுக்கு சுமார் ரூ.150 கோடி ஆவின் நிறுவனத்திற்கு இழப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மோசடி தொடர்ந்து நடந்து வந்துள்ள நிலையில், வெறும் ரூ. 2.89 லட்சம் மட்டுமே இழப்பு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. உண்மைக் குற்றவாளிகளை காப்பாற்ற முயலும் காவல்துறையின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. விசாரணையில் நடந்த தவறுகளை கண்டுபிடித்து எச்சரிக்கை விடுத்த சென்னை உயர்நீதிமன்றத்தின் நடவடிக்கை பாராட்டத்தக்கது.

பால் கலப்பட ஊழலில் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் மற்றும் அதிகாரிகளை காப்பாற்றும் முயற்சியை கைவிட்டு, தவறு செய்த அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர குற்றப்புலனாய்வுப் பிரிவு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருவேளை அரசியல் குறுக்கீடு காரணமாக தங்களால் அதை செய்ய முடியவில்லை என்றால், அதை உயர்நீதிமன்றத்திடம் ஒப்புக்கொண்டு இந்த வழக்கை மத்திய புலனாய்வுப் பிரிவு (சி.பி.ஐ) விசாரணைக்கு மாற்றலாம் என்று தெரிவிக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

Monday, December 29, 2014

நிலங்களை கையகப்படுத்த அவரச சட்டம்: கண்களை விற்று சித்திரம் வாங்குவதா? ராமதாஸ் கண்டனம்!


நிலங்களைக் கையகப்படுத்துவதில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான அவசரச் சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. கோடிக்கணக்கான உழவர்களை பாதிக்கும் இந்த சட்டத்தைக் கொள்ளைப்புறமாக கொண்டு வரும் மத்திய அரசின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது,  

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் முடிவடைந்ததற்கு அடுத்த நாளே அமைச்சரவையை அவசரமாக கூட்டி காப்பீட்டுத்துறையில் நேரடி அந்நிய முதலீட்டு உச்சவரம்பை 49% ஆக உயர்த்தவும், நிலக்கரி வயல்களை ஏலத்தில் விடுவதற்கும் வகை செய்யும் அவசர சட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அந்த அதிர்ச்சி மறைவதற்கு முன்பாகவே நிலங்களை கையகப்படுத்துவதற்கான சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான அவசர சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. நிலங்களை கையகப்படுத்துவதற்கோ அல்லது அவசரமாக நிலங்களை கையகப்படுத்தி தொழிற்சாலைக் கட்டவோ எந்த அவசரமும் இல்லாத நிலையில், இப்படி ஒரு அவசர சட்டம் ஏன்? எனப் புரியவில்லை.

மக்களவைத் தேர்தலையொட்டி பரப்புரை செய்த பாரதிய ஜனதா தலைவர்கள், ‘‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விலைவாசி குறைக்கப்படும்; தொடர்வண்டிக் கட்டணம் குறைக்கப்படும்; வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணம் 100 நாட்களில் மீட்டு வரப்பட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.15 லட்சம் வழங்கப்படும்’’ என்றெல்லாம் வாக்குறுதி அளித்தார்கள். நேரடியாக மக்களுக்கு அளித்த இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத நரேந்திர மோடி அரசு, தொழிலதிபர்களுக்கு மறைமுகமாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் துடிப்பதன் விளைவுகள் தான் இந்த அவசரச் சட்டங்கள். 

 நிலம் கையகப்படுத்துதலுக்கான அவசரச் சட்டத்தால் விவசாயிகள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியிருக்கிறார். இது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயலாகும். முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட,     ‘நிலம் கையகப்படுத்துதலில் வெளிப்படைத் தன்மை & நியாயமான இழப்பீடு பெறும் உரிமை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்தல் சட்டத்தின்’படி அரசு&தனியார் துறை கூட்டாண்மைத் திட்டங்களுக்காக நிலங்களை கையகப்படுத்தும் போது, அந்த நிலங்களின் உரிமையாளர்களில் 70 விழுக்காட்டினரின்  ஒப்புதல் பெறப்பட வேண்டும். ஆனால், இப்போது அந்த நிபந்தனை நீக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, நிலங்களை பெரிய அளவில் கையகப்படுத்தும் போது, அதனால் ஏற்படும் சமூகத் தாக்கம் குறித்து கண்டிப்பாக ஆய்வு செய்யப்பட வேண்டும் என்ற பிரிவும் அவசர சட்டத்தில் அகற்றப்பட்டிருக்கிறது. இதற்கெல்லாம் மேலாக, பாசன வசதியுள்ள பல்வகைப் பயிர்கள் விளையும் தன்மையுள்ள நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்று முந்தைய சட்டத்தில் இருந்த விதியும் நீக்கப்பட்டிருக்கிறது. சுருக்கமாக சொன்னால் மத்திய அரசு நினைத்தால் எந்த நிலத்தையும் எதிர்ப்பின்றி கைப்பற்றிக் கொள்ள முடியும்.
தேசப் பாதுகாப்பு, ராணுவம், ஊரக கட்டமைப்பு வசதிகள், சமூகக் கட்டமைப்புகள், தொழில்துறை தாழ்வாரங்கள் ஆகிய 5 தேவைகளுக்காக மட்டும் தான் விதிகள் தளர்த்தப்பட்டிருப்பதாகவும், மற்ற தேவைகளுக்கு நிலம் எடுப்பதற்கான விதிகள் மாற்றப்படவில்லை என்று அமைச்சர் கூறியிருக்கிறார். மேற்கண்ட 5 தேவைகளுக்காக மட்டும் தான் 99% நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன என்பது தான் உண்மை. இவற்றில் ராணுவத்திடம் மற்ற துறைகளின் வளர்ச்சிப் பணிகளுக்கு கொடுக்கும் அளவுக்கு தேவைக்கு அதிகமாக நிலம் இருப்பதால் முதல் இரு அம்சங்களுக்கும் நிலம் தேவைப்படாது. மீதமுள்ள 3 அம்சங்களும் தனியார் நிறுவனங்கள் நுழைந்து கோலோச்சக்கூடியவை. இந்த உண்மையை  உணர்ந்தால் அவசர சட்டம் கொண்டு வரப்படுவதன் உண்மையாக காரணத்தை புரிந்து கொள்ளலாம்.

இந்திய மக்களில் மூன்றில் இரு பங்கினருக்கு விவசாயம் தான் வாழ்வாதாரமாக விளங்குகிறது. அவ்வாறு இருக்கும் போது தொழில்வளத்தைப் பெருக்கப் போகிறோம் என்று கூறி வேளாண்மையை நசுக்க முயல்வது கண்களை விற்று சித்திரம் வாங்குவதற்கு ஒப்பானதாகும். இப்போக்கு தொடர்ந்தால், உணவுக்காக உலக நாடுகளிடம் இந்தியா கையேந்தி நிற்கும் காலம் விரைவிலேயே வந்து விடும். இதையெல்லாம் உணர்ந்து நிலம் கையகப்படுத்துதலுக்கான அவசரச் சட்டத்தை மட்டுமல்ல... வேளாண் விளை நிலங்களை கையகப்படுத்தும் எண்ணத்தையே மத்திய அரசு அடியோடு கைவிட வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார். 

Sunday, December 28, 2014

உரிமை கேட்டு போராடும் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மீது அடக்குமுறையை ஏவி விடுவதா? ராமதாஸ் கண்டனம்


பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

ஊதிய உயர்வு உள்ளிட்ட 26 கோரிக்கைகளை ஏற்க தமிழக அரசு முன்வராத நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசும், ஆளுங்கட்சியினரும் கடைபிடிக்கத் தொடங்கியுள்ள அணுகுமுறை கண்டிக்கத்தக்கது.

போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுடன் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வுடன் கூடிய புதிய ஊதிய ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட வேண்டும். ஆனால், நான்கரை ஆண்டுகளாகியும் புதிய ஊதிய ஒப்பந்தம் கையெழுத்திடப்படாத நிலையில், உடனடியாக அந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட வேண்டும் என்று வலியுறுத்தி தான் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் மேற்கொண்டு வருகின்றனர். ஓய்வூதியப் பயன்களை உடனடியாக வழங்க வேண்டும்; வருங்கால வைப்புநிதிக்காக பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை தங்கள் கணக்கில் செலுத்தாமல் வேறு செலவுகளுக்காக பயன்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட அவர்களின் மற்ற கோரிக்கைகளும் நியாயமானவையே. கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை தமிழக அரசும் இதுவரை மறுக்க வில்லை; தமிழக அரசால் மறுக்கவும் முடியாது.

இத்தகைய சூழலில், போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதில் தமிழக அரசுக்கு உண்மையான அக்கறை இருக்குமானால், தொழிற்சங்கத்தினரை அழைத்துப் பேசி இருதரப்பும் ஒப்புக்கொள்ளக் கூடிய தீர்வை காண்பது தான் அறிவார்ந்த செயலாக இருக்கும். ஆனால், வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர  அரசு கடைபிடிக்கும் அணுகுமுறை முரட்டுத்தனமான முதலாளிகள் கையாளும் உத்திகளைப் போன்றதாக உள்ளன. தொழிலாளர்களை மிரட்டியும், ஒடுக்கியும் பணிய வைத்து விடலாம் என்று கருதும் ஆட்சியாளர்கள், அமைதி வழியில் போராடும் தொழிலாளர்களை காவல்துறை மூலம் கைது செய்து வருகின்றனர். ஒருவரின் விரலைக் கொண்டு அவரின் கண்களையே குத்துவதைப் போல அ.தி.மு.க. தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்களை மற்ற தொழிற்சங்கங்கத்தினருக்கு எதிரான தூண்டி விட்டு, இருதரப்பினருக்கும் இடையே மோதலை உருவாக்கி வருகிறது தமிழக அரசு. இதனால் தமிழகத்தின் பல பகுதிகளிலும் பதற்றம் உருவாகியுள்ளது.

மதுரையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுவுடன் சென்றவர்கள் ஆயுதங்களைக் காட்டி அச்சுறுத்தி மிரட்டியுள்ளனர். கும்பகோணம் கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான வேதாரண்யம் பணிமனைக்குள் நேற்று பிற்பகலில் இரு வாகனங்களில் அடியாட்களுடன் சென்ற வேதாரண்யம் தொகுதி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் என்.வி. காமராஜ் அங்கு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். அவருடன் சென்ற அடியாட்கள் அங்கிருந்த பொருட்களையும், கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கியுள்ளனர். அவர்கள் கண்மூடித்தனமாக தாக்கியதில் பல தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர். நடத்துனர் ஒருவரின் முகத்தில் கண்ணாடி குத்தி படுகாயம் ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக சட்டப்பேரவை உறுப்பினர் மீது தொழிலாளர்கள் அளித்த புகாரைப் பெற்றுக் கொண்ட காவல்துறையினர் அவர் மீது வழக்குப் பதிவு செய்ய மறுத்து வருகின்றனர்.

சென்னை, வேலூர், விருதுநகர் உள்ளிட்ட பல நகரங்களில் அறவழியில் போராட்டம் நடத்திய தொழிலாளர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளனர். இன்னொருபுறம் வேலைநிறுத்தத்தை முறியடிக்கும் நோக்குடன் தற்காலிக ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை தேர்ந்தெடுக்கும் பணியில்  அரசு போக்குவரத்துக் கழகங்கள் ஈடுபட்டிருக்கின்றன. போக்குவரத்துத் தொழிலாளர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதை விடுத்து அனுபவம் இல்லாதவர்களை பணியில் சேர்ப்பதால் விபத்துக்கள் ஏற்படும் ஆபத்து உள்ளது. மதுரை அருகே நேற்று தற்காலிக ஓட்டுனர் ஓட்டிய பேரூந்து மோதி பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த காலங்களில் இத்தகைய அணுகுமுறையை கடைபிடித்ததால் அதிக அளவில் விபத்துக்கள் ஏற்பட்ட நிலையில், அந்த கசப்பான அனுபவங்களில் இருந்து பாடம் கற்காமல் பிடிவாதத்துடன் தமிழக அரசு செயல்படுவது நல்லதல்ல.

தொழிலாளர் சக்தியை அடக்குமுறை மூலம் ஒடுக்க முடியாது என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்; மே தினம் உருவான வரலாற்றை படித்தாவது தொழிலாளர்களின் வலிமையை தெரிந்து கொள்ள வேண்டும். வீணான அடக்குமுறை, ஒடுக்குமுறைகளை கைவிட்டு, போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்று அவர்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார். 

Sunday, December 21, 2014

மத மாற்றம்: சங்க பரிவாரங்களின் பேச்சும், செயலும் ஆபத்தானவை: ராமதாஸ்


பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மத மாற்றம் குறித்து ஆர்.எஸ்.எஸ்., பாரதிய ஜனதா உள்ளிட்ட அமைப்புகள் தெரிவித்து வரும் கருத்துக்கள் மிகவும் கவலையளிக்கின்றன. இவர்களின் பேச்சும், செயல்களும் சகோதர உணர்வுடன் வாழும் மக்களிடையே சண்டை உணர்வை ஏற்படுத்திவிடுமோ? என்ற அச்சத்தை ஏற்படுத்துகின்றன.

கொல்கத்தாவில் விசுவ இந்து பரிசத் அமைப்பு நடத்திய பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பாகவத்,‘‘ இந்தியா என்பது இந்துக்களின் தேசம். கடந்த காலங்களில் இழந்ததை இப்போது மீட்போம். கடந்த காலங்களில் மதமாற்றம் செய்யப்பட்டோரை  கட்டாயமாக மறு மதமாற்றம் செய்வோம். அதன்பின் இந்துக்களை எவரும் மதமாற்றம் செய்யாமல் தடுக்க கட்டாய மத மாற்றத் தடை சட்டத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றுவோம்’’ எனக் கூறியுள்ளார். சென்னை, கொச்சி ஆகிய நகரங்களில் செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய ஜனதாக் கட்சி தலைவர் அமீத் ஷா,‘‘தேசிய அளவில் கட்டாய மதமாற்றத்தை சட்டத்தைக் கொண்டு வர பாரதிய ஜனதாக் கட்சி தயாராக உள்ளது. இதற்கு மற்ற கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும்’’ என வலியுறுத்தியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் பாகவத் பேசிய சில நிமிடங்களில் குஜராத் மாநிலம் வல்சாத்  மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்களை கிறித்தவ மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் மாற்றியிருக்கிறார்கள். அண்டை மாநிலமான கேரளத்தில் 30 கிறித்தவர்களை மத மாற்றம் செய்திருப்பதாகவும் விசுவ இந்து பரிசத் அமைப்பு அறிவித்துள்ளது. இனிவரும் நாட்களில் இந்தியா முழுவதும் பெருமளவிலான பிற மதத்தினரை இந்து மதத்திற்கு மாற்றவும் ஆர்.எஸ்.எஸ்ஸின் துணை அமைப்புகள் திட்டமிட்டிருக்கின்றன. இன்னொருபுறம் கிறித்தவர்கள் கிறித்துமஸ் பெருவிழாவை கொண்டாடுவதை தடுக்கும் வகையில், கிறுத்துமஸ் பெருவிழாவன்று நடைபெறவிருக்கும் நல் ஆளுமை நாள் விழாவில் பங்கேற்க வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆணையிடப்பட்டிருக்கிறது. இதற்கெல்லாம் மேலாக பாலஸ்தீன நாட்டிற்கு உலக அரங்கில் காலம்காலமாக இந்தியா அளித்து வந்த ஆதரவை நிரந்தரமாக திரும்பப் பெற மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தீர்மானித்துள்ளது.

மத்திய அரசும், சங்க பரிவாரங்களும் மேற்கொண்டு வரும் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் இந்தியாவை இந்து நாடாக்குவதற்கான தொடக்கக் கட்ட முயற்சிகளாகவேத் தோன்றுகின்றன. இவை இந்தியாவின் மதச் சார்பற்ற தன்மையை சீர்குலைப்பதுடன், வேற்றுமையில் ஒற்றுமை என்ற தத்துவத்தை கேலிக் கூத்தாக்கி விடும். அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்காக இந்தியா கொடுத்த விலை என்ன? என்பதை அனைவரும் அறிவார்கள். இதையெல்லாம் அறிந்த பிறகும் மத மாற்றம் செய்வது, இந்தியாவை இந்து நாடாக்குவது போன்ற செயல்களில் சங்க பரிவாரங்கள் ஈடுபடுவதும், இவற்றை மத்திய ஆட்சியாளர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதும்  ஆபத்தானவை ஆகும்.

மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பாரதிய ஜனதா கட்சிக்கு   பெரும் வெற்றியை மக்கள் வாரி வழங்கியதன் நோக்கம் என்ன? என்பதை பிரதமர் நரேந்திர மோடியும், அவரை இயக்கும் அமைப்புகளும் புரிந்து கொள்ள வேண்டும். காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் இந்தியா சந்தித்த பின்னடைவை போக்க வேண்டும்; ஏழைகள் படும் அவதியை போக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் தான் காங்கிரசை வீழ்த்தி பாரதிய ஜனதாவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தினார்களே தவிர, இந்து ராஜ்ஜியத்தை அமைப்பதற்காக அல்ல. முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இந்தியாவும், இந்திய பொருளாதாரமும் எத்தகைய சீரழிவை சந்தித்து வந்தனவோ, அவை இப்போதும் தொடர்கின்றன. இவற்றை சரி செய்யாமல் தங்களின் சொந்த செயல்திட்டத்தை நிறைவேற்ற முயல்வது நல்லதல்ல.

2014 மக்களவைத் தேர்தலுக்கான பாரதிய ஜனதாவின் தேர்தல் அறிக்கையில்,‘‘ இந்தியாவில் பல்வேறு மதங்களிடையே நல்லிணக்கத்தையும், நம்பிக்கையையும் வளர்ப்பதற்காக பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட ஆலோசனை அமைப்பு ஏற்படுத்தப்படும்  (Facilitate the setting up of a permanent Inter-faith Consultative mechanism to promote harmony and trust, under the auspices of religious leaders)’’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போது அதற்கு நேர் எதிரான செயல்கள் தான் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இந்து அமைப்புகள் கட்டாய மத மாற்றத்தில் ஈடுபடுவதை தடுக்க வேண்டாமா? என கேட்டால், இனி இப்படி நடக்காமல் தடுக்க கட்டாய மதமாற்றத் தடை சட்டத்தை கொண்டு வரலாம் என்று மத்திய அரசு கூறுகிறது. இதன்மூலம் தங்களின் இன்னொரு செயல்திட்டத்திற்கு உயிர் கொடுக்க பா.ஜ.க முயல்வது கண்டிக்கத்தக்கது.

கட்டாய மத மாற்றத் தடை சட்டம் கொண்டு வரப்பட்டால் அது சிறுபான்மையினருக்கு எதிராக தவறாகப் பயன்படுத்தப்படும் ஆபத்து இருக்கிறது. எனவே, மதமாற்றத் தடை சட்டம் கொண்டு வரும்  முயற்சிகளை கைவிட்டு, இந்திய தண்டனைச் சட்டத்தின் 153(ஏ) பிரிவைப் பயன்படுத்தி மதமாற்றங்களைத் தடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, கிறித்துமஸ் கொண்டாட்டங்களைத் தடுப்பது உள்ளிட்ட இந்துத்துவா செயல்திட்டங்களை கைவிட்டு, இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார். 

Friday, December 19, 2014

வெட்கமின்றி பேசும் ராஜபக்சே; இனப்படுகொலையை உலகத் தமிழர்கள் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள்; ராமதாஸ்

வெட்கமின்றி பேசும் ராஜபக்சே; இனப்படுகொலையை உலகத் தமிழர்கள் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள்; ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்

இலங்கை அதிபர் தேர்தலையொட்டி முல்லைத்தீவு மாவட்டத்தில் பரப்புரை மேற்கொண்ட இனப் படுகொலையாளன் இராஜபக்சே, கடந்த காலங்களில் நடந்ததை தமிழர்கள் மறந்துவிட வேண்டும்; இலங்கையின் வளர்ச்சிக்காக ஒன்றுபட்டு பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இலங்கை அதிபராக இரு முறை பதவி வகித்து இப்போது மூன்றாவது முறையாக அப்பதவியை கைப்பற்றத் துடிக்கும் ராஜபக்சேவின் இந்தப் பேச்சு அவரது ஆணவத்தையும், தமிழர்களை மிரட்டும் மனப்பான்மையையும் தான் காட்டுகிறது. அதுமட்டுமின்றி, ஈரான், லிபியா, எகிப்து ஆகிய நாடுகளில் நடந்தது போன்ற மக்கள் புரட்சியை ஒருபோதும் இலங்கையில் அனுமதிக்கப் போவதில்லை என்றும் அச்சுறுத்தும் தொனியில் பேசியிருக்கிறார். 

தமிழர்களுக்கு ஒருபோதும் சம அதிகாரமும், சம உரிமையும் வழங்க முடியாது என்பதை பல்வேறு தருணங்களில் தெளிவுபடுத்தியுள்ள இராஜபக்சே, இப்போது இப்படி கூறுவதன் மூலம் எந்த உரிமையும் இல்லாத அடிமைகளாக வாழப் பழகிக் கொள்ளுங்கள்; ஆட்சியாளர்களுக்கு எதிராகவோ, உரிமைகளைக் கோரியோ போராட நினைக்காதீர்கள் என்பதை மறைமுகமாக உணர்த்தியிருக்கிறார். மகிந்த இராஜபக்சேவின் இந்த அணுகுமுறை கண்டிக்கத்தக்கது.

துரோகங்களையும், சதிகளையும் மன்னித்து, மறப்பது தான் தமிழர்களின் குணம் ஆகும். ஆனால், ஈழத் தமிழர்களுக்கு இராஜபக்சே செய்த கொடுமைகள் கற்பனை செய்துபார்க்க முடியாதவை. ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்களை கொடூரமான முறையில் படுகொலை செய்ததுடன், போரில் தப்பிய மூன்றரை லட்சம் தமிழர்களை முகாமுக்குள் அடைத்து வைத்து கண்ணியமான வாழ்க்கையை வாழ விடாமல் தடுத்தவன் தான் இந்த இராஜபக்சே. போர் முடிந்து ஐந்தரை ஆண்டுகள் ஆன போதிலும் தமிழர்கள் இயல்பான வாழ்க்கையை வாழ முடியவில்லை. ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு இராணுவ வீரரை நிறுத்தி அச்சுறுத்துதல், தமிழ் பெண்களை பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்குதல், கட்டாயக் கருக்கலைப்பு மற்றும் கருத்தடை செய்தல் என இன அழிப்பில் எத்தனை வகை உண்டோ அத்தனையையும் செய்து கொண்டிருக்கிறது இராஜபக்சே தலைமையிலான சிங்கள பேரினவாத அரசு.

ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை ஒட்டுமொத்த இலங்கையும் தமிழர்களின் தாயகமாக இருந்தது. அதை சிங்களர்கள் நயவஞ்சகமாக தங்களுடையதாக்கிக் கொண்டனர். அதன்பிறகும் இலங்கையின் வளர்ச்சிக்காக எண்ணற்ற பங்களிப்பை தமிழர்கள் செய்தனர். ஆனால், இதற்கெல்லாம் பரிசாக தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக்கி கொக்கரித்து கொண்டிருக்கின்றனர் சிங்களர்கள். இதையெல்லாம் மறந்துவிட்டு தமக்கு வாக்களிக்கும்படி இராஜபக்சே வெட்கமின்றி கோருகிறார். 

கடந்த தேர்தலில் தமிழர்களை படுகொலை செய்ததை சாதனையாக கூறி சிங்கள இன உணர்வுகளை தட்டி எழுப்பி வெற்றி பெற்ற அவர், இம்முறை தமிழர்களை நயவஞ்சக வலையில் வீழ்த்தி வெற்றி பெறத் துடிக்கிறார். இந்த வலையில் ஈழத் தமிழர்கள் வீழ மாட்டார்கள். அதேபோல், தமிழினத்திற்கு இராஜபக்சே செய்த இனப்படுகொலை உள்ளிட்ட கொடுமைகளை ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல.... உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஒருபோதும் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள். இலங்கை இனப் படுகொலைக்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தரும் வரையில் ஓய மாட்டார்கள்.

ஒன்றரை லட்சம் தமிழர்களின் படுகொலைக்கு நீதி கேட்டு போராடும் தமிழர்களுக்கு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் ஆதரவுக் கரம் கொடுக்க வேண்டும். இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பாக நடத்தப்படும் ஐ.நா. மனித உரிமை ஆணைய விசாரணைக்கு இந்தியாவும், மற்ற நாடுகளும் உதவி செய்ய வேண்டும். தமிழீழ கோரிக்கை குறித்து உலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற தமிழர்களின் விருப்பத்தையும் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார். 

நீதித்துறையை அவமதித்த ஜெயலலிதா வழக்கு விரைந்து விசாரணை: சட்டத்தின் முன் அனைவரும் சமம் தானா? ராமதாஸ் கேள்வி!

 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வருவாய்க்கு மீறி ரூ. 66.65 கோடி சொத்துக் குவித்த வழக்கில் தமிழக முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க பொதுச் செயலருமான ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து  பெங்களூர் தனி நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. இவ்வழக்கில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட பிணையை மேலும் 4 மாதங்களுக்கு நீட்டித்துள்ள உச்சநீதிமன்றம்,  ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனுவை 3 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும்; இதற்காக சிறப்பு அமர்வு ஒன்றை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என்று கர்நாடக மாநில உயர்நீதிமன்றத்திற்கு ஆணையிட்டிருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு பெரும் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்திய நீதித்துறை வரலாற்றில் இதற்கு முன் இப்படி ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை. கடந்த காலத்தில் இதேபோன்ற கோரிக்கை ஜெயலலிதா தரப்பில் முன்வைக்கப்பட்டபோது அதை உச்சநீதிமன்றம் நிராகரித்த வரலாறு உள்ளது. டான்சி வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப் பட்டதால் 2001 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயலலிதாவால் போட்டியிட இயலவில்லை. ஆனாலும், சட்டப்பேரவை உறுப்பினராக இல்லாமலேயே முதலமைச்சராக பதவியேற்ற ஜெயலலிதா, தாம் முதலமைச்சர் பதவியில் நீடிக்க வேண்டுமானால் 2001 நவம்பர் 13 ஆம் தேதிக்குள் சட்டப்பேரவை உறுப்பினராக வேண்டும்; அதற்கு வசதியாக டான்சி வழக்கில் தமது மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றத்திற்கு ஆணையிட வேண்டும் என்று அந்த ஆண்டு செப்டம்பர் 7, 14 ஆகிய தேதிகளில் இரு முறை மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால், அப்படியெல்லாம் ஆணையிட முடியாது என நீதிபதி எஸ்.பி.பரூச்சா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு  கூறிவிட்டது.

அதேபோல், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது நிலுவையிலுள்ள கிரிமினல் வழக்குகளை ஓராண்டுக்குள் விசாரித்து முடிக்க உச்சநீதிமன்றம் உதவ வேண்டும் என்று கடந்த ஜூன் 11 ஆம் தேதி பிரதமர் நரேந்திரமோடி கேட்டுக் கொண்டார். ஆனால், இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்ட அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா,‘‘ சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கைகள்  முன்வைக்கப்படுகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பதற்காக அவர்கள் மீதான வழக்குகளை விரைவாக நடத்தினால், அதன்காரணமாக ஏற்கனவே நிலுவையில் உள்ள மற்ற வழக்குகள் பாதிக்கப் படும். குறிப்பிட்ட சிலரின் வழக்குகளை விரைவாக நடத்துவதை விட அனைத்து வழக்குகளையும் விரைந்து விசாரிப்பதற்கான நடைமுறையை உருவாக்குவது தான் சிறந்தது’’ என்று தெரிவித்திருந்தார்.

இத்தகைய சூழலில் ஜெயலலிதாவுக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்? என்பது தான் மக்கள் மனதில் எழுந்துள்ள மிகப்பெரிய வினாவாகும். ஊழல் வழக்குகள் விரைந்து விசாரித்து முடிக்கப்பட வேண்டும் என்ற நல்ல நோக்கம் கூட இதற்கு காரணமாக இருந்திருக்கலாம். ஆனால், இந்த நல்ல நோக்கத்தைக் காட்டுவதற்குக் கூட இவ்வழக்கு தகுதியற்றது என்பது தான்  மக்களின் கருத்தாகும். அதிகபட்சமாக ஓராண்டிற்குள் விசாரித்து முடிக்கப்பட வேண்டிய சொத்துக் குவிப்பு வழக்கை 17 ஆண்டுகளுக்கு இழுத்தடித்தவர் ஜெயலலிதா. இல்லாத காரணங்களைக் கூறி வழக்கு விசாரணையின்போது  185 முறை வாய்தா வாங்கியவர் ஜெயலலிதா. விசாரணை நீதிமன்ற நீதிபதி தொடங்கி உச்சநீதிமன்ற நீதிபதிகள் வரை அனைவரையும் தமது வாய்தா அணுகுமுறையால் வெறுப்பேறியவர் ஜெயலலிதா. இப்படிப்பட்ட ஜெயலலிதா அவரது சொந்த நலனுக்காக மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என்று கோரும்போது, உச்சநீதிமன்றத்திற்கு அதை ஏற்க வேண்டிய தேவை என்ன? என்பது தான் என்னைப் போன்றவர்களின் மனதில் எழும் வினா.

ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் தண்டனைக் காலம் முடிந்த பிறகும் 6  ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்று சட்டம் கொண்டுவரப்பட்டதன் நோக்கமே, அரசியல்வாதிகள் பதவியில் இல்லாமல் இருந்தால் தாங்கள் செய்த தவறுகளுக்காக வருந்த  வாய்ப்பு கிடைக்கும் என்பது தான். சிறையில் அடைக்கப்படுவதை விட, தமிழ்நாட்டை ஆளுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் தம்மிடம் இருக்கும் போதிலும் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டதால், ஆட்சி செய்யும் வாய்ப்பை பயன்படுத்த முடியாமல் முடங்கிக் கிடப்பது தான் ஜெயலலிதாவுக்கு கிடைத்துள்ள பெரிய தண்டனை ஆகும். தேர்தலில் வென்றும் முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதன் மூலம் இந்த தண்டனையை தான் இப்போது ஜெயலலிதா அனுபவித்து வருகிறார். பல்வேறு வகையான குற்றங்களைச் செய்தவர்கள் போதிய ஆதாரங்கள் இல்லாததைக் காரணம் காட்டி விடுவிக்கப்பட்டாலும் கூட, அவர்கள் வழக்கு விசாரணைக்காக அலைந்தது, விசாரணைக் காலத்தில் ஏற்பட்ட மன உளைச்சல் ஆகியவையே அவர்களுக்கு தார்மீக தண்டனையாக அமைந்து விடும். ஆனால், இந்திய நீதி வழங்கும் அமைப்பையே கேலிக்கூத்தாக்கிய ஜெயலலிதா இந்த தார்மீக தண்டனையை கூட அனுபவிக்காமல் தவிர்க்க வேண்டுமா?

உச்சநீதிமன்றத்தில் 64,919 வழக்குகள் உட்பட நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் மொத்தம் 3.15 கோடி வழக்குகள் பல ஆண்டுகளாக தேங்கிக் கிடக்கின்றன. காவிரிப் பிரச்சினை தொடர்பான வழக்குகளில் 40 ஆண்டுகளுக்கு மேலாகியும் தீர்வு ஏற்படவில்லை. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்காக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரும் மனு மீதான விசாரணை விரைவுபடுத்தப்படவில்லை. செய்யாத குற்றத்திற்காக 24 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7 பேரும் தண்டனைக் காலம் முடிவடைந்த பிறகும் விடுதலை செய்யப்படாதது குறித்த வழக்கின் விசாரணை விரைவுபடுத்தப்படவில்லை. எந்தத் தவறும் செய்யாத லட்சக்கணக்கானோர்  விசாரணைக் கைதிகளாகவே தண்டனைக் காலத்தை விட அதிக காலம் சிறையில் வாடும் சோக வரலாறு நம்முன் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் ஊழல் குற்றவாளி ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனுவை மட்டும் விரைந்து விசாரித்து முடிப்பதன் மூலம் நாட்டுக்கு என்ன நன்மை ஏற்பட்டுவிடப் போகிறது? என்பது தான் தெரியவில்லை.

சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற போது, அதை 3 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என்று ஆணையிடாத நீதிமன்றம் இப்போது மட்டும் அவசரம் காட்டுவது ஏன்? என்ற வினா மக்களிடையே எழுந்துள்ளது. தாமதிக்கப்பட்ட நீதி... மறுக்கப்பட்ட நீதி என்பதைப் போல, அவசரம் காட்டப்படும் நீதி..... புதைக்கப்பட்ட நீதி என்பதை உச்சநீதிமன்றம் கருத்தில் கொள்ளாதது ஏன் எனத் தெரியவில்லை. அதுமட்டுமின்றி, இந்த வழக்கை இரு மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும்; அடுத்த ஒரு மாதத்தில் தீர்ப்பளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியிருப்பது இவ்வழக்கை விசாரிக்கவிருக்கும் நீதிபதிகள் மீது ஒருவிதமான அழுத்தத்தை ஏற்படுத்தும். மேலும் ஜெயலலிதாவின் பிணை மனுவை முடித்து வைக்காமல் இன்னும் ஆய்விலேயே வைத்திருப்பதும் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஹரியானாவில் ஆசிரியர் நியமன ஊழலில் தண்டிக்கப்பட்ட அம்மாநில முன்னாள் முதலமைச்சர் ஓம்பிரகாஷ் சவுதாலாவுக்கு 123 நாட்களுக்கு பிறகு தான் பிணை வழங்கப்பட்டது. கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட பிகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் 75 நாட்களுக்கு பிறகே பிணையில் விடுதலையாக முடிந்தது. இவர்களின் மேல்முறையீட்டு மனுக்களை விரைந்து விசாரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, பிணை விதிகளை மீறியதாகக் கூறி ஓம்பிரகாஷ் சவுதாலா மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். ஆனால்,  நீதித்துறையை அடுத்தடுத்து அவமதித்த ஜெயலலிதாவுக்கு நிபந்தனைகளே இல்லாமல் இடைக்கால பிணை வழங்கப்படுகிறது; அவர் கோரியவாறு மேம்முறையீட்டு மனு மீதான விசாரணையை விரைந்து முடிக்க வாய்ப்பளிக்கப்படுகிறது. இவற்றையெல்லாம் பார்க்கும்போது ‘‘ சட்டத்தின் முன் அனைவரும் சமம் தானா?’’ என்ற வினா சாமானியர் மனதில் மீண்டும் மீண்டும் எழுவதை தவிர்க்க முடியவில்லை. இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார். 

Wednesday, December 17, 2014

வேலூர் அருகே கொலை செய்யப்பட்ட மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்; ராமதாஸ் பேட்டி

 

பா.ம.க.வின் சேலம் மாவட்ட ஆலோனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக புதன்கிழமை காலை சேலம் வந்த அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சுப்ரமணிய கவுண்டர் திருமண மண்டபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, தமிழகத்தில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகள் அல்லாத ஒரு கூட்டணிக்கு தலைமை ஏற்கும் தகுதி பா.ம.க.விற்கு மட்டுமே உண்டு. மேலும், வாக்குகளை விலைக்கு வாங்கி மது மற்றும் ஊழலை மையமாக கொண்டு ஆட்சி நடத்தும் இந்த இரு கட்சிகளோடு கூட்டணி வைப்பதை அவமானமாக கருதுவதாகவும் தெரிவித்த ராமதாஸ் ஏற்கனவே கூட்டணி வைத்ததற்காக தமிழக மக்களிடம் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டுள்ளதாக  தெரிவித்தார்.

பா.ம.க தலைமையில் அமையும் கூட்டணி வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மது மற்றும் ஊழலுக்கு எதிரான விஷயங்களை முன்வைத்து பிரசாரம் செய்ய உள்ளதாக ராமதாஸ் கூறினார்.

தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வண்கொடுமை அதிகரித்துள்ளதாக தெரிவித்த அவர், கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் 2835 பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளதாகவும், 5432 பெண்கள் மானபங்கபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

காவல்துறையினரின் பொறுப்பின்மையால் ஒவ்வொரு 2 நாட்களுக்கும், 5 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாகவும், 9 பெண்கள் மானபங்கப் படுத்தப்படுகின்றனர். குடியாத்தத்தில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூபாய் 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதை கட்டுப்படுத்த தமிழக அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டிய அவர் பெண் பாதுகாப்பிற்காக கூடுதல் பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டு பள்ளி, கல்லூரி மற்றும் பேருந்து நிலையங்களில் சாதாரண உடையுடன் கண்காணிப்பை மேற்கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தினார்.

கிரானைட் ஊழலை விசாரிக்கும் சகாயம் குழுவிற்கு விடுக்கப்பட்டுள்ள மிரட்டலை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், அரசு பணியாளர் நியமனம் பெரியார் பல்கலை கழகத்தில் பணிநியமனம் போன்றவற்றில் லட்சக்கணக்கான ரூபாய் பேரம் பேசப்படுவதாக எழுந்துள்ள குற்றசாட்டு ஆகியவை குறித்தும் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தினார்.

தமிழக அரசு கடந்த மூன்று ஆண்டுகளில் ஒவ்வொரு தனிநபர் தலையிலும் 24,711 ரூபாய் கடன் சுமையை சுமத்தியுள்ளது. தேவைக்கு அதிகமாக கடன் வாங்கி குவிக்கிறது என்றும் அவர் மாநில அரசை குற்றம் சாட்டினார்.

Tuesday, December 16, 2014

பாமக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர், கூட்டணி கட்சிகளின் பெயர் பட்டியல் ஜனவரியில் வெளியிடுவோம்: ராமதாஸ்



பாமக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர்,  கூட்டணி கட்சிகளின் பெயர் பட்டியல் ஜனவரியில் வெளியிடுவோம்: ராமதாஸ்
ஈரோட்டில் நடைபெற்ற ஒருங்கிணைந்த மாவட்டப் பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்க வந்த பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,  ’’காவிரியின் குறுக்கே கர்நாடகமும், பாம்பாற்றின் குறுக்கே கேரளமும் முயற்சி செய்து வருவதை மத்திய அரசு தடுக்க வேண்டும். அமராவதி நதியின் கிளை நதியான பாம்பாற்றின் குறுக்கே பட்டுச்சேரி என்னும் இடத்தில் அணை கட்டுவதற்கான அடித்தளம் அமைக்க மத்திய புவியியல் வல்லுநர் குழு அனுமதி அளித்துள்ளது கண்டிக்கத்தக்கது.

புதிய அணை கட்டப்பட்டால் திருப்பூர், கரூர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த பாமக தயாராகி வருகிறது.இந்திய அளவில் தமிழகத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 4.7 சதவீதமாக கடைசி இடத்தில் உள்ளது. தமிழகத்தில் தொழில்வளர்ச்சி, வேளாண் வளர்ச்சி இறங்குமுகமாக இருந்து வருகிறது. மின்வெட்டு காரணமாக தமிழகத்தில் இருக்கும் தொழில்நிறுவனங்கள், பிற மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றன.

2016-ம் ஆண்டில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த திமுக, அதிமுக இல்லாத மாற்று அணியை பாமக உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. ஏற்கெனவே, சில கட்சிகள் எங்களுடன் இணைந்துள்ளன. மேலும் சில கட்சிகளுடன் தொடர்பில் இருந்து வருகிறோம்.பாமக தலைமையை ஏற்றுக்கொண்டால் பாஜக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளை கூட்டணியில் சேர்த்துக்கொள்வோம். மது, ஊழல் ஆகியவற்றை எதிர்த்து தான் புதிய கூட்டணி உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வடமாவட்டங்களில் மட்டுமன்றி மேற்கு, தென்மாவட்டங்களிலும் பாமக வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த பேரவைத் தேர்தலில் தென்மாவட்டங்களில் கோவில்பட்டி, சோழவந்தான், ஆலங்குடி, திண்டுக்கல் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டோம். மேற்கு மாவட்டங்களில் பவானி, அந்தியூர், தாராபுரம் தொகுதிகளில் ஏற்கெனவே பாமக போட்டியிட்டுள்ளது.

பாமக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர், கூட்டணி கட்சிகளின் பெயர் பட்டியலை ஜனவரியில் வெளியிடுவோம். மக்களவைத் தேர்தலை போலவே, சட்டப்பேரவைத் தேர்தலிலும் முன்கூட்டியே வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பிரசாரத்தை தொடங்குவோம்.

தமிழகத்தில் ஆசிரியர் பணியிட மாறுதலில் நடந்துள்ள ஊழலை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். தமிழகத்தில் 2014–15ம் ஆண்டுக்கான கரும்பு அரவை பருவம் பல வாரங்களுக்கு முன்னரே தொடங்கி விட்டது. ஆனால் கரும்புக்கான கொள்முதல் விலையை தமிழக அரசு இதுவரை அறிவிக்கவில்லை.

 2013–14–ம் ஆண்டில் ஒரு டன் கரும்பு கொள்முதல் விலை ரூ.2250 ஆக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த தொகையை தனியார் சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு முழுமையாக வழங்கவில்லை. இதுவரை தனியார் ஆலைகள் விவசாயிகளுக்கு ரூ.700 கோடி கரும்பு பாக்கி தொகை வைத்துள்ளது. கரும்பு சாகுபடி செலவு மற்றும் கூலி உயர்ந்துள்ளதால் இந்த ஆண்டு கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.இதேபோல் மஞ்சள் கொள்முதலை தமிழக அரசு நேரிடையாக செய்ய வேண்டும். மஞ்சளுக்கு குறைந்தபட்சம் ரூ.15 ஆயிரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Sunday, December 14, 2014

மாற்று அணிக்கு முயற்சித்து வருகிறோம்... டாக்டர் ராமதாஸ்

கிருஷ்ணகிரி: 2016ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் மாற்று அணியை அமைத்து மக்களை சந்திக்க பாமக முயற்சித்து வருவதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

 
கிருஷ்ணகிரிக்கு வந்த டாக்டர் ராமதாஸ் அங்கு மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.செய்தியாளர்களிடம் ராமதாஸ் பேசுகையில், பா.ம.க. தலைமையில் 2016-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அரசியல் மாற்றத்திற்கான அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். மது, ஊழல் ஒழிப்பு ஆகியவற்றை முன் நிறுத்தி பிரசாரம் செய்வோம்.தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்திட வேண்டும். இதன் மூலம் ஒவ்வொரு சமுதாயத்தையும் பொருளாதாரத்தில் முன்னேற்ற முடியும். பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டாம் என எங்கும் கூறவில்லை. பெண்களுக்கு திருமண வயது 21 என நிர்ணயம் செய்ய வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பிற்கு பின் பெற்றோர் சம்மதத்துடன் பெண்கள் தங்களது வாழ்க்கையை அமைத்து கொள்ள வேண்டும்.கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் காந்தலூர் பட்டுசேரி பகுதியில் பாம்பாற்றின் குறுக்கே 3 டி.எம்.சி. தண்ணீரை தேக்கி வைக்க புதிய தடுப்பணை கட்ட மத்திய புவியியல்துறை அனுமதி அளித்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பே இதை கண்டித்து திருப்பூர் மாவட்டத்தில் பா.ம.க. ஆர்ப்பாட்டம் நடத்தியது. புதிய தடுப்பணை கட்ட அனுமதிக்கக் கூடாது.கடந்த 2003-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின் போது பஸ் நிறுத்தங்களில் நிழற்குடைகள் அமைத்து விளம்பரம் செய்வது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கும், சில தனியார் நிறுவனங்களுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தில் நிதி சீர்கேடு நடந்துள்ளது. இது போக்குவரத்து கழக பொருளாதாரத்தில் அமிலத்தை ஊற்றி அழிக்கும் செயலாகும். உச்சநீதிமன்றம் வெளிப்படையான நடைமுறை இல்லை என கூறி இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது. இது அ.தி.மு.க. ஆட்சியில் ஊழல் அதிகரித்துள்ளதற்கு ஒரு உதாரணமாகும்.மத்திய அரசு தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை முடக்கக்கூடாது. தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் இத்திட்டத்தின் மூலம், கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு அதிகரித்து, வறுமை குறைந்துள்ளது. இத்திட்டத்தை வேளாண், விவசாய பணிகளுக்கும் விரிவுப்படுத்த வேண்டும்.தமிழ் தாத்தா என்று அழைக்கப்படும் உ.வே.சாமிநாத அய்யர் சென்னை திருவல்லிக்கேணியில் வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக அறிவித்து பராமரிக்க வேண்டும் என்று பா.ம.க. கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அந்த வீடு இடிக்கப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது என்றார் ராமதாஸ்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/pmk-attempts-make-3rd-front-says-dr-ramadoss-216978.html?utm_source=article&utm_medium=fb-button&utm_campaign=article-fbshare

Wednesday, December 10, 2014

ஆண்கள் சினிமா மோகத்தில்.. பெண்கள் சீரியல் மோகத்தில்: அய்யகோ! ராமதாஸ் வேதனை!

சென்னை: சினிமா மோகத்தில் இளைஞர்களும், சீரியல் மோகத்தால் பெண்களும் சீரழிந்து வருவதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேதனைப்பட்டு பேசியுள்ளார்.படித்து முடித்து வேலைக்கு போன பிறகு, காதல் தானாக மலர்ந்தால் மலர்ந்து விட்டு போகட்டும்' என்று, இதுவரை காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ராமதாஸ் தற்போது பச்சைக்கொடி காட்டியுள்ளார்.வழக்கமாக திருமண நிகழ்ச்சிகளுக்கு போனால் காதல் திருமணங்களுக்கு எதிராகவே பேசி பேசி அலுத்துப்போனதாலோ என்னவோ இம்முறை சினிமாவையும் சீரியலையும் ஒருபிடி பிடித்துவிட்டார் ராமதாஸ்செய்யாறில், விஸ்டம் கல்வி குழும பொதுச் செயலாளர் தவமணி - சரஸ்வதி தம்பதியரின் மகன் டி.அருணகிரி எஸ்.கல்பனா ஆகிய மணமக்களின் திருமண வரவேற்பு விழாவில் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்திய டாக்டர்.ராமதாஸ் மது, காதல், என்று வழக்கம்போலவே பேச்சை தொடங்கினார். அவரது பேச்சை மேற்கொண்டு படியுங்களேன்.இலவசங்களும் மதுவும்தமிழகத்தில் உள்ள குடிப்பழக்கம் சமுதாயத்தை, குடும்பத்தை சீரழித்து வருகிறது. மது இருக்கும் வரை இலவசங்கள் இருக்கும், இலவசங்கள் இருக்கும் வரை மது இருந்துக் கொண்டே இருக்கும்.மாணவர்களுக்கும் மதுப்பழக்கம்தற்போது மாணவர்கள் மத்தியில் ஒழுக்கம் குறைந்து வருவதை நேரில் காணமுடிகிறது. 13 வயதில் மது குடித்துவிட்டு பள்ளிக்கு வரும் அவல நிலை தமிழகத்தில் அதிகரித்து உள்ளது. இதற்கு காரணமாக இருப்பது பள்ளிகளில் நன்னறிவு அளிக்ககூடிய முறையான நீதி போதனை வகுப்புகள், உடற்பயிற்சிகள் இல்லை.சினிமாவும் சீரியலும்சினிமா மோகத்தில் இளைஞர்களும், மெகா சீரியல் மோகத்தில் பெண்களும் மூழ்கி சீரழிந்து வருகின்றனர். சமுதாயம் வளர்ச்சி பாதையில் செல்லவில்லை. சமுதாயத்தில் மாற்றம் வேண்டும். பெண்கள் நாட்டு நடப்பை தெரிந்து கொள்ள செய்திகளை பார்க்க வேண்டும்.21 வயதுக்கு மேல் காதலிக்கலாம்இளைஞர்களுக்கு, 21 வயதுக்குள் காதல், கத்தரிக்காய் என்பதெல்லாம் வேண்டாம். அது வாழ்க்கைக்கு உதவாது. படித்து வேலைக்கு போன பிறகு, அது தானாக மலர்ந்தால், மலர்ந்து விட்டு போகட்டும்.ஓடிப் போய் கல்யாணம் செய்து கொண்டால், பெற்றவர்கள் மனம் என்ன பாடுபடும் என்பதை எண்ணி பாருங்கள்.காதல் திருமணங்கள்காதல் திருமணம் என்றால் கூட, பெற்றோரின் சம்மதத்துடன் நடந்தால் தான், அது சிறப்பான மண வாழ்க்கையைத் தரும்.அறியாப் பருவம் கொண்ட, 18 வயதுப் பெண்களை, அவர்களுடைய பெற்றோர் எச்சரிக்கையாக கண்காணிக்க வேண்டும். இளம் வயது ஆண்களும், பெண்களும் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும்; காதலை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். கல்வியே உங்களுக்கு, எல்லா சுகத்தையும் தேடித் தரும் என்று முத்தாய்ப்பாக முடித்தார் ராமதாஸ்.அது சரி அய்யா!ராமதாஸ் ஐயா சொல்வதென்னவோ சரிதான். ஆனால் மக்கள் தொலைக்காட்சியில் நீலாம்பரி என்ற சீரியலும், நீதானே என்ற பொன் வசந்தம் என்ற சீரியலும் யாருக்காக ஒளிபரப்புகின்றனர் என்பதை கூறுவாரா? படிப்பது ராமாயணம், இடிப்பது என்னவோ பெருமாள் கோவிலாகத்தானே இருக்கிறது ஐயாவின் பேச்சு.

திருப்பதியில் தமிழக செய்தியாளர்கள் தாக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது : ராமதாஸ்

 

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:

’’இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த இனப்படுகொலைகாரன் ராஜபக்சே திருப்பதி வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அங்கு நடந்த போராட்டங்கள் குறித்து செய்தி செகரித்த தமிழக செய்தியாளர்களை ஆந்திரக் காவல்துறையினர் கடுமையாக தாக்கி கைது செய்திருக்கின்றனர்.

ராஜபக்சே வருகை மற்றும் போராட்டம் குறித்து செய்தி செகரிக்க தமிழக ஊடகங்களுக்கு முதலில் தடை விதிக்கப்பட்ட நிலையில், அதையும் மீறி தங்களின் கடமையை செய்தவர்கள் மீது இத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. 

போர்க்களங்களில் கூட செய்தியாளர்கள் செய்தி செகரிக்க வசதி செய்து தரப்படும் நிலையில், எவ்வித காரணமும் இல்லாமல் தமிழக செய்தியாளர்களை தாக்கிய ஆந்திர காவல்துறையினரின் நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது. இதற்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது ஆந்திர அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’

Tuesday, December 9, 2014

பாஜக மீதான வைகோவின் குற்றச்சாட்டில் எனக்கும் உடன்பாடு உண்டு: ராமதாஸ்

சென்னை: பாஜவுக்கு எதிரான மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் குற்றச்சாட்டுக்கள் சிலவற்றில் தனக்கும் உடன்பாடு உள்ளதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி மாநிலம் முழுவதும் இன்று பாமகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டார்.அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,மதிமுக உயர் நிலைக் குழு கூடி முடிவு செய்தது அவர்களின் உட்கட்சி விவகாரம். அவர்களுக்கு சரி என்று தோன்றியதை செய்துள்ளனர். பாஜகவுக்கு எதிராக வைகோ தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளில் சிலவற்றில் எனக்கும் உடன்பாடு உண்டு. நானும் பலமுறை விமர்சித்து வருகிறேன். பிரதமர் ஒன்றும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல. விமர்சிப்பதிலும் தவறு ஒன்றும் இல்லை.திமுக கூட்டணியில் பாமக இருக்கையிலே நான் கருணாநிதியை கடுமையாக விமர்சித்துள்ளேன். தவறான முடிவு எடுக்கப்படுகிறது என்றால் கூட்டணி கட்சியானாலும் கடுமையாக விமர்சிப்பேன். ஆனால் அதே சமயம் எனது விமர்சனம் நாகரீகமானதாக இருக்கும் என்றார்.இதையடுத்து செய்தியாளர்கள் கேட்ட கேள்வி, ராமதாஸ் அளித்த பதில் விவரம் வருமாறு,கேள்வி: வரும் சட்டசபை தேர்தலில் எங்கள் கட்சி தலைமையில் தான் கூட்டணி, எங்கள் கட்சிக்காரர் தான் முதல்வர் வேட்பாளர் என்கிறீர்களே, இதை பாஜக ஏற்குமா?பதில்: போகப் போக தெரியும்கேள்வி: உங்களை பற்றி சுப்பிரமணியன் சாமி விமர்சனம் செய்கிறாரே?பதில்: பாஜகவினர் அடக்கத்தோடு பேச வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது பாஜகவில் உள்ள சாமிக்கும் பொருந்தும். இது போன்ற கருத்துகளை தெரிவித்து அவர் சர்ச்சையில் சிக்குவது உண்டு. அவரது கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்க விருப்பம் இல்லை என்றார் ராமதாஸ்.

Monday, December 8, 2014

ஒகேனக்கல்லுக்கு கர்நாடகம் சொந்தம் கொண்டாடுவதா? அன்புமணி

தர்மபுரி: ஒகேனக்கல் பகுதியில் இருந்து ஒரு அடியை கூட விட்டுத்தரமுடியாது என்று தர்மபுரி எம்.பியும், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணித்தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் விழா ஒன்றில் பங்கேற்ற கர்நாடக முதல்வர் சித்தராமையா, "ஒகேனக்கல் எந்த மாநில‌ எல்லையில் அமைந்திருக்கிறது என்பது குறித்து கர்நாடகத்துக்கும், தமிழகத்துக்கும் இடையே பிரச்சினை நீடிக்கிறது. இரு மாநிலங்களுக்கு இடையே 50 ஆண்டுகளுக்கும் மேலாக 68 கிமீ தூரத்துக்கு எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. மத்திய சர்வே ஆணையம் உடனடியாக கர்நாடக-தமிழக எல்லையை மறு வரையறை செய்யும் வகையில் சர்வே மேற்கொள்ள‌ வேண்டும்" என்றும் கூறியுள்ளார்.இதற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், ஒகேனக்கல் பகுதி கர்நாடகத்திற்கு சொந்தம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறி வருகிறார். இரு மாநில உறவுகளை சுமுகமாக நடத்த வேண்டிய பொறுப்பில் இருப்பவர், தேவையற்ற சர்ச்சைகளை கொண்டுவரக்கூடாது.ஒகேனக்கல் தமிழக பகுதி என்று முடிவாகி விட்டது. இதில் மறுஆய்வுக்கு வாய்ப்பு இல்லை. இதுபற்றி எந்த விதமான சர்ச்சையும் புதிதாக கொண்டுவர தேவையில்லை. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.கர்நாடக முதல்வர் மட்டுமின்றி, கர்நாடகத்தின் பிற அரசியல்வாதிகளும் இந்த பிரச்சினையை எழுப்பக்கூடாது. ஒகேனக்கல் என்னுடைய எம்.பி. தொகுதிக்குள் வருகிறது. அங்கு, ஒரு அடியைக்கூட விட்டுத்தர முடியாது என்று கூறியுள்ளார்.
 

Sunday, December 7, 2014

பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்கக் கூடாது : ராமதாஸ்


’’பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:  ’’இந்துக்களின் புனித நூலாக கருதப்படும் பகவத் கீதை இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்கப் படும் வேண்டாம் என்று பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவரும், வெளியுறவு அமைச்சருமான சுஷ்மா சுவராஜ் சுவராஜ் கூறியிருக்கிறார். 

ஒரு தரப்பு மக்களின் விருப்பத்தை ஒட்டுமொத்த இந்தியா மீதும் திணிக்கும் நோக்குடனான சுஷ்மா சுவராஜின் இந்தக் கருத்து கடுமையாக கண்டிக்கத்தக்கது.

தில்லியில் நேற்று நடைபெற்ற பகவத் கீதை தொடர்பான விழாவில் பேசிய விசுவ இந்து பரிசத் அமைப்பின் தலைவர் அசோக் சிங்கால் விடுத்த வேண்டுகோளை ஏற்று இந்த அறிவிப்பை சுஷ்மா வெளியிட்டுள்ளார். 2011 ஆம் ஆண்டில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதே இக்கோரிக்கையை நாடாளுமன்றத்தில் எழுப்பிய சுஷ்மா இப்போது தமது கட்சி ஆட்சிக்கு வந்து விட்டதால் அதற்கு செயல் வடிவம் கொடுக்கத் துடிக்கிறார். மதச்சார்பற்ற நாடு என்பதற்கு எடுத்துக்காட்டாகவும், வேற்றுமையில் ஒற்றுமை என்ற தத்துவத்திற்கு இலக்கணமாகவும் திகழும் இந்தியாவில் ஒரு சாராரின் புனித நூலாக கருதப்படும் கீதையை அனைத்துத் தரப்பினர் மீதும் திணிப்பது சரியானதாக இருக்காது.

அனைத்துத் தரப்பினரின் பிரச்சினைகளுக்கும் பகவத் கீதையில் தீர்வு சொல்லப்பட்டிருப்பதால் தான் அதை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று தாம் கூறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பகவத் கீதையில் பல நல்ல கருத்துக்கள் இருப்பதை மறுப்பதற்கானதல்ல. அதே கருத்துக்கள் திருக்குர் ஆனிலும், பைபிளிலும் உள்ளன. கீதை, குரான், பைபிள் ஆகிய மூன்றும் வெவ்வெறு மதங்களை பின்பற்றுபவர்களின் புனித நூலாக இருந்தாலும் அவை ஒரே மாதிரியான பாடங்களைத் தான் போதிக்கின்றன. இந்த சூழலில் கீதையை தேசிய நூலாக அறிவிப்பது, இந்தியாவை இந்து தேசமாக மாற்றும் முயற்சியில் மோடி அரசு ஈடுபட்டிருக்கிறது என்ற வாதத்திற்கு வலு சேர்ப்பதாகவே அமையும்.

உலகப் பொதுமறை என்று போற்றப்படும் திருக்குறளை இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்பதே தமிழர்களின் கோரிக்கையாக உள்ளது. இதை வலியுறுத்தி கடந்த 13.04.2005 அன்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. கீதையுடன் ஒப்பிடும் போது திருக்குறளில் ஏராளமான முற்போக்குக் கருத்துகள் உள்ளன. கல்வி, சுகாதாரம், மனிதநேயம், உணவு முறை, தாய் அன்பு, போர், பெரியோ ரை மதித்தல், ஆட்சி முறை, எதிர்க்கட்சிகளுக்கான இலக்கணம் என திருக்குறளில் இல்லாதது எதுவுமே இல்லை என்னும் அளவுக்கு மனித வாழ்வுக்குத் தேவையான அனைத்தும் உள்ளன. ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை’ என்ற ஒன்றே முக்கால் அடியில் உலகப் பொதுவுடமைக் கொள்கையை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் இந்த உலகிற்கு வடித்துக் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார்.

’கடமையை செய்... பலனை எதிர்பாராதே’ என்ற நிலக்கிழாரியக் கொள்கையை பகவத் கீதை வலியுறுத்துகிறது. ஆனால், திருக்குறளோ,‘‘தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்த கூலி தரும்’’ என்று எந்த முயற்சிக்கும் பயன் உண்டு என்ற நம்பிக்கையை விதைக்கிறது. ‘‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது... எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது... எது நடக்குமோ அதுவும் நன்ற�® �கவே நடக்கும்’’ என்று கூறுவதன் மூலம் விதிப்பயனை நம்ப வேண்டும் என்று கீதை போதிக்கிறது. ‘‘ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர்’’ என்பதன் மூலம் சோர்வின்றி உழைத்தால் விதியையும் வெற்றி கொள்ளலாம் என்கிறது திருக்குறள். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பகுத்தறிவையும் போதித்த திருக்குறளுக்கு மட்டுமே இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்கப்படும் தகுதி உள்ளது.
மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற பின்னர் கடந்த 6 மாதங்களில் போற்றத்தக்க வகையில் எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. மாறாக மொழித் திணிப்பு மற்றும் கலாச்சாரத் திணிப்பு மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. ஒருபுறம் கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று சுஷ்மா கூறும் நிலையில், இன்னொருபுறம் தமிழகத்தில் உள்ளவர்கள் அனைவரும் இந்தி கற்றுக்கொளள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்.

 மொழித்திணிப்பையும், கலாச்சாரத் திணிப்பையும் தமிழகம் மட்டும் தான் கடுமையாக எதிர்க்கிறது என்பதால் ஒரு புறம் திருவள்ளுவரின் பிறந்த நாள் வட இந்திய பள்ளிகளில் கொண்டாடப்படும் என்று அறிவித்துவிட்டு, அதற்கான கொண்டாட்டங்களில் தமிழ்நாட்டு மக்கள் ஈடுபட்டிருக்கும் போது கீதையை தேசிய நூலாக அறிவிக்கத் துடிப்பது மோசடி அரசியலக்க பார்க்கப்படும். எனவே, கீதையை தேசிய நூலாக அறிவிப்பதை கைவிட்டு திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’

Saturday, December 6, 2014

ராஜபக்சே திருப்பதி வர அனுமதிக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்

சென்னை: இலங்கையில் ஆயிரக்கணக்கான இந்து ஆலயங்களை இடித்து தரைமட்டமாக்கிய அந்நாட்டு அதிபர் ராஜபக்சே திருப்பதி வர அனுமதிக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,இலங்கையில் லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படுவதற்கு காரணமான இலங்கை அதிபர் ராஜபக்சே டிசம்பர் 9-ஆம் தேதி திருப்பதி வெங்கடாஜலபதி ஆலயத்துக்கு வர இருப்பதாகவும், அடுத்த நாள் காலை சுவாமி தரிசனம் செய்ய இருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.ஈழத்தில் 2,000-க்கும் அதிகமான இந்து ஆலயங்களை இடித்து தரைமட்டமாக்கிய அவரை திருப்பதி ஆலயத்தில் மரியாதையுடன் வரவேற்பது சாத்தானுக்கு சாமரம் வீசுவதற்கு இணையான செயலாகும். தமிழர்களின் உணர்வுகளை இதைவிட மோசமாக யாராலும் புண்படுத்த முடியாது.அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா என தமிழர்கள் அதிகம் வாழக்கூடிய நாடுகளில் சுதந்திரமாக நடமாட முடியாத ராஜபக்சே நினைத்தபோதெல்லாம் இந்தியா வந்து செல்ல மத்திய அரசு அனுமதிப்பது சரியல்ல. எனவே, அவர் திருப்பதி வர அனுமதிக்கக் கூடாது என் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

 

Friday, December 5, 2014

அரசுப் பள்ளி சிறப்பாசிரியர்களை நியமிக்க தகுதித் தேர்வு கூடாது: ராமதாஸ்

 

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

அரசு பள்ளிகளில் சிறப்பாசிரியர் நியமனம் தகுதித் தேர்வின் அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ளப் படும்; வேலைவாய்ப்பக பதிவு மூப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் இந்நடவடிக்கை ஏழை, கிராமப்புற பட்டதாரிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகும்.

தமிழ்நாட்டில் அரசு நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில்  6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு உடற்கல்வி, இசை, தையல், ஓவியம் ஆகிய  கலைகளை கற்றுத்தருவதற்காக சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இப்பணியிடங்கள் உருவாக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை வேலைவாய்ப்பக பதிவு மூப்பின் அடிப்படையில் தான் சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் கடந்த 17.11.2014 ஆம் ஆண்டு தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ள அரசாணையில் இனி சிறப்பாசிரியர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தான் நியமிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 தமிழக அரசின் இந்த புதிய நிலைப்பாடு சமூகநீதிக்கு எதிரானது. இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களை  தகுதித்தேர்வின் மூலம் நியமிப்பதே தவறானது என்ற கருத்து கல்வியாளர்கள் மற்றும் சமூகநீதியாளர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இந்த நிலையில் சிறப்பாசிரியர்களையும் தகுதித்தேர்வின் மூலம் நியமிக்க துடிப்பது சரியானதல்ல. 

இதன்மூலம் சிறப்பாசிரியர்களுக்கான கல்வித் தகுதி பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு பத்து ஆண்டுகளுக்கு மேலாக காத்திருப்பவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். நீண்டகாலமாக வேலைக்காக காத்திருப்பவர்களும், தமிழக அரசால் கடந்த 2012 ஆம் ஆண்டில் பகுதி நேர சிறப்பாசிரியர்களாக நியமிக்கப்பட்ட 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரில் பெரும்பாலானோரும் 40 வயதைக் கடந்தவர்கள் ஆவர். 

இவர்களாலும், கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்களாலும் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையிலான தகுதித் தேர்வை எழுதி தேர்ச்சி பெறுவது கடினமானதாகும். 

அதுமட்டுமின்றி, ஆசிரியர் பணியிலிருந்து சிறப்பாசிரியர் பணி பல வழிகளில் மாறுபட்டதாகும். ஆசிரியர் பணி என்பது ஏட்டுக் கல்வியை மாணவர்களுக்கு கற்பிப்பதாகும். ஆனால், சிறப்பாசிரியர் பணி என்பது கலையை பயிற்றுவிப்பதாகும். இப்பணிக்கு கலை அறிவும், கற்பிக்கும் திறனும் தான் மிகவும் முக்கியமானது ஆகும். இவற்றைத் தகுதித் தேர்வின் மூலம் அளவிட முடியாது என்பதைக் கூட உணராமல் இந்த முடிவை தமிழக அரசு எடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது. 

மதுரை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் காரணமாகவே இந்த தேர்வுமுறை அறிமுகப்படுத்தப்படுவதாக அரசு கூறுவதையும் ஏற்க முடியாது. மதுரை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சமூக நீதிக்கு எதிராக இருப்பதாக கருதினால், உடனடியாக அத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்து நீதியை நிலைநாட்டியிருக்கவேண்டும். 

ஏதேனும் வழக்கில் அரசுக்கு எதிராக தீர்ப்பு வந்தால், அதை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை மேல்முறையீடு செய்யும் தமிழக அரசு, சிறப்பாசிரியர்களுக்கு எதிரான இந்த வழக்கில் மட்டும் அவ்வாறு செய்யாமல், நீதிமன்றத் தீர்ப்பை உடனடியாக செயல்படுத்தியது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

தகுதித் தேர்வுக்கான நேர்காணலுக்கு 5 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த மதிப்பெண்  வழங்கப்படும் விதம் முறைகேடுகளுக்கே வழிவகுக்கும். ஆளுமை மற்றும் தோற்றப்பொலிவுக்கு 1.5 மதிப்பெண் வழங்கப்படும் என்று அரசாணையில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளுமைக்கும், தோற்றப் பொலிவுக்கும் துல்லியமான வரையறை இல்லாத நிலையில், எந்த அடிப்படையில் இதற்கான மதிப்பெண் வழங்கப்படும் என்பது தெரியவில்லை. 

ஆளுங்கட்சிக்கு வேண்டியவர்களுக்கு கூடுதலான மதிப்பெண் வழங்கி, அவர்களை பணியில் அமர்த்தவே இந்த முறை பயன்படும். ஆசிரியர்களுக்கான உடை விதியையும், கண்ணியத்தையும் அப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் கடைபிடித்தாக வேண்டும் என்ற நிலையில், தோற்றப்பொலிவை பார்த்து மதிப்பெண் வழங்கப்போவதாகக் கூறுவது முறையல்ல. 

அறிவுசார்ந்த பணிக்கு புற அழகின் அடிப்படையில் மதிப்பெண் வழங்குவது புனிதமான ஆசிரியர் பணியின் மதிப்பைக் குறைத்துவிடும் என்பதை தமிழக ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். 
இசை, ஓவியம், தையல் போன்ற கலைப்படிப்புகளை படித்த மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, சிறப்பாசிரியர் நியமனத்திற்கான தகுதித் தேர்வு முறையை ரத்து செய்யவேண்டும். 

அரசுப் பள்ளிகளில் 3 ஆண்டுகளாக பணியாற்றி வரும் சுமார் 16,000 பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு உடனடியாக பணிநிலைப்பு வழங்குவதுடன், இனி வரும் காலங்களிலும் வேலைவாய்ப்பக பதிவு மூப்பின் அடிப்படையில்தான் சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்று அரசு அறிவிக்கவேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார். 

Thursday, December 4, 2014

உலகின் ஈடு இணையற்ற மனித உரிமைக் காவலர் கிருஷ்ணய்யர்


 


முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கிருஷ்ணய்யர் மரணத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ள இரங்கல் :

’’உலகின் ஈடு இணையற்ற மனித உரிமைக் காவலரும், நீதியரசருமான வி.ஆர். கிருஷ்ணய்யர் உடல்நலக் குறைவால் கொச்சியில் இன்று காலமானார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சி மற்றும் துயரத்தில் நிலை குலைந்து போனேன்.

கேரள மாநிலம் தலச்சேரியில் பிறந்தாலும் பட்டப்படிப்பையும், சட்டப்படிப்பையும் முறையே அண்ணாமலை பல்கலைக் கழகத்திலும், சென்னை சட்டக் கல்லூரியிலும் தான் கிருஷ்ணய்யர் நிறைவு செய்தார். சுதந்திரத்திற்கு பிறகு 1952ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் தேர்தலில் இப்போது கேரளத்தில் உள்ள குதுபரம்பா தொகுதியிலிருந்து சென்னை மாகாண சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 1957 ஆம் ஆண்டில் கேரளத்தில் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தலைமையில் அமைந்த இந்தியாவின் முதல் இடதுசாரி அரசில் சட்டம், நீதி, மின்சாரம், நீர்ப்பாசனம், உள்துறை, சமூகநலன் உள்ளிட்ட துறைகளின் அமைச்சராக திறம்பட பணியாற்றினார். 

இந்தக் காலகட்டத்தில் மக்கள் நலனுக்கான பல்வேறு சட்டங்கள் நிறைவேற்றப்படுவதற்கு அடிப்படை காரணமாக விளங்கினார். 1965ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் மீண்டும் வழக்கறிஞர் பணியை தொடர்ந்த கிருஷ்ணய்யர் கேரள உயர்நீதிமன்றத்திலும், பின்னர் உச்சநீதிமன்றத்திலும் நீதியரசராக மொத்தம் 12 ஆண்டுகள் பணியாற்றினார்.

 சட்ட ஆணையத்தின் உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். நீதியரசராக பணியாற்றிய காலத்தில் இவர் அளித்த பல்வேறு தீர்ப்புகள் இன்றும் நீதிபதிகளுக்கு வழிகாட்டியாகவும், சட்டப் பணியில் ஈடுபட்டிருப்போருக்கு வேதமாகவும் விளங்குகின்றன. சட்ட ஆணையத்தின் உறுப்பினராக இருந்த போது இவர் அளித்த பரிந்துரைகள் முற்போக்கு சட்டங்கள் இயற்றப்பட காரணமாக அமைந்தன.

உலகில் எங்கு மனித உரிமைகள் மீறப்பட்டாலும் அதற்கு எதிராக குரல் கொடுத்தார்; பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க போராடினார். பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் 2002 ஆம் ஆண்டு எனது தலைமையில் நடத்தப்பட்ட நீர்வளம் தொடர்பான கருத்தரங்கில் கிருஷ்ணய்யர் பங்கேற்றார். 

ஈழத் தமிழர் நலனில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். சமூகம் சார்ந்த முக்கிய பிரச்சினைகளில் எனக்கு சிறப்பான ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார். 100 ஆண்டுகள் வாழ்ந்து மக்கள் சேவை செய்த கிருஷ்ணய்யர் இன்னும் பல ஆண்டுகள் சேவை யாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தான் அவர் மறைந்து விட்டார் என்ற செய்தி நம்மை தாக்கியிருக்கிறது.

நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யரின் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.’’

Tuesday, December 2, 2014

சாதிவாரிக் கணக்கெடுப்புக் கோரி 9-ம் தேதி பா.ம.க. போராட்டம்: ராமதாஸ் அறிவிப்பு

 
தமிழகத்தில் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் 9-ம் தேதி பா.ம.க. சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும் என அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீட்டு முறையை தடம் புரளச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் முயற்சிகளை அரசு வேடிக்கை பார்ப்பது கவலையளிக்கிறது.

தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கும் 69% இட ஒதுக்கீட்டுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனினும் இது தொடர்பான வழக்கில் கடந்த 13.07.2010 அன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா தலைமையிலான அமர்வு, "தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு செல்லும். எனினும், அடுத்த ஓராண்டுக்குள் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீட்டு பெறுவோரின் எண்ணிக்கையை உறுதி செய்து, அதனடிப்படையில் இட ஒதுக்கீட்டை நிர்ணயிக்க வேண்டும்" என்று ஆணையிட்டது.

ஆனால், சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தாமலேயே தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு தொடரும் என ஜெயலலிதா அறிவித்தார்.

உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இடஒதுக்கீட்டை நிர்ணயிக்காத நிலையில், 69% இடஒதுக்கீட்டை எதிர்த்து மீண்டும் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இட ஒதுக்கீட்டை ஏன் ரத்து செய்யக்கூடாது? என்பது குறித்து விளக்கமளிக்கும்படி தமிழக அரசுக்கு கடந்த செப்டம்பர் மாதம் அறிவிக்கை அனுப்பியுள்ளது. இதனால் தமிழகத்தில் இடஒதுக்கீடு தொடருமா? என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

ஆனால், சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு தேவையே இல்லை என்ற போதிலும் முழுமையான சமூக நீதியை நிலை நாட்டும் நோக்குடன் கர்நாடகத்தில் இம்மாத இறுதியில் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கும் என்று அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது. இந்தக் கணக்கெடுப்பு 2 மாதங்களில் முடிவடைந்த பின் கர்நாடகத்தில் ஒவ்வொரு சமூகத்தினருக்கும் மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது.

அ.தி.மு.க. அரசின் தவறான அணுகுமுறையால் தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டுக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் இடஒதுக்கீட்டை பாதுகாக்கவும், முழுமையான சமூக நீதியை நிலை நிறுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

எனவே உச்ச நீதிமன்ற ஆணையை நிறைவேற்றும் வகையில் கர்நாடக அரசை பின்பற்றி தமிழகத்தில் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் 9 ஆம் தேதி (செவ்வாய் கிழமை) காலை 10 மணிக்கு தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட மற்றும் வட்டத் தலைநகரங்களில் பா.ம.க. சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படவுள்ளது" என ராமதாஸ் கூறியுள்ளார்.

Monday, December 1, 2014

மோடி விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரல்ல: சுட்டிக்காட்டும் தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும்: ராமதாஸ்


பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்,‘‘ இராமதாசு, வைகோ போன்றோர் மோடியை விமர்சிக்கக்கூடாது; எதிர்க்கட்சித் தலைவர்கள் போல செயல்படக்கூடாது’’ என்று பேசியிருக்கிறார். இதற்கு முன் நடத்திய பல்வேறு செய்தியாளர் சந்திப்புகளில் கூட்டணிக் கட்சிக்கான இலக்கணம் குறித்தும் அவர் பாடம் நடத்தியுள்ளார்.

கூட்டணிக்கான இலக்கணம் குறித்தெல்லாம் மற்றவர்கள் பாடம் நடத்தித் தெரிந்து கொள்ளும் நிலையில் நாங்கள் இல்லை. அதேநேரத்தில் ‘கூட்டணி என்பது கொள்கைகளை அடகு வைப்பது அல்ல’ என்பதை எனது பாசத்திற்குரிய தமிழிசை சவுந்தரராஜனும், கூட்டணி இலக்கணம் குறித்து பாடம் நடத்திக் கொண்டிருக்கும் பாரதிய ஜனதாவின் மற்ற தலைவர்களும் புரிந்து கொள்ள வேண்டும். 
நட்புக்கு அழகு தவறுகளைத் திருத்துதல் என்ற உண்மையை புரிந்து வைத்திருப்பதால் தான் கூட்டணிக் கட்சிகள் தவறு செய்யும்போது அதை முதல் ஆளாக சுட்டிக்காட்டுகிறோம்; தவறை சரி செய்யும்படி வலியுறுத்துகிறோம். இது கூட்டணி தர்மத்திற்கு உட்பட்டது தான்; இது இலக்கணத்தை மீறிய செயல் என்று எவரேனும் நினைத்தால் அவர்களுக்கு சகிப்புத் தன்மை இல்லை என்று தான் கருத வேண்டும்.

2001 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க.- பா.ம.க. கூட்டணி தான் வெற்றி பெற்றது. ஆட்சிப் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே தி.மு.க. தலைவர் கலைஞரை அ.தி.மு.க. அரசு கைது செய்த போது, கூட்டணிக் கட்சி என்றும் பாராமல் ஆட்சியாளர்களை கடுமையாக விமர்சித்தேன். அ.தி.மு.க. அரசின் மக்கள் விரோத செயல்களை சகித்துக் கொள்ள முடியாமல் 3 மாதங்களில் அந்த கூட்டணியிலிருந்து வெளியேறி, அடுத்த நான்கே முக்கால் ஆண்டுகளுக்கு முதன்மை எதிர்க்கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சி செயல்பட்டது. 

2006 ஆம் ஆண்டில் தி.மு.க.வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பா.ம.க. தான் முதன்முதலில் நிபந்தனையற்ற ஆதரவளிப்பதாகக் கூறி கடிதம் கொடுத்தது. அதன்பின் 3 ஆண்டுகளுக்கு தி.மு.க. அணியில் இருந்த போதிலும், அதன் தவறுகளுக்கு மவுன சாட்சியாக இருக்கவில்லை. தி.மு.க. தவறு செய்த போதெல்லாம் எதிர்த்தோம். எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா கொடநாட்டில் தொடர்ந்து ஓய்வெடுத்து வந்த நிலையில் பேரவையிலும், வெளியிலும் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்பட்டது பா.ம.க. தான். 

பல்லாயிரம் ஏக்கர் விளைநிலங்களை பறித்தும், பல லட்சக்கணக்கானோரின் வாழ்விடங்களை அழித்தும் துணை நகரங்களை அமைக்க தி.மு.க. அரசு முனைந்த போது அதை கடுமையாக எதிர்த்து முறியடித்தோம். மக்கள் நலனுக்கு எதிரான தி.மு.க. அரசின் பலத் திட்டங்களை தடுத்து நிறுத்தி, மக்கள் நலனைக் காத்தோம். அப்போதெல்லாம் கூட்டணியிலிருந்து கொண்டு தவறுகளை சுட்டிக்காட்டக் கூடாது என்று யாரும் கூறவில்லை. மாறாக தைலாபுரத்திலிருந்து தலைவலிக்கு தைலம் வந்திருக்கிறது என்று தான் கலைஞர் கூறுவார். ஆரோக்கியமான விமர்சனங்களை இந்த வகையில் தான் எதிர்கொள்ள வேண்டும்.

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் பா.ம.க. அங்கம் வகித்த போதும் கூட அந்த அரசின் தவறுகளை சுட்டிக்காட்ட நான் தயங்கியதில்லை. 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொழும்பில் நடந்த 15 ஆவது சார்க் மாநாட்டில் பங்கேற்க அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் முடிவு செய்தபோது அதை முதலில் எதிர்த்தது நான் தான்.

இலங்கைப் போர் குறித்த இந்தியாவின் அணுகுமுறை தவறானது என்பதை அப்போதைய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை தில்லியில் நேரில் சந்தித்து வலியுறுத்தினேன். எந்தக் கூட்டணியில் இருந்தாலும், கூட்டணி நலனுக்காக மக்கள் நலனில் சமரசம் செய்து கொள்ளும் வழக்கம் எனக்கு  இல்லை. அதேநேரத்தில் எந்த தருணத்திலும் அரசியல் நாகரீகமின்றி யாரையும் நான் விமர்சித்ததில்லை; இனியும் விமர்சிக்கப் போவதில்லை.

திருச்சியில் கடந்த 26.09.2013 அன்று நடைபெற்ற பாரதிய ஜனதாக் கட்சியின் இளந்தாமரை மாநாட்டில் பேசிய அப்போதைய பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத்சிங் ஆகியோர் மீனவர் பிரச்சினைக்கு நிரந்த தீர்வு காணப்படும்; இலங்கையில் 13 ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை செயல்படுத்தி தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் அளிக்கப்படும் என்று உறுதி அளித்தார்கள். அவர்கள் முன்னிலையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதன்பின் 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பல்வேறு பிரச்சாரக் கூட்டங்களில் பேசும் போதும் நரேந்திர மோடி இதே வாக்குறுதிகளை அளித்தார். ஆனால், ஆட்சிக்கு வந்து 6 மாதங்களாகியும் இவற்றை நிறைவேற்ற எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு மேற்கொள்ளவில்லை. இதை சுட்டிக்காட்டுவது தவறா?

ஈழத்தமிழர்களையும், தமிழக மீனவர்களையும் கொண்டு குவித்த சிங்களப்படையினருக்கு ராணுவப் பயிற்சி அளிக்கக்கூடாது என்று தமிழகத்தில் உள்ள கட்சிகள் வலியுறுத்தின; தமிழிசை சவுந்தரராஜன் தலைமையிலான தமிழக பாரதிய ஜனதாவும் இதே கோரிக்கையை வலியுறுத்தியது. இதை மத்திய அரசு ஏற்றதா? சிங்களப்படையினருக்கு தொடர்ந்து இந்தியாவில் பயிற்சி அளிக்கப்படுவதுடன், இலங்கை அரசு நடத்தும் அனைத்து இராணுவ மாநாடுகளிலும் இந்தியா தான் முதலில் பங்கேற்கிறது. 
ஈழத்தமிழர் படுகொலை தொடர்பான ஐ.நா. மனித உரிமை ஆணைய விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்; இந்த விசாரணையை சென்னையில் நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் ஒட்டுமொத்த தமிழகமும் வலியுறுத்தியது. மத்திய அரசின் செவிகளில் தமிழக மக்களின் குரல் ஏறியதா?

2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான பாரதிய ஜனதாக் கட்சியின் தேர்தல் அறிக்கையில் 41 ஆவது பக்கத்தில் ,‘‘ அறிவுசார் சமுதாயத்தை படைப்பதற்கான வாகனங்களாக மொழிகள் உருவெடுக்கும் வகையில் அனைத்து இந்திய மொழிகளையும் ஊக்குவிக்கவும், மேம்படுத்தவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்’’ என்று உறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், நடைமுறையில் இந்தியையும், சமஸ்கிருதத்தையும் அனைத்து வழிகளிலும் திணிப்பதைத் தவிர மற்ற மொழிகளின் வளர்ச்சிக்காக மத்திய அரசு சிறு துரும்பையாவது கிள்ளிப்போட்டிருக்குமா? தேர்தல் வாக்குறுதிக்கு எதிரான இந்த செயலை சுட்டிக்காட்டினால் அது என்ன தேசத் துரோகமா?

அரசுத்துறை நிறுவனங்களின்பங்குகளை தனியாருக்கு விற்பது, வங்கிகள் தனியார் மயமாக்கல்,  பொது வினியோகத் திட்டத்திற்கு மூடுவிழா நடத்தும் நோக்குடன் உணவு மானியத்தை நேரடி பயன் மாற்றத் திட்டத்தில் வழங்குதல், நேரடி அந்நிய முதலீட்டை அனுமதித்தல், வேளாண் விளைபொருட்களின் கொள்முதல் விலையை குறைத்தல், மொழி மற்றும் கலாச்சாரத் திணிப்பு ஆகியவற்றை பா.ம.க.வால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் தான் இவற்றை நாங்கள் கடுமையாக எதிர்த்து வருகிறோம்.

இதற்கெல்லாம் மேலாக ஒன்றரை லட்சம் அப்பாவி தமிழர்களை கொடூரமான முறையில் படுகொலை செய்த கொடியவன் போர்குற்றவாளி இராஜபக்சே, இலங்கை தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று மூன்றாவது  முறையாக அதிபராக பதவியேற்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்துவதை எப்படி ஏற்க முடியும்? ஒரு சம்பிரதாயத்திற்காகக் கூட இப்படி மோடி வாழ்த்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது  என்பதை தமிழிசை சவுந்தரராஜனுக்கு மீண்டும் ஒருமுறை கூறிக்கொள்ள விரும்புகிறேன். உணர்வுள்ள எந்த தமிழனும் தமிழர்களுக்கு எதிரான இத்தகைய செயல்களை பொறுத்துக் கொள்ள மாட்டான். இந்த உணர்வுடன் பிரதமரை விமர்சித்தார் என்பதற்காக, அரசியல் நாகரீகமின்றி ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோவுக்கு பா.ஜ.க. தேசிய செயலர் ராஜா மிரட்டல் விடுத்தது கண்டிக்கத்தக்கது.

கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தங்களின் கோரிக்கையை பாரதிய ஜனதாவிடம் தான் தெரிவிக்க வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். கூட்டணிக் கட்சிகளின் கருத்துப் பகிர்வுக்காக  ஒருங்கிணைப்புக்குழு போன்ற ஏதேனும் ஓர் அமைப்பை பாரதிய ஜனதா உருவாக்கியுள்ளதா? அத்தகைய அமைப்பு இல்லாத நிலையிலும், இலங்கை இனப்பிரச்சினை குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், தொடர்வண்டித் திட்டங்கள் குறித்து அத்துறை அமைச்சராக இருந்த சதானந்த கவுடா உள்ளிட்டோரிடம் பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாசு தலைமையிலான குழுவினர் அளித்த மனுக்கள் மீது மத்திய அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்ததா? அவ்வாறு இல்லாத நிலையில் எந்த அடிப்படையில் இப்படி ஒரு யோசனையை தமிழிசை கூறுகிறார்?
தங்கள் கட்சியைச் சேர்ந்த நரேந்திர மோடி பிரதமராக இருப்பது பாரதிய ஜனதாவுக்கும், தமிழிசை போன்றவர்களுக்கும்  பெருமையாக இருக்கலாம்.

 ஆனால், பிரதமர் என்பவர் 122 கோடி இந்தியர்களுக்கும் பொதுவானவர். அவர் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் அல்ல.  பிரதமர் குறித்து விமர்சனமே செய்யக்கூடாது என்பது புண்ணுக்கு சிகிச்சை அளிக்காமல் மூடி வைத்து புரையோடிப் போகச் செய்வதற்கு சமமானதாகும். இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும் என்ற வள்ளுவரின் வார்த்தைகளை மனதில் கொண்டு, ஆரோக்கியமான விமர்சனங்களை ஏற்றுக் கொண்டு அதில் சுட்டிக்காட்டப்படும் தவறுகளை திருத்திக் கொள்ள பா.ஜ.க. முன்வர வேண்டும்.

பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை மக்கள் நலன் தான் முதன்மையானதாகும். அதைக் கருத்தில் கொண்டு மக்கள் நலனுக்கு எதிரான மத்திய, மாநில அரசுகளின் தவறுகளைச் சுட்டிக்காட்டி  திருத்தும் ஆரோக்கியமான அரசியலை பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார். 

மோடி விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரல்ல: சுட்டிக்காட்டும் தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும்: ராமதாஸ்


பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்,‘‘ இராமதாசு, வைகோ போன்றோர் மோடியை விமர்சிக்கக்கூடாது; எதிர்க்கட்சித் தலைவர்கள் போல செயல்படக்கூடாது’’ என்று பேசியிருக்கிறார். இதற்கு முன் நடத்திய பல்வேறு செய்தியாளர் சந்திப்புகளில் கூட்டணிக் கட்சிக்கான இலக்கணம் குறித்தும் அவர் பாடம் நடத்தியுள்ளார்.

கூட்டணிக்கான இலக்கணம் குறித்தெல்லாம் மற்றவர்கள் பாடம் நடத்தித் தெரிந்து கொள்ளும் நிலையில் நாங்கள் இல்லை. அதேநேரத்தில் ‘கூட்டணி என்பது கொள்கைகளை அடகு வைப்பது அல்ல’ என்பதை எனது பாசத்திற்குரிய தமிழிசை சவுந்தரராஜனும், கூட்டணி இலக்கணம் குறித்து பாடம் நடத்திக் கொண்டிருக்கும் பாரதிய ஜனதாவின் மற்ற தலைவர்களும் புரிந்து கொள்ள வேண்டும். 
நட்புக்கு அழகு தவறுகளைத் திருத்துதல் என்ற உண்மையை புரிந்து வைத்திருப்பதால் தான் கூட்டணிக் கட்சிகள் தவறு செய்யும்போது அதை முதல் ஆளாக சுட்டிக்காட்டுகிறோம்; தவறை சரி செய்யும்படி வலியுறுத்துகிறோம். இது கூட்டணி தர்மத்திற்கு உட்பட்டது தான்; இது இலக்கணத்தை மீறிய செயல் என்று எவரேனும் நினைத்தால் அவர்களுக்கு சகிப்புத் தன்மை இல்லை என்று தான் கருத வேண்டும்.

2001 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க.- பா.ம.க. கூட்டணி தான் வெற்றி பெற்றது. ஆட்சிப் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே தி.மு.க. தலைவர் கலைஞரை அ.தி.மு.க. அரசு கைது செய்த போது, கூட்டணிக் கட்சி என்றும் பாராமல் ஆட்சியாளர்களை கடுமையாக விமர்சித்தேன். அ.தி.மு.க. அரசின் மக்கள் விரோத செயல்களை சகித்துக் கொள்ள முடியாமல் 3 மாதங்களில் அந்த கூட்டணியிலிருந்து வெளியேறி, அடுத்த நான்கே முக்கால் ஆண்டுகளுக்கு முதன்மை எதிர்க்கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சி செயல்பட்டது. 

2006 ஆம் ஆண்டில் தி.மு.க.வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பா.ம.க. தான் முதன்முதலில் நிபந்தனையற்ற ஆதரவளிப்பதாகக் கூறி கடிதம் கொடுத்தது. அதன்பின் 3 ஆண்டுகளுக்கு தி.மு.க. அணியில் இருந்த போதிலும், அதன் தவறுகளுக்கு மவுன சாட்சியாக இருக்கவில்லை. தி.மு.க. தவறு செய்த போதெல்லாம் எதிர்த்தோம். எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா கொடநாட்டில் தொடர்ந்து ஓய்வெடுத்து வந்த நிலையில் பேரவையிலும், வெளியிலும் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்பட்டது பா.ம.க. தான். 

பல்லாயிரம் ஏக்கர் விளைநிலங்களை பறித்தும், பல லட்சக்கணக்கானோரின் வாழ்விடங்களை அழித்தும் துணை நகரங்களை அமைக்க தி.மு.க. அரசு முனைந்த போது அதை கடுமையாக எதிர்த்து முறியடித்தோம். மக்கள் நலனுக்கு எதிரான தி.மு.க. அரசின் பலத் திட்டங்களை தடுத்து நிறுத்தி, மக்கள் நலனைக் காத்தோம். அப்போதெல்லாம் கூட்டணியிலிருந்து கொண்டு தவறுகளை சுட்டிக்காட்டக் கூடாது என்று யாரும் கூறவில்லை. மாறாக தைலாபுரத்திலிருந்து தலைவலிக்கு தைலம் வந்திருக்கிறது என்று தான் கலைஞர் கூறுவார். ஆரோக்கியமான விமர்சனங்களை இந்த வகையில் தான் எதிர்கொள்ள வேண்டும்.

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் பா.ம.க. அங்கம் வகித்த போதும் கூட அந்த அரசின் தவறுகளை சுட்டிக்காட்ட நான் தயங்கியதில்லை. 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொழும்பில் நடந்த 15 ஆவது சார்க் மாநாட்டில் பங்கேற்க அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் முடிவு செய்தபோது அதை முதலில் எதிர்த்தது நான் தான்.

இலங்கைப் போர் குறித்த இந்தியாவின் அணுகுமுறை தவறானது என்பதை அப்போதைய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை தில்லியில் நேரில் சந்தித்து வலியுறுத்தினேன். எந்தக் கூட்டணியில் இருந்தாலும், கூட்டணி நலனுக்காக மக்கள் நலனில் சமரசம் செய்து கொள்ளும் வழக்கம் எனக்கு  இல்லை. அதேநேரத்தில் எந்த தருணத்திலும் அரசியல் நாகரீகமின்றி யாரையும் நான் விமர்சித்ததில்லை; இனியும் விமர்சிக்கப் போவதில்லை.

திருச்சியில் கடந்த 26.09.2013 அன்று நடைபெற்ற பாரதிய ஜனதாக் கட்சியின் இளந்தாமரை மாநாட்டில் பேசிய அப்போதைய பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத்சிங் ஆகியோர் மீனவர் பிரச்சினைக்கு நிரந்த தீர்வு காணப்படும்; இலங்கையில் 13 ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை செயல்படுத்தி தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் அளிக்கப்படும் என்று உறுதி அளித்தார்கள். அவர்கள் முன்னிலையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதன்பின் 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பல்வேறு பிரச்சாரக் கூட்டங்களில் பேசும் போதும் நரேந்திர மோடி இதே வாக்குறுதிகளை அளித்தார். ஆனால், ஆட்சிக்கு வந்து 6 மாதங்களாகியும் இவற்றை நிறைவேற்ற எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு மேற்கொள்ளவில்லை. இதை சுட்டிக்காட்டுவது தவறா?

ஈழத்தமிழர்களையும், தமிழக மீனவர்களையும் கொண்டு குவித்த சிங்களப்படையினருக்கு ராணுவப் பயிற்சி அளிக்கக்கூடாது என்று தமிழகத்தில் உள்ள கட்சிகள் வலியுறுத்தின; தமிழிசை சவுந்தரராஜன் தலைமையிலான தமிழக பாரதிய ஜனதாவும் இதே கோரிக்கையை வலியுறுத்தியது. இதை மத்திய அரசு ஏற்றதா? சிங்களப்படையினருக்கு தொடர்ந்து இந்தியாவில் பயிற்சி அளிக்கப்படுவதுடன், இலங்கை அரசு நடத்தும் அனைத்து இராணுவ மாநாடுகளிலும் இந்தியா தான் முதலில் பங்கேற்கிறது. 
ஈழத்தமிழர் படுகொலை தொடர்பான ஐ.நா. மனித உரிமை ஆணைய விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்; இந்த விசாரணையை சென்னையில் நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் ஒட்டுமொத்த தமிழகமும் வலியுறுத்தியது. மத்திய அரசின் செவிகளில் தமிழக மக்களின் குரல் ஏறியதா?

2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான பாரதிய ஜனதாக் கட்சியின் தேர்தல் அறிக்கையில் 41 ஆவது பக்கத்தில் ,‘‘ அறிவுசார் சமுதாயத்தை படைப்பதற்கான வாகனங்களாக மொழிகள் உருவெடுக்கும் வகையில் அனைத்து இந்திய மொழிகளையும் ஊக்குவிக்கவும், மேம்படுத்தவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்’’ என்று உறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், நடைமுறையில் இந்தியையும், சமஸ்கிருதத்தையும் அனைத்து வழிகளிலும் திணிப்பதைத் தவிர மற்ற மொழிகளின் வளர்ச்சிக்காக மத்திய அரசு சிறு துரும்பையாவது கிள்ளிப்போட்டிருக்குமா? தேர்தல் வாக்குறுதிக்கு எதிரான இந்த செயலை சுட்டிக்காட்டினால் அது என்ன தேசத் துரோகமா?

அரசுத்துறை நிறுவனங்களின்பங்குகளை தனியாருக்கு விற்பது, வங்கிகள் தனியார் மயமாக்கல்,  பொது வினியோகத் திட்டத்திற்கு மூடுவிழா நடத்தும் நோக்குடன் உணவு மானியத்தை நேரடி பயன் மாற்றத் திட்டத்தில் வழங்குதல், நேரடி அந்நிய முதலீட்டை அனுமதித்தல், வேளாண் விளைபொருட்களின் கொள்முதல் விலையை குறைத்தல், மொழி மற்றும் கலாச்சாரத் திணிப்பு ஆகியவற்றை பா.ம.க.வால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் தான் இவற்றை நாங்கள் கடுமையாக எதிர்த்து வருகிறோம்.

இதற்கெல்லாம் மேலாக ஒன்றரை லட்சம் அப்பாவி தமிழர்களை கொடூரமான முறையில் படுகொலை செய்த கொடியவன் போர்குற்றவாளி இராஜபக்சே, இலங்கை தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று மூன்றாவது  முறையாக அதிபராக பதவியேற்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்துவதை எப்படி ஏற்க முடியும்? ஒரு சம்பிரதாயத்திற்காகக் கூட இப்படி மோடி வாழ்த்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது  என்பதை தமிழிசை சவுந்தரராஜனுக்கு மீண்டும் ஒருமுறை கூறிக்கொள்ள விரும்புகிறேன். உணர்வுள்ள எந்த தமிழனும் தமிழர்களுக்கு எதிரான இத்தகைய செயல்களை பொறுத்துக் கொள்ள மாட்டான். இந்த உணர்வுடன் பிரதமரை விமர்சித்தார் என்பதற்காக, அரசியல் நாகரீகமின்றி ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோவுக்கு பா.ஜ.க. தேசிய செயலர் ராஜா மிரட்டல் விடுத்தது கண்டிக்கத்தக்கது.

கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தங்களின் கோரிக்கையை பாரதிய ஜனதாவிடம் தான் தெரிவிக்க வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். கூட்டணிக் கட்சிகளின் கருத்துப் பகிர்வுக்காக  ஒருங்கிணைப்புக்குழு போன்ற ஏதேனும் ஓர் அமைப்பை பாரதிய ஜனதா உருவாக்கியுள்ளதா? அத்தகைய அமைப்பு இல்லாத நிலையிலும், இலங்கை இனப்பிரச்சினை குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், தொடர்வண்டித் திட்டங்கள் குறித்து அத்துறை அமைச்சராக இருந்த சதானந்த கவுடா உள்ளிட்டோரிடம் பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாசு தலைமையிலான குழுவினர் அளித்த மனுக்கள் மீது மத்திய அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்ததா? அவ்வாறு இல்லாத நிலையில் எந்த அடிப்படையில் இப்படி ஒரு யோசனையை தமிழிசை கூறுகிறார்?
தங்கள் கட்சியைச் சேர்ந்த நரேந்திர மோடி பிரதமராக இருப்பது பாரதிய ஜனதாவுக்கும், தமிழிசை போன்றவர்களுக்கும்  பெருமையாக இருக்கலாம்.

 ஆனால், பிரதமர் என்பவர் 122 கோடி இந்தியர்களுக்கும் பொதுவானவர். அவர் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் அல்ல.  பிரதமர் குறித்து விமர்சனமே செய்யக்கூடாது என்பது புண்ணுக்கு சிகிச்சை அளிக்காமல் மூடி வைத்து புரையோடிப் போகச் செய்வதற்கு சமமானதாகும். இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும் என்ற வள்ளுவரின் வார்த்தைகளை மனதில் கொண்டு, ஆரோக்கியமான விமர்சனங்களை ஏற்றுக் கொண்டு அதில் சுட்டிக்காட்டப்படும் தவறுகளை திருத்திக் கொள்ள பா.ஜ.க. முன்வர வேண்டும்.

பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை மக்கள் நலன் தான் முதன்மையானதாகும். அதைக் கருத்தில் கொண்டு மக்கள் நலனுக்கு எதிரான மத்திய, மாநில அரசுகளின் தவறுகளைச் சுட்டிக்காட்டி  திருத்தும் ஆரோக்கியமான அரசியலை பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார். 

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: