Wednesday, April 30, 2014

மது விற்று வருவாய் ஈட்டுவது மன்னிக்க முடியாத பாவம் என்பதை தமிழக அரசு உணர வேண்டும்: ராமதாஸ்



பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிடுள்ள அறிக்கையில்,
கேரள மக்களின் மன ஓட்டத்தை நன்றாக புரிந்து கொண்ட அம்மாநில முதலமைச்சர் உம்மன்சாண்டி, மாநிலத்தில் உள்ள 752 மதுக் குடிப்பகங்களில் 418 குடிப்பகங்களை அதிரடியாக மூட வைத்துள்ளார். அதுமட்டுமின்றி, மதுப் பழக்கத்தை படிப்படியாக குறைக்கவும், அடுத்த 10 ஆண்டுகளில் கேரளத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்.
கேரள மக்களையும் மதுவையும் பிரிக்க முடியாது என்று கூறும் அளவுக்கு அம்மாநிலத்தில் மது நுகர்வு அதிகமாக உள்ளது. இந்தியாவிலேயே தனிநபர் மது நுகர்வு விகிதத்தில் முதலிடம் வகிப்பது  கேரளா தான். அதுமட்டுமின்றி, கேரள அரசியலையே ஆட்டிப்படைக்கும் சக்தி மது தயாரிப்பு நிறுவனங்களுக்கு உண்டு. கேரளத்தில் மதுவுக்கு ஆதரவாக இவ்வளவு விஷயங்கள் இருந்தாலும்,  அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல், தாய்மார்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து  குடிப்பகங்களை மூட உத்தரவிட்டதற்காக முதல்வர் உம்மன்சாண்டிக்கு  பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேநேரத்தில் தமிழகத்தின் நிலையை நினைத்தால் வேதனையும், வருத்தமும் தான் விஞ்சுகிறது. மதுவால் தமிழகம் எதிர்கொண்ட சீரழிவுகள் ஏராளம். வாங்கிய ஊதியத்தை கணவன் மதுக்கடையில்  குடித்து அழித்து விட்டு வந்ததால் குழந்தைகளுடன் பட்டினியாக உறங்கும் தாய்மார்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது. சாலை விபத்துக்களின் எண்ணிக்கையில் முதலிடம், சாலை விபத்துக்களில் உயிரிழப்போரின் எண்ணிக்கையில் முதலிடம், குடியால் இறந்த கணவர்களால் உருவான இளம் விதவைகளின் எண்ணிக்கையில் முதலிடம் என எத்தனையோ அவமானச் சின்னங்களை தமிழகம் சுமந்து கொண்டிருந்தாலும், அதைப் பற்றியெல்லாம்  கவலைப்படாமல் இலக்கு வைத்து மது விற்பனை செய்வதில் தான் தமிழக ஆட்சியாளர்கள் தீவிரம் காட்டுகின்றனர். மது வருமானத்தில் தான் இலவசத் திட்டங்களை செயல்படுத்தி மக்களின் வாக்குகளை வாங்க முடியும் என்ற கீழ்த்தரமான எண்ணம் இதற்கு ஒரு காரணமென்றால், அ.தி.மு.க. ஆண்டாலும், தி.மு.க. ஆண்டாலும் ஆட்சியாளர்களுக்கு நெருக்கமானவர்களே மது ஆலைகளை நடத்தி கோடிக்கணக்கில் லாபம் பார்க்கத் துடிப்பது இன்னொரு காரணம் ஆகும்.
கேரள அரசுக்கு கடந்த ஆண்டு வரி மூலம் கிடைத்த மொத்த வருவாய் ரூ.35,542 கோடி. இதில் மது விற்பனை மூலம் கிடைத்த வருவாய் மட்டும் ரூ.9300 கோடி. அதாவது நான்கில் ஒரு பங்கிற்கும் அதிகம். மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டால் கடும் நிதி நெருக்கடி ஏற்படும் எனத் தெரிந்தும், முழுமையான மதுவிலக்கின் முதல் கட்டமாக குடிப்பகங்களை கேரள அரசு மூடியிருக்கிறது. ஆனால், தமிழக அரசோ கடந்த ஆண்டு கிடைத்த ரூ. 23,401 கோடி வருவாய் போதாதென்று, நடப்பாண்டில் ரூ.26,292 கோடி வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயித்து தெருக்கள் தோறும் கடைகளைத் திறந்து மது விற்பனை செய்து வருகிறது. மக்கள் நலனில் இரு மாநில அரசுகளுக்குமான வித்தியாசம் இதுதான்.
மது விற்று, மக்களை சீரழிப்பதன் மூலம் வருவாய் ஈட்டுவது மன்னிக்க முடியாத பாவம் என்பதை தமிழக அரசு இப்போதாவது உணர்ந்து கொள்ள வேண்டும். மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதில் கேரள அரசு காட்டியதைவிட அதிக துணிச்சலை தமிழக அரசு காட்ட வேண்டும். தமிழ்நாட்டில் அடுத்த 6 மாதங்களில் முழுமையான மது விலக்கு ஏற்படுத்தப்படும் என்பதை கொள்கை முடிவாக அறிவித்து, மாதத்திற்கு 20 விழுக்காடு கடைகள் வீதம்  மூடுவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

Tuesday, April 29, 2014

பாமக அதிக இடங்களில் வெற்றி பெறுவது உறுதி;



பா.ம.க. நிறுவனர்  ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,   ‘’சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட வடக்கு மாங்குடி கிராமத்தில் தேர்தல் நாளன்று பா.ம.க. வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தவர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மரியாதைக் குறைவாகப் பேசியதுடன், கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலை பயன்படுத்தி சம்பந்தமே இல்லாத அப்பாவி இளைஞர்கள் உள்ளிட்ட 25 பேரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது.
வன்னியர்கள் வாழும் பகுதிகளில் இரவு நேரங்களில் நுழையும் காவல் துறையினர் சோதனை என்ற பெயரில் அத்துமீறுவதால் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆண்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
காட்டுமன்னார்குடி, சோழத்தரம் போன்ற பகுதிகளில் இதேபோல் நடந்த மோதல்களிலும் வன்னிய சமுதாயத்தினரே பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், தாக்கியவர்களை விட்டு பாதிக்கப்பட்ட வன்னியர்களையே காவல்துறை கைது செய்துள்ளது.
தருமபுரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பொம்மிடி பகுதியில் தேர்தல் நாளன்று வாக்காளர்களுக்கு தருவதற்காக பணம் எடுத்துசென்ற அ.தி.மு.க.வினரை தடுத்ததற்காக பா.ம.க.வினர் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
அதியமான் கோட்டை என்ற இடத்தில் ஆளுங்கட்சியினரின் முறைகேடுகளை தடுக்க முயன்ற பா.ம.க.வினரை அந்த ஊர் காவல்துறை ஆய்வாளர் ரஞ்சித் கண்மூடித்தனமாக தாக்கியிருக்கிறார். அது மட்டுமின்றி அப்பாவி பா.ம.க.வினர் 3 பேரை கைது செய்திருக்கிறார். பென்னாகரத்திலும் இருவர் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரக்கோணம் தொகுதிக்குட்பட்ட நெமிலி, ஆரணி தொகுதியில் நடுக்குப்பம், அவ்வையார் குப்பம் ஆகிய இடங்களிலும் விடுதலை சிறுத்தை கட்சியைச் சேர்ந்தவர்கள் வன்னியர்களை தாக்கியுள்ளனர். இதுதொடர்பாக நியாயம் கேட்கச் சென்ற வன்னியர்கள் 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
உள்ளூரில் வாக்களிக்க வந்த சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் பணியாற்றும் இளைஞர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதால் அவர்களின் எதிர்காலம் பாழாகியிருக்கிறது.

மக்களவைத் தேர்தலில் பா.ம.க. போட்டியிடும் தொகுதிகளில் பெருமளவில் வாக்குகள் பதிவாகி இருப்பதால் பா.ம.க. அதிக இடங்களில் வெற்றி பெறுவது உறுதியாகியிருக்கிறது. இதனால் கலக்கம் அடைந்துள்ள சில சக்திகள் பா.ம.க.வினருக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளன.
தோல்வி பயம் காரணமாக இவ்வாறு செய்வது வாக்களித்த மக்களையும், ஜனநாயகத்தையும் அவமதிக்கும் செயலாகும். எனவே, வட மாவட்டங்களில் நிகழும் வன்முறைகளை தடுப்பதுடன், அது குறித்து நியாயமான விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும். பாட்டாளி மக்கள் கட்சியினர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள பொய் வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெறுவதுடன், கைது செய்யப்பட்டுள்ள அப்பாவிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’’ என்று கூறியுள்ளார்.

Monday, April 28, 2014

தொடரும் பாமக - விசி மோதல்... கைதான ‘அப்பாவி’களை விடுவிக்க ராமதாஸ் கோரிக்கை

சென்னை: தோல்வி பயத்தால் பா.ம.க.வினருக்கு எதிரான நடத்தப்படும் வன்முறை, அடக்குமுறைகளைத் தடுக்க வேண்டும் என அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்திருப்பது மகிழ்ச்சியும், நிம்மதியும் அளிக்கும் வேளையில் தமிழகத்தின் வட மாவட்டங்களில் வன்னியர்களுக்கு எதிராக திட்டமிட்டு அரங்கேற்றப்படும் வன்முறைகள் கவலையளிக்கின்றன. பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட்ட தொகுதிகளில் மட்டும் இத்தகைய வன்முறைகள் நடத்தப்படுவது இயல்பான ஒன்றாக தோன்றவில்லை.கடலூர் மாவட்டம் சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட வடக்கு மாங்குடி கிராமத்தில் தேர்தல் நாளன்று பா.ம.க. வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தவர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மரியாதைக் குறைவாகப் பேசியதுடன், கடுமையாக தாக்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலை பயன்படுத்திக் கொண்டு, வன்னியர்கள் மீதான அடக்குமுறையை காவல்துறை உதவியுடன் ஆளுங்கட்சி கட்டவிழ்த்து விட்டிருக்கிறது.இந்த மோதலில் சம்பந்தமே இல்லாத அப்பாவி இளைஞர்கள் உள்ளிட்ட 25 பேரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. வன்னியர்கள் வாழும் பகுதிகளில் இரவு நேரங்களில் நுழையும் காவல்துறையினர் சோதனை என்ற பெயரில் அத்துமீறுவதால் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆண்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். காட்டுமன்னார்குடி, சோழத்தரம் போன்ற பகுதிகளில் இதேபோல் நடந்த மோதல்களிலும் வன்னிய சமுதாயத்தினரே பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், தாக்கியவர்களை விட்டு பாதிக்கப்பட்ட வன்னியர்களையே காவல்துறை கைது செய்துள்ளது.அதேபோல், தருமபுரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பொம்மிடி பகுதியில் தேர்தல் நாளன்று வாக்காளர்களுக்கு தருவதற்காக பணம் எடுத்துசென்ற அ.தி.மு.க.வினரை தடுத்ததற்காக பா.ம.க.வினர் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதியமான் கோட்டை என்ற இடத்தில் ஆளுங்கட்சியினரின் முறைகேடுகளை தடுக்க முயன்ற பா.ம.க.வினரை அந்த ஊர் காவல்துறை ஆய்வாளர் ரஞ்சித் கண்மூடித்தனமாக தாக்கியிருக்கிறார். அதுமட்டுமின்றி அப்பாவி பா.ம.க.வினர் 3 பேரை கைது செய்திருக்கிறார். பென்னாகரத்திலும் இருவர் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.அரக்கோணம் தொகுதிக்குட்பட்ட நெமிலி, ஆரணி தொகுதியில் நடுக்குப்பம், அவ்வையார் குப்பம் ஆகிய இடங்களிலும் விடுதலை சிறுத்தை கட்சியைச் சேர்ந்தவர்கள் வன்னியர்களை தாக்கியுள்ளனர். இதுதொடர்பாக நியாயம் கேட்கச் சென்ற வன்னியர்கள் 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. உள்ளூரில் வாக்களிக்க வந்த சென்னைஉள்ளிட்ட வெளியூர்களில் பணியாற்றும் இளைஞர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதால் அவர்களின் எதிர்காலம் பாழாகியிருக்கிறது.மக்களவைத் தேர்தலில் பா.ம.க. போட்டியிடும் தொகுதிகளில் பெருமளவில் வாக்குகள் பதிவாகி இருப்பதால் பா.ம.க. அதிக இடங்களில் வெற்றி பெறுவது உறுதியாகியிருக்கிறது. இதனால் கலக்கம் அடைந்துள்ள சில சக்திகள் பா.ம.க.வினருக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளன. ஆளுங்கட்சியினரும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி காவல்துறை மூலம் பா.ம.க.வினர் மீது பொய் வழக்குகளை பதிவு செய்து தங்களது ஆத்திரத்தை தீர்த்துக் கொள்கின்றனர். தோல்வி பயம் காரணமாக இவ்வாறு செய்வது வாக்களித்த மக்களையும், ஜனநாயகத்தையும் அவமதிக்கும்செயலாகும்.எனவே, வட மாவட்டங்களில் நிகழும் வன்முறைகளை தடுப்பதுடன், அது குறித்து நியாயமான விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும். பாட்டாளி மக்கள் கட்சியினர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள பொய் வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெறுவதுடன், கைது செய்யப்பட்டுள்ள அப்பாவிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

Sunday, April 27, 2014

தேர்தலில் பண பலத்தை எப்படி கட்டுப்படுத்தலாம்: தேர்தல் ஆணையத்திற்கு 10 ஐடியா கொடுத்த ராமதாஸ்

சென்னை: தேர்தல் நேரத்தில் பண பலம் பயன்படுத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத், தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.இது குறித்து அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல்கள் மிகவும் அமைதியாகவும், பெரிய அளவில் வன்முறைகள் இன்றியும் நடத்தி முடிக்கப்பட்டிருக்கின்றன. இதற்காக எனது வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே நேரத்தில் இந்த மக்களவைத் தேர்தல்களின் போது தமிழகத்தில் பணப் பயங்கரவாதமும், பொருளாதார வன்முறையும் மிகப் பெரிய அளவில் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன என்ற உண்மையை தேர்தல் ஆணையத்தின் தமிழகப் பிரதிநிதியான தாங்களே பல்வேறு தருணங்களில் ஒப்புக்கொண்டிருக்கிறீர்கள்.தமிழகத்தில் இத்தகைய இழிநிலை ஏற்பட்டதற்குக் காரணம் தேர்தல் ஆணையத்தில் செயல்பாடற்ற தன்மை தான் என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.தேர்தல்களுக்கான உத்திகளை வகுக்கும்போது ஒவ்வொரு மாநிலத்திலும் நிலவும் கள நிலைமைகள் கருத்தில் கொள்ளப்படுகின்றன. உதாரணமாக ஆந்திரப் பிரதேசம், பிகார், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் இருப்பதாலும், உத்தரபிரதேசத்தில் குண்டர்களின் ஆதிக்கம் அதிகம் இருப்பதாலும் அவற்றைக் கருத்தில் கொண்டு அங்கு மாநில காவல்துறையினருடன் துணை இராணுவப்படையினர் அதிக அளவில் குவிக்கப்படுகின்றனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தேர்தல்களை சீர்குலைக்க பயங்கரவாதிகள் முயலுவார்கள் என்பதால் அங்கு பல்வேறு வகையான துணை இராணுவப்படையினருடன், இந்திய இராணுவமும் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுகிறது.தமிழகத்தைப் பொறுத்தவரை வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள், மது போன்றவை அதிக அளவில் தரப்படுவது கடந்த கால அனுபவங்களில் இருந்து தெளிவாக தெரிய வந்திருக்கிறது. அது மட்டுமின்றி, பல்வேறு அமைப்புகள் நடத்திய ஆய்வுகளில் வாக்காளர்களுக்கு பணம் தருவதில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது என்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த உண்மையை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருக்கிறது.அவ்வாறு இருக்கும்போது தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை நடத்துவதற்கான உத்திகளை வகுக்கும்போது, பணபலத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதற்கு முக்கியத்துவம் அளித்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்ய தேர்தல் ஆணையம் தவறிவிட்டது.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தேர்தலுக்கு முதல் நாள் வரை நடத்தப்பட்ட வாகன சோதனைகளில் ரூ.25.06 கோடி ரொக்கப் பணம், ரூ.27.68 கோடி மதிப்புள்ள நகை உள்ளிட்ட பொருட்களை தேர்தல் ஆணையம் கைப்பற்றியிருப்பதை நான் அறிவேன். ஆனால், அவ்வாறு கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் பரிசுப் பொருட்களில் ஒரு ரூபாய் கூட அரசியல் கட்சிகளுக்கு சொந்தமானதல்ல என்பதும், இவை அனைத்தும் வணிகர்கள் மற்றும் அப்பாவி மக்களுக்கு சொந்தமானவை என்பதும் தான் உண்மை. தேர்தல் ஆணையத்தால் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் பரிசுப் பொருட்களில் பெரும்பாலானவற்றை அவற்றுக்கு உரியவர்கள் தேவையான சான்றுகளைக் காட்டி பெற்றுச் சென்றுவிட்டனர்.அதே நேரத்தில், தமிழகத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பணம் வெள்ளமாக பாய்ந்திருக்கிறது. அரசியல் கட்சிகள், குறிப்பாக ஆளுங்கட்சி கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைத்துள்ளது. தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு ரூ. 300 முதல் ரூ.500 வரை வழங்கப்பட்டிருக்கிறது. அதன்படி ஒவ்வொரு தொகுதியிலும் ரூ.40 கோடி முதல் ரூ.65 கோடி வரை வினியோகிக்கப்பட்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் ரூ.1560 கோடி முதல் ரூ.2535 கோடி வரை வாக்காளர்களுக்கு சட்டவிரோதமாக பணம் வழங்கப்பட்டிருக்கிறது.எதிர்கட்சிகள் கொடுத்த பணம் மற்றும் பரிசுப் பொருட்களையும் கணக்கில் சேர்த்தால் மொத்த மதிப்பு ரூ.3000 கோடியை எட்டும். இந்த பணம் முழுவதும் தமிழகத்தின் ஏதோ ஒரு மூலையிலிருந்து தான் மற்ற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்க வேண்டும். இதைத் தடுக்க தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.வாக்குப்பதிவு நாளன்று சென்னை கீழ்ப்பாக்கத்தில் வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய நீங்கள், ‘‘வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதை தடுப்பதற்காக 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்காணிப்புப் படைகள் மற்றும் மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டன. ஆனாலும், வாக்காளர்களுக்கு பணம் தருவதை தடுப்பது பெரும் சவாலாக இருந்தது'' என்று கூறியிருந்தீர்கள்.உண்மையில் பணம் வழங்குவதைத் தடுக்க தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு பல உதாரணங்களை என்னால் கூற முடியும். தமிழ்நாட்டில் பல தொகுதிகளில் சில எதிர்க்கட்சிகளின் வேட்பாளர்கள் பணம் கொடுக்க முயன்றபோது அவர்களை தேர்தல் ஆணையமும், காவல்துறையும் இணைந்து கைது செய்தனர். அவர்களிடமிருந்த பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இதேபோல், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த ஆளுங்கட்சியினரையும் கைது செய்து நடவடிக்கை எடுத்திருக்க தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறையினரால் முடியும். ஆனால், அவர்களில் ஒருவர் கூட (பொது மக்களால் பிடித்து தரப்பட்ட சிலரைத் தவிர) கைது செய்யப்படவில்லை. காரணம் ஆளுங்கட்சியினரின் தவறுகளை தேர்தல் ஆணையமும், காவல்துறையும் கண்டும் காணாமலும் இருந்தது தான். தங்களுக்கு முன்பு தமிழகத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரியாக பணியாற்றிய திரு. நரேஷ் குப்தா அவர்களால் சில இயலாமைகள் காரணமாக தேர்தலில் பண வினியோகத்தை தடுக்க முடியாமல் போனதே தவிர, பணப் புழக்கத்தை தடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. ஆனால், புதிய தொழில்நுட்பங்களும், வசதிகளும் பெருகிவிட்ட நிலையில் பணப்புழக்கத்தை எளிதாக தடுக்க முடியும் என்ற போதிலும், அப்படிப்பட்ட எண்ணம் தங்களுக்கு இல்லை என்பதையே தங்களின் நடவடிக்கைகள் காட்டுகின்றன.தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் ஜெயலலிதா பிரச்சாரம் செய்ய வந்த போது பொதுக்கூட்டத்திற்கு ஆட்களைத் திரட்ட அரசு எந்திரம் தவறாக பயன்படுத்தப்பட்ட போதும், கூட்டத்திற்கு கூட்டிவரப்பட்டவர்களுக்கு பணம், பிரியாணி மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்ட போதும், பின்னர் தேர்தலுக்கு சில நாட்கள் முன்பாக வாக்காளர்களுக்கு பெருமளவில் பணம் வாரி இறைக்கப்பட்ட போதும் அதை தடுக்கக் கோரி உள்ளூர் தேர்தல் அதிகாரிகளிடமும், தங்களிடமும் பல முறை புகார்கள் அளிக்கப்பட்டன. ஆனால், அந்த புகார்களின் மீது தாங்களோ அல்லது தங்களுக்கு கீழ் உள்ள அதிகாரிகளோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தான் உண்மை.தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதும், வாக்காளர்கள் பணம் வாங்குவதும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 123 ஆவது பிரிவின்படி குற்றம்; இதற்காக இந்திய தண்டனை சட்டத்தின் 171 ஆவது பிரிவின்படி ஓராண்டு வரை சிறை தண்டனை அளிக்கலாம் என்றும் பல தளங்களில் விளம்பரம் செய்கிறீர்கள்; ஆனால், இந்தக் குற்றத்தை செய்யும் ஆளுங்கட்சினர் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறீர்கள். இது எந்த வகையில் நியாயமான, நேர்மையான தேர்தலாக இருக்கும் என்பதை தங்களது மனசாட்சியின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பாக 2 ஆயிரத்திற்கும் கூடுதலான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால், அவற்றில் ஒரு வழக்கில் கூட எவரும் தண்டிக்கப்படவில்லை.அப்படியானால் தேர்தல் குற்றம் தொடர்பான வழக்குகள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பதற்கு இது தான் சிறந்த உதாரணமாகும். இதற்கு தேர்தல் ஆணையத்தின் அலட்சியமும் ஒரு வகையில் காரணம். இந்த தேர்தலிலும் கிட்டத்தட்ட 3000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. கடந்த காலத்தில் நிகழ்ந்த தவறுகளைக் களைந்து, இப்போது பதிவு செய்யப் பட்டுள்ள வழக்குகளிலாவது தவறு செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்க நடவடிக்கை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்திய அரசியல் சட்டம் அதன் குடிமக்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளில் இரு உரிமைகள் மிகவும் முக்கியமானவை. அவற்றில் முதலாவது அரசியல் சட்டத்தில் 21 ஆவது பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டுள்ள வாழ்வதற்கான உரிமை. இந்த உரிமையின் அடிப்படையில் தான் கல்வி, வீட்டுவசதி, பேச்சு, எழுத்து, கருத்து கூறுவதற்கான சுதந்திரம் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன. இரண்டாவது உரிமை சிவில் உரிமைகள் ஆகும். இதில் தான் வாக்குரிமை உள்ளிட்டவை அடங்குகின்றன. இவற்றில் முதலாவது வாழ்வதற்கு வகை செய்கிறது என்றால் இரண்டாவது நம்மை ஆட்சி செய்வது யார்? என்பதை தீர்மானிப்பதற்கான அதிகாரத்தை நமக்கு வழங்குகிறது. எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற தகுதியை வழங்குவது வாக்குரிமை தான்.இத்தகைய விலை மதிப்பற்ற உரிமையை ரூ.500க்கும், ரூ.1000க்கும் ஆளுங்கட்சியும், பொருளாதார பலமுள்ள கட்சிகளும் கொள்ளையடித்துச் செல்வதை தடுக்க முடியவில்லை என்றால் தேர்தல் ஆணையத்தால் என்ன பயன்? இதை மிகப்பெரிய அவமானமாக தேர்தல் ஆணையம் கருத வேண்டாமா? இனி வரும் தேர்தல்களில் ஒரு வாக்கு விற்பனை செய்யப்பட்டால் கூட அதை மன்னிக்க முடியாத குற்றமாக கருதி கடுமையான நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும்.இந்தக் கடிதத்தைக் கூட நான் புகார் மனுவாக கருதி அனுப்பவில்லை. இனிவரும் தேர்தல்களிலாவது பணப் பயங்கரவாதமும், பொருளாதார வன்முறைகளும் தடுக்கப்பட வேண்டும்; அதற்கான நடவடிக்கைகளை தாங்களும், தேர்தல் ஆணையமும் மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தனிப்பட்ட முறையிலான கடிதமாகத் தான் இதை நான் அனுப்பியுள்ளேன்.2016 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலிலும், அதன்பின் நடைபெறவிருக்கும் தேர்தல்களிலும் பணப் பயங்கரவாதம் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும். இதற்காக கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான சட்டத் திருத்தங்களை செய்யவும், அரசாணைகளை பிறப்பிக்கவும் தேர்தல் ஆணையத்தின் மூலமாக மத்திய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.1) தேர்தல்களில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் ஓட்டுக்கு பணம் தர மாட்டோம் என்ற வாக்குறுதியை தேர்தல் ஆணையத்திடம் வழங்குவதை கட்டாயமாக்க வேண்டும். அது மட்டுமின்றி, மாநில முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் விழிப்புணர்வு விளம்பர படங்களில் தோன்றி, ‘‘எங்கள் கட்சி சார்பில் வாக்காளர்களுக்கு பணம் தர மாட்டோம் வேறு ஏதேனும் கட்சிகள் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் அது குறித்து தேர்தல் ஆணையத்திடமோ அல்லது தேர்தல் அதிகாரிகளிடமோ புகார் அளிக்க வேண்டும்'' என அறிவுரை வழங்க வேண்டும். இந்த விழிப்புணர்வுப் படங்கள் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் திரையிடப்பட வேண்டும்.2) மக்களவைத் தேர்தல்கள் இப்போது நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இதில் போட்டியிட்ட அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட கட்சித் தலைவர்கள் கூட்டத்தை ஒவ்வொரு மாநிலத்திலும் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் கூட்ட வேண்டும். இந்த தேர்தலில் பணப் பயங்கரவாதம் எந்தளவுக்கு தலைவிரித்தாடியது என்பதை விளக்கி, இனி எந்த கட்சியும் ஓட்டுக்கு பணம் தரக்கூடாது என்று அறிவுறுத்த வேண்டும். அடுத்து வரும் தேர்தல்களுக்கு முன்பாகவும் இதேபோன்ற கூட்டத்தைக் கூட்டி , ‘ஓட்டுக்கு பணம் தர மாட்டோம்' என்ற வாக்குறுதியை பெற வேண்டும்.3) தேர்தல்களில் வாக்காளர்களுக்கு ஏதேனும் ஒரு கட்சி சார்பில் பணம் தரப்பட்டது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால் அதற்கு அந்தக் கட்சியின் வேட்பாளர் தான் பொறுப்பு என்று அறிவித்து அடுத்த 10 ஆண்டுகளுக்கு அவர் எந்த தேர்தலிலும் போட்டியிட தடை விதிக்க வேண்டும்.4) தேர்தல்களில் வாக்காளர்களுக்கு பணம் தருபவர்களுக்கான தண்டனையை கடுமையாக்க வேண்டும்.5) ஒரு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பாக வழக்கு பதிவாகியிருந்தால், அந்த வழக்கின் விசாரணை முடிவடையும் வரை அத்தொகுதியின் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும்.6) இதனால், ஜனநாயக நடைமுறைகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக தேர்தல் தொடர்பான வழக்குகள் வாக்குப்பதிவு முடிவடைந்த ஒரு மாதத்திற்குள் விசாரித்து தீர்ப்பளிக்கப்பட வேண்டும். இதற்காக தேர்தல் கால சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பது குறித்தும் ஆராயலாம்.7) ஒரு தேர்தலில் ஏதேனும் ஓர் கட்சி வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது உறுதி செய்யப்பட்டால், அந்தக் கட்சியின் வேட்பாளர் விசாரணையின்றி தகுதி நீக்கம் செய்யப்பட்டு, அவருக்கு பதிவான வாக்குகள் அனைத்தும் செல்லாதவையாக அறிவிக்க வேண்டும்.8) வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் தருவதை கையும் களவுமாக பிடித்துக் கொடுப்பதுடன், குற்றச்சாற்றுகளை விசாரிக்க துணை நிற்பவர்களுக்கு ஒரு லட்சரூபாய் பரிசாக வழங்க வேண்டும்.9) அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்களுக்கு வாகனங்களையும், பேரூந்துகளையும் அனுப்பும்படி கட்டாயப்படுத்தும் அதிகாரிகளை உடனடியாக பணி இடைநீக்கம் செய்வதுடன், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சட்டப்படி தண்டனை பெற்றுத் தர வேண்டும்.10) தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ள காலத்தில் காவல்துறை உள்ளிட்ட தேர்தல் தொடர்பான அனைத்து அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் இருப்பார்கள். எனினும் தேர்தல் முடிவடைந்த பின்னர் தேர்தல் ஆணையத்தால் தங்களைக் கட்டுப்படுத்த முடியாது என்பதாலும், ஆட்சியாளர்களைத் தான் தாங்கள் சார்ந்திருக்க வேண்டும் என்பதாலும், எந்த ஒரு அதிகாரியும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளை மதிக்காமல் ஆளுங்கட்சியினருக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையை மாற்றி தேர்தல் காலத்தில் தவறு செய்யும் அதிகாரிகளை உடனடியாக பணி இடை நீக்கம் செய்யும் அதிகாரத்தை தேர்தல் ஆணையத்திற்கு வழங்க வேண்டும்; அவ்வாறு பணி இடை நீக்கம் செய்யப்பட்ட அதிகாரி தம்மை குற்றமற்றவர் என நிரூபிக்கும் வரை அவரை மீண்டும் பணியில் சேர்க்கக் கூடாது.சுதந்திரமான, நேர்மையான, நியாயமான தேர்தல்களை நடத்துவதற்காக நான் முன்வைத்துள்ள மேற்கண்ட யோசனைகளை ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Monday, April 7, 2014

மக்கள் செல்வாக்கை இழந்து விட்ட திமுக 3வது இடத்துக்கு தள்ளப்படும்: அன்புமணி ராமதாஸ்

கிருஷ்ணகிரி: மக்கள் செல்வாக்கை இழந்து விட்டதால்நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் திமுக 3-வது இடத்துக்கு தள்ளப்படும் என தனது கிருஷ்ணகிரி தேர்தல் பிரசாரத்தில் தெரிவித்துள்ளார் தர்மபுரி லோக்சபா தொகுதி பாமக வேட்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ்.கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதி பா.ம.க. வேட்பாளர் ஜி.கே.மணியை ஆதரித்து கிருஷ்ணகிரி மற்றும் பர்கூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார் அன்புமணி ராமதாஸ்.

கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகே திறந்த வேனில் நின்றபடி அவர் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-குஜராத்தில் கடந்த 15 ஆண்டுகளாக நரேந்திரமோடி நல்லாட்சி கொண்டுள்ளார். இந்தியாவில் முதன்மை மாநிலமாக குஜராத் திகழ்கிறது. மோடி பிரதமரானால் நதிகளை இணைத்து விவசாயத்தை பெருக்குவார். இலங்கை தமிழர் வாழ்விற்கும், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கும் நிச்சயம் முடிவு கட்டுவார்.47 ஆண்டுகாலமாக நம்மை ஆண்டு வந்த தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகள் மீது மக்களுக்கு வெறுப்பு வந்து விட்டது. மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். மக்கள் விரும்பும் கூட்டணியான நமது கூட்டணி மிகப்பெரிய வெற்றிக் கூட்டணியாக அமைந்துள்ளது. இந்த தேர்தல் தி.மு.க. வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் இடையில் நடக்கும் தேர்தல் அல்ல. இன்னும் சொல்லப் போனால் இந்த தேர்தலில் தி.மு.க. களத்திலே இல்லை.இந்த தேர்தல் பா.ஜனதாவுக்கும், காங்கிரஸ் கட்சிக்குமான தேர்தல். நரேந்திரமோடி பிரதமராக வேண்டும் என்பதற்காக நடக்கும் தேர்தல். இந்தியாவில் இன்று ஒரே பிரதமர் வேட்பாளர் மோடி மட்டுமே. காங்கிரஸ் கட்சியில் பிரதமர் வேட்பாளரே இல்லை. இந்தியாவில் வேறு எந்த கட்சியிலும் இல்லை. ஜெயலலிதாவுக்கு மட்டும் பிரதமர் ஆசை வந்துள்ளது.தமிழகத்தில் கடந்த ஆண்டு ரூ.23 ஆயிரம் கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. அவர் பிரதமரானால் இந்தியா முழுவதும் 2 லட்சம் கோடிக்கு மது விற்பனை நடைபெறும். எனவே தான் மோடி பிரதமராக வேண்டும் என்கிறோம்.தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியே கிடையாது. அந்த கட்சிக்கு எந்த தொகுதியிலும் டெபாசிட் கிடைக்காது. தி.மு.க. மக்கள் செல்வாக்கை இழந்து விட்டது. எனவே தமிழகத்தில் நமது கூட்டணிக்கும், அ.தி.மு.க.வுக்கும் தான் போட்டி. இந்த கூட்டணி அமையக் கூடாது என அ.தி.மு.க. எவ்வளவோ திட்டம் போட்டது. தற்போது ஆளும் கட்சியான அ.தி.மு.க. வுக்கு பயம் வந்துவிட்டது.மக்கள் செல்வாக்கை இழந்து விட்டதால் தி.மு.க. இந்த தேர்தலில் 3-வது இடத்துக்கு தள்ளப்படும். இந்த தொகுதியில் மாம்பழம் சின்னத்திற்கு நீங்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும். தாய்மார்களுக்கு ஒரு இனிப்பான செய்தி. இந்த தேர்தல் முடிந்தவுடன் 2 ஆண்டுகளில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அந்த தேர்தலில் நாம்தான் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம். அப்போது நாம் போடும் முதல் கையெழுத்து, பூரண மதுவிலக்கு கொள்கைதான்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு மட்டும் ரூ.800 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் ரூ,ஆயிரத்து 900 கோடிக்கு மது விற்கப்பட்டுள்ளது. மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தால் அந்த பணம் முழுவதும் உங்கள் கைகளில் இருந்திருக்கும்.தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 6 ஆயிரத்து 500 கொலைகள் நடந்துள்ளன. நாள் ஒன்றுக்கு 9 கொலைகள் நடைபெறுகிறது. இந்தியாவில் கற்பழிப்பில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. பொருளாதார வளர்ச்சி 9.4 சதவீதத்தில் இருந்து 4.2 சதவீதமாக குறைந்துள்ளது. விவசாய வளர்ச்சி மைனஸ் 2.2 சதவீதமாக உள்ளது. இங்கு அமைதி, வளம், வளர்ச்சி இல்லை.எனவே மக்கள் மாற்றத்தை நம்பி வாக்களிக்க தயாராகி விட்டனர். இப்போது தேர்தல் நடந்தாலும் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் 30 இடங்களில் வெற்றி பெறும்' என இவ்வாறு அவர் உரையாற்றினார்.
 

அ.தி.மு.க. ஆட்சியில் மது விற்பனையை தவிர எந்த வளர்ச்சியும் தமிழ்நாட்டில் ஏற்படவில்லை; அன்புமணி குற்றச்சாட்டு



ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் ம.தி.மு.க.வை சேர்ந்த கணேசமூர்த்தி வேட்பாளராக போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து முன்னாள் மத்திய மந்திரி டாக்டர் அன்புமணி ராமதாஸ் திங்கள்கிழமை மாலை ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் வேனில் நின்றபடி ஆதரவு கேட்டு வாக்குகள் சேகரித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:–
தற்போது நரேந்திர மோடிதான் பிரதமர் ஆக வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது. காரணம் நரேந்திர மோடி கடந்த 15 ஆண்டுகாலமாக குஜராத் மாநிலத்தின் முதல்–மந்திரியாக இருந்து அந்த மாநிலத்தை முதன்மை மாநிலமாக ஆக்கி உள்ளார். எனவே அவர் நிச்சயமாக இந்தியாவின் பிரதமர் ஆகி நேர்மையான, நிலையான, திறமையான ஆட்சியை தருவார் என்ற நம்பிக்கை பிறந்து விட்டது. கடந்த 47 ஆண்டுகாலமாக தமிழ்நாட்டை மாறி மாறி தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகள் ஆண்டதுபோதும்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு சென்றபோது என் மீது சில கோழைகள் கல் வீசி தாக்கினார்கள். இந்த வன்முறை செயலுக்கு அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. தான் காரணம்.
அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் 3 மாதங்களில் மின்சார தட்டுப்பாடு நீங்கும் என்று ஜெயலலிதா கூறினார். ஆனால் கடந்த 3 ஆண்டுகளாகியும் மின்சார தட்டுப்பாடு நீங்கவில்லை. மாறாக மின்சாரமே இல்லை என்கிற அளவுக்கு தமிழ்நாட்டின் நிலை உள்ளது. ஆனால் தற்போது அமைதி, வளம், வளர்ச்சி என்று கூறி ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
ஆனால் கடந்த 2 ஆண்டுகளில் வறட்சிதான் தமிழ்நாட்டில் ஏற்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி மின்சாரத்துக்கும் தடை ஏற்பட்டு உள்ளது.
வளர்ச்சி என்கிறார்கள். எந்தவித வளர்ச்சியும் தமிழ்நாட்டில் ஏற்படவில்லை. ஆனால் மது விற்பனையில் வளர்ச்சி ஏற்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு 23 ஆயிரம் கோடி ரூபாய் மது விற்பனை நடந்து உள்ளது. இந்த ஆண்டு 30 ஆயிரம் கோடி ரூபாய் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டு மக்களை குடிகாரர்களாக ஆக்கி கொண்டிருக்கிறது இந்த ஆட்சி.
இந்த விற்பனையில் இருந்து கிடைக்கும் பணத்தில் தான் உங்களுக்கு இலவச பொருட்கள் தருகிறார்கள். இந்த இலவசங்கள் நமக்கு தேவையா?. டி.வி வெடிக்கிறது. மிக்சி ஓடவில்லை. கிரைண்டரை தொட்டால் ‘ஷாக்‘ அடிக்கிறது. மின்விசிறி ஓடுகிறது. ஆனால் காற்றுத்தான் வரவில்லை. இந்த பக்கம் பெண்களுக்கு ½ பவுன் தாலியை கொடுத்து விட்டு. அந்தப்பக்கம் மதுவை கொடுத்து அவர்களுடைய தாலியை அறுக்கிறார்கள். எனவே இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். எங்கள் கூட்டணி ஆட்சி அமைத்தால் மதுக்கடைகளை கண்டிப்பாக மூட நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அன்புமணி கூறினார்.

Thursday, April 3, 2014

அன்புமணி ராமதாஸ் கார் மீது கல்வீசி தாக்குதல்... ஒருவர் கைது

தர்மபுரி: தர்மபுரி அருகே அன்புமணி ராமதாஸ் பிரசார வேன் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஆசாமியை கைது செய்ய கோரி கட்சி தொண்டர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று மொரப்பூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். அவர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வியாழக்கிழமை இரவு சுமார் 8 மணி அளவில் தென்கரைக்கோட்டை பகுதியில் பிரசாரத்தை முடித்து விட்டு சந்தப்பட்டி நோக்கி கட்சி நிர்வாகிகளுடன் அன்புமணி ராமதாஸ் பிரசார வேனில் வந்து கொண்டு இருந்தார்.அப்போது பெத்தூர்- பாப்பிசெட்டிப்பட்டி அருகே சந்தப்பட்டி என்ற இடத்தில் வந்தபோது இருளில் மறைந்து இருந்த மர்ம ஆசாமி ஒருவன் அன்புமணி ராமதாஸ் சென்ற பிரசார வேன் மீது சரமாரியாக கல்வீசி தாக்கிவிட்டு ஓடிவிட்டார். இதில் வேனின் முன் பக்க கண்ணாடி உடைந்தது. இதனால் வேன் டிரைவருக்கு காயம் ஏற்பட்டது. டிரைவர் உடனே வண்டியை அந்த இடத்திலேயே நிறுத்தினார். இதில் அன்புமணி ராமதாசுக்கு எந்த பாதிப்பும் இல்லை. மேலும் இது குறித்து கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான கட்சி நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பும், பதற்றமும் நிலவியது. இந்த கல்வீச்சு சம்பவம் குறித்து மொரப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அதிரடிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
சாலை மறியல்அப்போது அங்கு கூடியிருந்த கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர். ‘டாக்டர் அன்புமணி ராமதாஸ் பிரசார வேன் மீது கல்வீசி தாக்கிய மர்ம ஆசாமியை கைது செய்ய வேண்டும். அன்புமணி ராமதாசுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்' என்றும், பாதுகாப்பு வழங்காத போலீசாரை கண்டித்தும் அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அரூர்- சிந்தல்பாடி சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வேட்பாளரின் வேன் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க அரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சம்பத் தலைமையில் ஏராளமான போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
எஸ்.பி. சமாதானம்இந்த நிலையில் மாவட்ட போலீஸ் எஸ்.பி அஸ்ரா கர்க் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர் அன்புமணி ராமதாசிடம் பேசும் போது, கல்வீச்சு சம்பவம் தொடர்பாக ஒருவரை கைது செய்து இருக்கிறோம். இந்த கல்வீச்சில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்வோம் என்று உறுதி அளித்தார்.அன்புமணி வேண்டுகோள்இதைத் தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் அங்கு கூடியிருந்த கட்சி தொண்டர்களிடம், ‘போலீஸ் அதிகாரிகளின் அறிவுரையை ஏற்று கலைந்து செல்ல வேண்டுகிறேன். வன்முறையில் பா.ம.க.வுக்கு எந்த நம்பிக்கையும் கிடையாது. எனவே அனைவரும் கலைந்து செல்லுங்கள்' என்று கூறினார். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன்பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் அன்புமணி ராமதாஸ் வேறு ஒரு கார் மூலம் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.ஒருவர் கைதுஇதற்கிடையே, கல்வீச்சு தொடர்பாக பெத்தூர் காலனி பகுதியை சேர்ந்த மதியழகன் (வயது 40) என்பவரை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். மேலும், சிலரை தேடி வருகிறார்கள்.
 

Tuesday, April 1, 2014

இந்தியாவில் என்னை பார்த்தே மாற்றம் நிகழப்போகின்றது: சொல்கிறார் பாமக வேட்பாளர்


சிதம்பரம் நாடாளுமன்ற தனி தொகுதியில் தேசிய ஜனநாய கூட்டணி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் கே.ஐ.மணிரத்தினம்.
சிதம்பரத்தில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் செவ்வாக்கிழமை பங்கேற்ற  கே.ஐ.மணிரத்தினம் பேசியதாவது:
நான் சிதம்பரம் நடராஜப்பெருமானை நம்புபவன். நான் எங்கோ கையை வைத்து, எங்கோ கொண்டு வந்து நிறுத்தியுள்ளார் நடராஜர். அரசியலில் ஈடுபாடு இல்லாத நேரங்களில் சாதி, மத வேறுபாடின்றி ஏழை, எளிய மக்களுக்கு சமூக சேவைகளை செய்து வந்துள்ளேன். நடராஜப்பெருமான் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமராக வர இருக்கின்ற மோடியின் தலைமையி்ன் கீழ் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக செயல்படுவதற்கு ஒரு வாய்ப்பினை அளித்துள்ளார். அதற்காக நான் வணங்கும் நடராஜப்பெருமானுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகத்திலேயே கட்சியில் சேர்ந்த 5 நிமிடங்களில் ஒரு கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பவன் என்றால், அது நானாகவே இருப்பேன். அதற்காக பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், ஜெ.குரு எம்எல்ஏ ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏப்ரல் 2ம் தேதி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. கூட்டத்தில் நான் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்த தொகுதிக்கு என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை தெரிவிக்கவுள்ளேன். இந்தியாவில் மாற்றம் நிகழும் என்றால், அது என்னை பார்த்தே அந்த மாற்றம் நிகழப்போகின்றது. மாற்றம் வேண்டும் என்பது மணிரத்தினத்திற்கு நிச்சயமாக பொருந்தும், இந்தியாவிற்கும் பொருந்தும். எனவே மாற்றம் நிச்சயமாக நிகழவுள்ளது என கே.ஐ.மணிரத்தினம் தெரிவித்தார்.

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: