Saturday, September 29, 2012

நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.2 ஆயிரமாக உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும்: ராமதாஸ்




தமிழகத்தில் நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.2 ஆயிரமாக உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து பா.ம.ப. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விவசாயிகள் ஏமாற்றம்

தமிழ்நாட்டில் நேரடி நெல் கொள்முதல் திட்டத்தின்படி கொள்முதல் செய்யப்படும் சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு 1,350 ரூபாயும், சாதாரண ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு 1,300 ரூபாயும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பு விவசாயிகளிடையே ஏமாற்றத்தையும், துயரத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் விளைச்சல் அதிகரிக்கிறதோ இல்லையோ, விவசாயிகளின் கடன் சுமை அதிகரித்து வருகிறது. உரம் உள்ளிட்ட வேளாண்மைக்கான அனைத்து இடுபொருட்களின் விலைகளும் கடுமையாக அதிகரித்துள்ள நிலையில், அதற்கேற்றவாறு நெல்லுக்கான கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என வேளாண் அமைப்புகள் மத்திய அரசை வலியுறுத்திய போதிலும், நெல் கொள்முதல் விலையை வெறும் 16 சதவீதம் மட்டுமே மத்திய அரசு உயர்த்தியது.
ரூ.2 ஆயிரமாக உயர்த்த வேண்டும்

இது போதுமானதல்ல என்ற நிலையில், தமிழக அரசாவது ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்கும் என்று விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால், தமிழக அரசோ, வழக்கம் போலவே, மத்திய அரசு அறிவித்த விலையுடன் சன்ன ரக நெல்லுக்கு 70 ரூபாயும், சாதாரண ரக நெல்லுக்கு 50 ரூபாயும் ஊக்கத்தொகையாக சேர்த்து வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் உர வகைகளின் விலை 300 விழுக்காடு உயர்ந்துள்ள நிலையில், நெல் கொள்முதல் விலை வெறும் 30 சதவீதம் மட்டுமே உயர்த்தப்பட்டிருப்பது இயற்கை நீதிக்கு எதிரானது.

இதேநிலை தொடர்ந்தால், விவசாயிகள் நெல் பயிரிடுவதையே விட்டுவிடும் நிலை ஏற்படும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், தமிழகத்தில் கடுமையான உணவுத் தட்டுப்பாடு ஏற்படும். இதைத் தடுக்கவும், உழவர்களின் நலன்களை பாதுகாக்கவும், தமிழகத்தில் நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.2,000 ஆக உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Thursday, September 27, 2012

மருத்துவப் படிப்புக்கு மீண்டும் நுழைவுத்தேர்வு கூடாது: ராமதாஸ்



தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில்,

இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்காக 2013-14ம் ஆண்டு முதல் முதல் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. தேர்வுக்கான அறிவிப்பையும் வெளியிடப்பட்டிருப்பதால், தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கும் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் ஆபத்து உருவாகியிருக்கிறது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் மாநில அரசு மருத்துவக் கல்லூரிகளில் அனைத்திந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் 15% இடங்கள் ஆகியவற்றுக்கு மட்டுமே அனைத்திந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு என்ற பெயரில் தேசிய அளவில் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வந்தது. இது தொடர்பாக தமிழக முதலமைச்சரும் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இதனால் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2013-14ம் ஆண்டு நுழைவுத்தேர்வு நடத்துவதற்காக அமர்த்தப்பட்டிக்கும் அமைப்பான, மத்திய  இடைநிலைக் கல்வி வாரியம் வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவிலுள்ள 355 மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கும்,136 பல் மருத்துவக் கல்லூரிகளில் பி.டி.எஸ். படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கும் அடுத்த ஆண்டு மே மாதம் 5ம் தேதி தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடத்தபடும் என்று தெரிவிக்கபட்டிக்கிறது.

தமிழகத்தில் நுழைவுத்தேர்வை ரத்து செய்வதற்கான சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், இப்படி ஒரு நுழைவுத்தேர்வை அறிவிப்பது உச்சநீதிமன்றத்தை அவமதிப்பதற்கு சமமானதாகும். எனவே, மருத்துவ பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்புகளுக்கான நுழைவுத்தேர்விலிருந்து தமிழகத்திற்கு மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும். அவ்வாறு விலக்கு அளிக்க மத்திய அரசு முன்வராவிட்டால் உச்ச நீதிமன்றத்தை அணுகி தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு பெற மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு இல்லை என்பதை உறுதி செய்ய மத்திய, மாநில அரசுகள்  நடவடிக்கை எடுக்காவிட்டால், அதைக் கண்டித்து, தமிழகத்தில் மிகக் கடுமையான போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் என்று எச்சரிக்கிறேன் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

Monday, September 24, 2012

தமிழ்நாட்டின் மின் உற்பத்தி திட்டங்கள் குறித்த வெள்ளை அறிக்கையை அரசு வெளியிடவேண்டும் என்று ஏற்பட்டுள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர்.ராமதாஸ்


சென்னை: தமிழ்நாட்டின் மின் உற்பத்தி திட்டங்கள் குறித்த வெள்ளை அறிக்கையை அரசு வெளியிடவேண்டும் என்று ஏற்பட்டுள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது :
முடங்கும் பொருளாதாராம்
காற்றாலை மின் உற்பத்தி தடைபட்டதையடுத்து, தமிழகம் முழுவதும் 10 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரை அறிவிக்கபடாத மின்வெட்டு நடைமுறைப்படுத்தபட்டு வருகிறது.கோவை, திருப்பூர் மாவட்டங்கள் உட்பட அனைத்து மாவட்டங்களிலும் தொழில் உற்பத்தியும், விவசாயமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்;மாணவர்கள் தேர்வுக்கு படிக்க முடியவில்லை; மக்கள் நிம்மதியாக தூங்க முடியாமல் அவதிபடுகின்றனர். இதேநிலை நீடித்தால் தமிழகத்தின் பொருளாதார செயல்பாடுகள் அடியோடு முடங்கிவிடும் ஆபத்து உள்ளது.
வெள்ளை அறிக்கை
ஆட்சிக்கு வந்தால் 3 மாதங்களில் மின்வெட்டை போக்குவதாக உறுதி அளித்த முதலமைச்சரால், கடந்த 15 மாதங்களில் ஒரு மெகாவாட் மின்சாரத்தைக் கூட கூடுதலாக உற்பத்தி செய்ய முடியவில்லை. திறமையற்ற நிர்வாகத்தின் காரணமாக தமிழகத்தின் மின் உற்பத்தியை கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 2300 மெகாவாட் குறைத்தது தான் அ.தி.மு.க. அரசின் சாதனை ஆகும். மின்வெட்டை போக்குவதில் தமிழக அரசு தோல்வி அடைந்து விட்டதை சென்னை உயர்நீதிமன்றமும் சுட்டிக்காட்டியிருக்கிறது.
மக்களின் எந்த பிரச்சினையையும் தீர்ப்பதில் அக்கறை காட்டாத தமிழக அரசு , தொடர் மின் வெட்டால் மக்கள் படும் துயரங்களை பார்த்த பிறகாவது, அதை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி தமிழகத்தில் மின்வெட்டே இருக்காது என்பதை உறுதி செய்ய நீண்ட கால திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இதற்காக தமிழகத்தின் ஒட்டுமொத்த மின்தேவை எவ்வளவு? மின் உற்பத்தி எவ்வளவு? நடைமுறையில் உள்ள மின் திட்டங்கள் எத்தனை? அந்த திட்டங்கள் எந்த கட்டத்தில் உள்ளன? என்பது குறித்த வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும்.
மின் உற்பத்தித்துறை
தமிழ்நாட்டில் 6 மின் திட்டங்கள் அறிவிக்கபட்ட நிலையிலேயே, எந்த முன்னேற்றமும் இல்லாமல் கிடப்பில் போடபட்டிருக்கின்றன. இந்த திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தி, விரைவாக செயல்படுத்தி முடிப்பதற்காக, மின் உற்பத்தித் துறை என்ற பெயரில் தனித்துறையை ஏற்படுத்தி அதற்கு திறமையான அமைச்சரையும் , செயலாளரையும் தனியாக அமர்த்த வேண்டும். அப்போது தான் தமிழகத்தின் மின்வெட்டு பிரச்சினைக்கு உடனடியாக இல்லாவிட்டாலும், அடுத்த ஒரு சில ஆண்டுகளிலாவது நிரந்தர தீர்வு காண முடியும். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Sunday, September 23, 2012

கன்னட அடிப்படைவாத தலைவர் போல செயல்படுவதா... கிருஷ்ணாவுக்கு ராமதாஸ் கண்டனம்

Lugo s fate highlights Paraguay lan...
Ads by Google
Windows Server 2012 microsoft.com/ws2012
Built From The Cloud Up To Be More Available, Flexible & Efficient.
சென்னை: ஒட்டு மொத்த இந்தியாவிற்குமான அமைச்சராக இருக்கும் மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, ஏதோ கன்னட அடிப்படைவாத அமைப்பின் தலைவரைப் போல செயல்படுவது சரியல்ல. இதற்காக அவரை பிரதமர் கண்டிப்பதுடன், தமிழகத்திற்கு உடனடியாக தண்ணீர் திறந்து விடாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக அரசை எச்சரிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் இல்லாமல் தமிழக விவசாயிகள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு மறுத்து விட்டது. இது தொடர்பாக காவிரி ஆணையத்தின் தலைவர் என்ற முறையில் பிரதமர் பிறப்பித்த உத்தரவை ஏற்க கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டார் மறுத்து விட்டார்.
பிரதமரின் பிரதிநிதியாக அவருக்கு அறிவுரை கூறி, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடச் செய்ய வேண்டிய நிலையில் உள்ள மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, அவ்வாறு செய்யாமல், காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண தமிழக அரசு உச்ச நீதிமன்றத்திற்கு செல்லக் கூடாது என்றும், இருக்கும் நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக இரு மாநில அரசுகளும் பேச்சு நடத்த வேண்டும் என்றும் புதிய யோசனை கூறியிருக்கிறார்.
காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு நீதிமன்றம் மூலமாக நீதி கிடைப்பதை தடுக்கவே இவ்வாறு அவர் கூறியிருக்கிறார். காவிரி பிரச்சினை தொடர்பாக இரு மாநிலங்களுக்கிடையே இதுவரை 40க்கும் மேற்பட்ட முறை பேச்சு நடத்தப் பட்டிருக்கும் போதிலும் எந்த தீர்வும் ஏற்படவில்லை. கர்நாடக முதல்வராக எஸ்.எம்.கிருஷ்ணா இருந்த போதுகூட பலமுறை பேச்சு நடத்தி எந்த பயனும் ஏற்படவில்லை. அதுமட்டுமின்றி, 2003ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் ஆணையிட்டும் தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுத்ததற்காக உச்ச நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்டவர் தான் இந்த கிருஷ்ணா.
காவிரி பிரச்சினையில் கர்நாடக ஆட்சியாளர்கள் இருதரப்பு பேச்சுக்களுக்கும், நீதிமன்றத் தீர்ப்புகளுக்கும் இந்த அளவுக்குத் தான் மதிப்பளித்திருக்கிறார்கள் எனும் போது, எந்த அடிப்படையில் மீண்டும் பேச்சு நடத்த தமிழகம் முன்வர வேண்டும் என்று கிருஷ்ணா கோருகிறார் என்பது தெரியவில்லை.
பேச்சுவார்த்தை என்ற பெயரில் இன்னும் சில வாரங்களை ஓட்டிவிட்டால், தமிழகத்திற்கு சம்பா சாகுபடிக்கு தண்ணீர் தராமல் ஏமாற்றிவிடலாம் என்ற சதி தான் கிருஷ்ணாவின் யோசனைக்கு பின்னணியில் இருக்கும் காரணம் என்றால் அது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
கிருஷ்ணாவின் இந்த யோசனையை தமிழக அரசு ஒரு போதும் ஏற்கக்கூடாது. பிரதமர் கூறிய வினாடிக்கு 9000 கன அடி என்பதற்கு பதிலாக வினாடிக்கு 4500 கன அடி தண்ணீரை காவிரியில் திறந்துவிடலாம் என்றும் கிருஷ்ணா யோசனை தெரிவித்துள்ளார். இந்த நீர் காவிரி ஆற்றின் மணற்பரப்பை நனைப்பதற்குக்கூட போதாது. இது ஒருபுறமிருக்க பிரதமரே அளித்த தீர்ப்பை அவருக்கு கீழ் உள்ள அமைச்சரான கிருஷ்ணா திருத்த முயல்வது கண்டிக்கத்தக்கது.
ஒட்டு மொத்த இந்தியாவிற்குமான அமைச்சராக இருக்கும் கிருஷ்ணா, ஏதோ கன்னட அடிப்படைவாத அமைப்பின் தலைவரைப் போல செயல்படுவது சரியல்ல. இதற்காக அவரை பிரதமர் கண்டிப்பதுடன், தமிழகத்திற்கு உடனடியாக தண்ணீர் திறந்து விடாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக அரசை எச்சரிக்க வேண்டும்.
அதே நேரத்தில், காவிரி பிரச்சினையில், கர்நாடகத்தில் உள்ள கட்சிகள் அனைத்தும் அரசியல் வேறுபாடுகளை மறந்து, ஓரணியில் கைகோர்த்து செயல்பட்டு வரும் நிலையில், அவர்களை எதிர்கொண்டு, தமிழகத்திற்கு நீதி பெற்றுத்தர தமிழக கட்சிகளும் ஒன்றுபட வேண்டும். இதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை உடனடியாக தமிழக முதல்வர் கூட்ட வேண்டும் என்று ராமதாஸ் கோரியுள்ளார்.

Thursday, September 20, 2012

பிரமதர் சொல்லியும் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கலைக்க வேண்டும்: ராமதாஸ், கோரிக்கை

சென்னை: பிரதமர் ஆணையிட்ட பிறகும் தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசைக் கலைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பிரதமர் தலைமையில் நடந்த காவிரி நதிநீர் ஆணையக் கூட்டம் தோல்வியில் முடிந்திருக்கிறது. தமிழகத்துக்கு வினாடிக்கு 9,000 கன அடி தண்ணீரைத் திறந்துவிடும்படி கர்நாடகத்துக்குப் பிரதமர் ஆணை பிறப்பித்துள்ளார். அது தமிழகத்தின் தேவையில் பாதியைக்கூட பூர்த்தி செய்யாது. ஆனால் அதைக்கூட கர்நாடக அரசு ஏற்க மறுத்துவிட்டது.
கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 4 அணைகளில் 3 அணைகள் நிரம்பி வழிகின்றன. கிருஷ்ணராஜ சாகர் அணையும் நிரம்பி வரும் நிலையில் தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீரைக்கூட தர முடியாது என கர்நாடகம் கூறுவது கண்டிக்கத்தக்கது.
கர்நாடகத்தைப் போலவே தமிழகத்திலும் கடுமையான மின் தட்டுப்பாடு நிலவுவதால் நெய்வேலி உள்பட எந்த மின் நிலையத்தில் இருந்தும் கர்நாடகத்துக்கு மின்சாரம் வழங்க முடியாது என்று தமிழக அரசு மறுத்தால் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கே அச்சுறுத்தலாக அமையும். எனவே, பிரதமர் அளிக்கும் தீர்ப்பைக் கர்நாடக அரசு ஏற்க வேண்டும். அப்படி ஏற்க மறுப்பது மத்திய அரசுக்கு மட்டுமின்றி, அரசியல் சட்டத்துக்கே விடப்பட்ட சவாலாக அமையும்.
இதற்காக இந்திய அரசியல் சட்டத்தின் 365-வது பிரிவைப் பயன்படுத்தி கர்நாடக அரசைக் கலைக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்

மக்களுக்கு கெடுதல் செய்வதில்தான் மத்திய, மாநில அரசுகளுக்கு போட்டி நிலவுகிறது: டாக்டர் ராமதாஸ் பேச்சு

சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதை எதிர்த்த முதல் கட்சி பா.ம.க.தான் என்றும், இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தில் பா.ம.க. கலந்து கொள்ளும் என்றும் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

சமையல் கியாசுக்கு விதித்துள்ள கட்டுப்பாடு மற்றும் டீசல் விலை உயர்வு ஆகியவற்றை உடனடியாக திரும்பப் பெறக்கோரியும், தொடர்ந்து மத்திய அரசை கண்டித்தும் பா.ம.க. சார்பில் சென்னை மெமோரியல் ஹால் எதிரில் 19.09.2012 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-
மக்களுக்கு நன்மை செய்வதில்தான் மத்திய, மாநில அரசுகளுக்கு போட்டி இருக்கவேண்டும். ஆனால், இப்போது கெடுதல் செய்வதில்தான் போட்டி நிலவுகிறது. ஆட்சிக்கு வந்த மாநில அரசு மக்கள் மீது ரூ.20 ஆயிரம் கோடி வரி விதித்தது. மத்திய அரசு ரூ.2 லட்சம் கோடி வரி விதித்தது.

ஜனநாயக முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு வரும்போது ஒரு லிட்டர் டீசல் ரூ.32 ஆக இருந்தது. தற்போது 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் விலை 48 சதவீதம் உயர்ந்துள்ளது. டீசல் விலையில் 17 சதவீதம் வரி உள்ளது. தற்போது சிலிண்டர் கட்டுப்பாடு, டீசல் விலை உயர்வால் மக்களை மேலும் நசுக்குகிறார்கள்.
சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதற்கு முதன் முதலில் எதிர்ப்பு தெரிவித்த கட்சி பா.ம.க.தான். தொடர்ந்து பல போராட்டங்களையும் நடத்தி வந்திருக்கிறது. சில்லரை வணிகத்தை நம்பி சுமார் 4 கோடி பேர் இருக்கிறார்கள். வால்மார்ட் போன்ற அன்னிய நிறுவனங்கள் சில்லரை வணிகத்தில் நுழைந்தால், 22 லட்சம் பேருக்கு மட்டுமே வேலை கிடைக்கும்.

விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும், நுகர்வோர்களுக்கு நன்மை என்பதெல்லாம் ஏமாற்று வேலை. சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டால் பன்னாட்டு நிறுவனங்களும், அமெரிக்காவும் மட்டுமே பயனடையும். எனவே, சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டு அனுமதியை ரத்து செய்யவேண்டும். இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் முழு அடைப்புக்கு பா.ம.க. ஆதரவு அளித்து கலந்து கொள்ளும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.

Tuesday, September 18, 2012

ராமதாஸ் நாளை சென்னையில் ஆர்ப்பாட்டம்


பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’விலைவாசி உயர்வால் சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 5 உயர்த்தப்பட் டிருப்பதால், அரிசி, காய்கறி உள்ளிட்ட அனைத்து வகையான அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் உயர்ந்து விட்டன.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் இனி ஆண்டு 6 எரிவாயு சிலிண்டர்கள் மட்டுமே வழங்கப்படும் என்பதும் மிகவும் பிற்போக்குத்தனமான நடவடிக்கை ஆகும். இதனால் விறகு, கரி போன்ற சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் எரிபொருள் ஆதாரங்களை தேடிச் செல்லும் நிலைக்கு மக்கள் தள்ளப்படுவர்.

மாநிலங்களவைத் தலைவர், மக்களவைத் தலைவர், மத்திய மந்திரிகள் ஆகியோருக்கு ஆண்டுக்கு 100 முதல் 200 எரிவாயு சிலிண்டர்கள் வரை மானிய விலையில் வழங்கும் அரசு, மக்களுக்கு மட்டும் ஆண்டுக்கு 6 சிலிண்டர் கள்தான் எனக் கட்டுப்பாடு விதிப்பது கண்டிக் கத்தக்கது.

எனவே டீசல் விலை உயர்வு, சயைமல் எரிவாயு சிலிண்டர்கள் மீதான கட்டுப்பாடு, சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டிற்கு அனுமதி போன்ற மக்களை பாதிக்கும் நடவடிக்கைகளை திரும்பப்பெற வலியுறுத்தி பா.ம.க. சார்பில் சென்னையில் நாளை (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு தொடர் முழக்க போராட்டம் நடைபெறும்.
இப்போராட்டத்திற்கு நான்  தலைமை ஏற்கிறேன். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி இடது சாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் நாளை மறுநாள் (20-ந்தேதி) பொது வேலை நிறுத்தத்திற்கும் பா.ம.க. முழு ஆதரவு அளிக்கும். ஆங்காங்கே நடைபெறும் போராட்டங்களில் பா.ம.க. வினரும் கலந்து கொள்வார்கள்’’ என்று கூறியுள்ளார்.

Monday, September 17, 2012

அடுத்த ஆண்டு சிறை நிரப்பும் போராட்டம்: ராமதாஸ்

தமிழ்நாடு முழுவதும் வன்னியர் சங்கம் சார்பில் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கேட்டு கோரிக்கை ஆர்ப்பாட்டம் ஒவ்வொரு தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நகரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் கலந்துகொண்டார். போளூர் அண்ணா சிலையில் இருந்து கோரிக்கை பேரணி தொடங்கி தாலுகா அலுவலகம் முடிவடைந்தது. அங்கு பேசிய ராமதாஸ்,
வன்னியர் சங்கம் தொடங்கப்பட்டு 7 ஆண்டுகள் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது மாநில அரசு போராட்டத்தை ஒடுக்க துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் 21 பேர் உயிரிழந்தனர். அதன்பின் வந்த திமுக அரசு நியாயத்தை புரிந்துகொண்டு 107 சாதிகளை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சாதியாக பட்டிய-ட்டு 20 சதவீதம் இடஒதுக்கீடு தந்தது. இதன் மூலம் வன்னியர்களுக்கு 7ல் இருந்து 8 சதவீதம்தான் இடஒதுக்கீடு கிடைக்கிறது. 7 கோடி பேர் வசிக்கும் தமிழகத்தில் இரண்டரை கோடி வன்னியர்களுக்கு இந்த அரசாங்கங்கள் துரோகம் இழைத்துள்ளன.

எங்களுடைய நோக்கம் தனிஇடஒதுக்கீடு தேவை என்பதே. மீண்டும் ஒரு போராட்டத்தை 25 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் துவங்கி உள்ளோம். தற்போது அறவழியில் நடக்கும் போராட்டத்தை உணர்ந்து எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் அடுத்த ஆண்டு சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்றார்.
இதேபோல் வந்தவாசியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேராசிரியர் செல்வக்குமார் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Sunday, September 16, 2012

போர்குற்ற விசாரணை: இலங்கை வலையில் இந்தியா விழக்கூடாது: ராமதாஸ்

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரானப் போரின் போது சிங்களப் படையினர் நடத்திய போர்க்குற்றங்கள் தொடர்பான காலமுறை மதிப்பீட்டாய்வு விசாரணையில் இலங்கை விரிக்கும் வலையில் இந்தியா விழக்கூடாது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரானப் போரின் போது சிங்களப் படையினர் நடத்திய போர்க்குற்றங்கள் தொடர்பாக வெளிப்படையான விசாரணை நடத்துவதற்கான தீர்மானம் ஐ.நா.மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் கடந்த மார்ச் 22ம் தேதி நிறைவேற்றப்பட்டது. அதன்பின் ஆறு மாதங்கள் ஆன போதிலும், இலங்கையில் நிலவும் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மாறாக தமிழர்கள் மீதான மனித உரிமை மீறல்களும், அடக்குமுறைகளும் அதிகரித்திருக்கின்றன.

இதற்காக இலங்கை அரசு மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற முழக்கங்கள் தமிழகத்தில் அதிகரித்துள்ள நிலையில், இலங்கையில் போருக்கு முன்பும், போரின் போதும், போருக்குப் பிறகும் (2008 2012) மனித உரிமைகள் எவ்வாறு மதிக்கப்பட்டன என்பது குறித்த முழுமையான காலமுறை மதிப்பீட்டாய்வு, ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அக்டோபர் 22ம் தேதி முதல் நவம்பர் 5ம் தேதி வரை நடைபெறவிருக்கும் காலமுறை மதிப்பீட்டாய்வு பணிக்குழுவின் 14 வது கூட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது.

இக்கூட்டத்தின் போது நவம்பர் 1ம் தேதி இலங்கை மீதான குற்றச்சாற்றுகள் குறித்த விசாரணை நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் நவம்பர் 5ம் தேதி அறிவிக்கப்படவுள்ளன. இந்த விசாரணையை நடத்தும் பொறுப்பு இந்தியா, ஸ்பெயின், பெனின் ஆகிய நாடுகளிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பல்வெறு நாடுகளும், மனித உரிமை அமைப்புகளும் தங்களின் கருத்துக்கள், இலங்கை மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்த பரிந்துரைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய 46 அறிக்கைகளை ஐ.நா.விடம் அளித்துள்ளன.

இலங்கை அரசும் 30 பக்கங்கள் கொண்ட விளக்க அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இந்தியாவிலிருந்து பசுமைத் தாயகம் அமைப்பு மட்டுமே அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில், இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், இதற்காக ஐ.நா. மனித உரிமை ஆணையரின் கள அலுவலகத்தை இலங்கையில் அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறது.

இலங்கை அரசு தாக்கல் செய்த அறிக்கையும், தற்போது இலங்கை சென்றுள்ள ஐ.நா.மனித உரிமை ஆணையக் குழுவிடம் இலங்கை அளித்துள்ள விளக்கமும் ஐ.நாவை திருப்திப்படுத்தவில்லை.

இலங்கை அளித்த அறிக்கையில் பொய்கள் மட்டுமே இருப்பது தான் இதற்கு காரணமாகும். இலங்கை மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வெறு நாடுகளும் வலியுறுத்தி வருவதால்
இலங்கைக்கு எதிராக பன்னாட்டு விசாரணைக்கு ஆணையிடப்பட வாய்ப்புள்ளது. ஆனால், இதை தடுப்பதற்கான முயற்சிகளில் இலங்கை ஈடுபட்டிருக்கிறது. விசாரணைக்குழுவில் இடம்பெற்றுள்ள ஸ்பெயினும், பெனினும் ஏற்கனவே மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தவை என்பதால், இம்முறையும் நடுநிலையாக செயல்பட்டு தீர்ப்பளிக்க முடிவு செய்துள்ளன.

ஆனால், கடந்தமுறை தங்களுக்கு எதிரான தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவந்து,அதை நீர்த்துப் போகச்செய்த இந்தியா, இம்முறையும் தங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு தங்களை காக்கும் என்று இலங்கை அரசு நம்புகிறது.

இதற்காக பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து ஆதரவை திரட்டவே இலங்கை அதிபர் இராசபட்சே நாளை மறுநாள் (செப்டம்பர் 18) இந்தியா வருகிறார். போர் முடிந்த பிறகு இலங்கைக்கு ஆதரவாக செயல்பட்டதால் உலக அரங்கில் இந்தியாவுக்கு ஏற்கனவே அவப்பெயர் ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை கொன்று குவித்த இலங்கைக்கு ஆதரவாக மீண்டும் ஒருமுறை இந்தியா செயல்பட்டால் இனப்படுகொலைகளுக்கு துணை போகும் நாடு என்ற தீராப்பழி ஏற்பட்டுவிடும்.

ஐ.நா. நெருக்கடியிலிருந்து இந்தியாவின் உதவியுடன் தப்பிக்கும் நோக்குடன் இலங்கை விரித்துள்ள வலையில் இந்தியா விழுந்துவிடக்கூடாது. எனவே, இந்தியா வரும் இராஜபட்சவேவை சந்திப்பதை பிரதமர் தவிர்க்க வேண்டும். மேலும், இப்பிரச்சினையில் இந்தியா நடுநிலையுடன் செயல்படும் என்று வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா எடுக்காமல் தடுக்கும் பொறுப்பு மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திமுகவுக்கும், மாநிலத்தை ஆளும் அ.தி.மு.க.வுக்கும் உண்டு.

இதற்கு முன், ஐ.நா. மனித உரிமை ஆணைய வாக்கெடுப்பின்போது, இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்க முடிவு செய்திருந்த மத்திய அரசு, தமிழக கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு வலியுறுத்தியதால் தான் கடைசி நேரத்தில் முடிவை மாற்றிக் கொண்டு இலங்கைக்கு எதிராக வாக்களித்தது.

அதேபோல், இம்முறையும் இலங்கைக்கு எதிரான விசாரணையின் போது, நடுநிலையாக செயல்பட்டு இலங்கைக்கு உரிய தண்டனை பெற்றுத் தரும்படி, மத்திய அரசையும்,பிரதமரையும் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்தவேண்டும் என்று கூறியுள்ளார்.

திராவிட கட்சிகளை பாமக விரட்டியே தீரும்: டாக்டர் ராமதாஸ்

சென்னை: திராவிட கட்சிகளை விரட்டியடிப்பதுதான் பாட்டாளி மக்கள் கட்சியின் வேலை என்று அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
நெசப்பாக்கத்தில் நடைபெற்ற பாமக பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர், சுகாதாரமான காற்று, நல்ல மருத்துவ வசதி, தரமான சாலை வசதி வேண்டும் என்றுதான் பா.ம.க. போராடுகிறது. ஆனால் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இலவசங்கள், சினிமா, மது ஆகியவற்றை கொடுத்து தமிழகத்தை திராவிட கட்சிகள் சீரழித்துவிட்டன. திராவிட கட்சிகளை விரட்டுவதே என் வேலை. அந்த பணியை பா.ம.க.வால் மட்டும்தான் செய்ய முடியும்.
நாங்கள் தமிழகத்தை வளர்ச்சி அடைய செய்துள்ளோம் என்று மார் தட்டும் திராவிட கட்சிகளுக்கு சவால் விடுக்கிறேன். தனித்து போட்டியிட தயாரா நாங்கள் தனித்து போட்டியிட போவதாக அறிவித்து விட்டோம் இனிமேல் என்றைக்கும் எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது என்றார்.

Friday, September 7, 2012

முதலமைச்சர் ஜெயலலிதா மக்களை ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிக்கிறார்! ராமதாஸ் குற்றச்சாட்டு!

கூடங்குளம் மக்கள் மீது அடக்குமுறை செய்யாமல், அவர்களுடன் தமிழக முதல்வர் நேரில் பேச வேவண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அனுப்பியுள்ள அறிக்கையில்,

 கூடங்குளம் பகுதி மக்களின் உயிருக்கும், வாழ்வாதாரத்துக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அணுமின்நிலையத்தை திறக்கக்கூடாது என்று வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கடந்த ஓராண்டிற்கும் மேலாக அறவழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆனால், மத்திய, மாநில அரசுகள் மக்களின் உணர்வுகளை காலில் போட்டு மிதித்துவிட்டு அணு உலையை திறப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன.

இதையடுத்து, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிப்பதற்காக அப்பகுதி மக்கள் இடிந்தகரையில் நேற்று கூடி ஆலோசனை நடத்தினர். இதில் பங்கேற்பதற்காக வந்த அப்பகுதி மக்களை விஜயாபதி என்ற இடத்தில் காவல்துறையினர் தடுத்தி நிறுத்தியுள்ளனர். அந்த பகுதியில் பதற்றம் ஏற்படுவதற்கான எந்த சூழலும் இல்லாத நிலையில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்களையும், தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வாகனங்கள், கண்ணீர்புகை குண்டுகளை வீசும் ஊர்திகள் ஆகியவற்றையும் நிறுத்தி மக்களை காவல்துறை அச்சுறுத்தியுள்ளது. இடிந்தகரைக்குள் நுழைவதற்கான அனைத்து பாதைகளையும் மணல் மூட்டைகளை அடுக்கி அடைத்துள்ளனர். ஓராண்டிற்கும் மேலாக கூடங்குளம் மக்கள் நடத்தி வரும் போராட்டத்தில் சிறு வன்முறை கூட நிகழாத நிலையில், காவல்துறையினரே வன்முறையைத் தூண்டும் வகையில் செயல்பட்டுள்ளனர். காவல்துறையினரின் இந்த அடக்குமுறை கண்டிக்கத்தக்கது.

கூடங்குளம் விவகாரம் தொடர்பான பேச்சுக்களின் போது, அணு உலையை சுற்றியுள்ள பகுதிகளில் நடைமுறைப் படுத்தபட்டுள்ள 144 தடை உத்தரவை 2 கி.மீ சுற்றளவுக்குள் குறைப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்து , அது நடைமுறைப்படுத்தபட்டது. ஆனால், எந்தவித முன்னறிவிப்புமின்றி, தடையாணையை 7 கி.மீ தொலைவுக்கு நீட்டித்து மக்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்கும் தமிழக அரசு தடை விதித்திக்கிறது.

உள்ளாட்சித் தேர்தலின் போது தூத்துக்குடியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா,"கூடங்குளம் பிரச்சினையைப் பொறுத்தவரை மக்களின் கருத்துக்களுக்கு தமிழக அரசு மதிப்பளிக்கிறது. இப்பிரச்சினையில் நான் உங்களில் ஒருத்தியாக இருப்பேன்'' என்று உறுதியளித்திருந்தார். ஆனால், உள்ளாட்சித் தேர்தலும், சங்கரன்கோவில் இடைத்தேர்தலும் முடிவடைந்த பின்னர், தனது நிலைப்பாட்டை தலை கீழாக மாற்றிக்கொண்டு மக்களை ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிக்கிறார்.

ஆட்சி அதிகாரத்தை வைத்துக் கொண்டு மக்களை அடக்கும் முயற்சியில் ஈடுபட்டால், தேர்தலின் போது வாக்குச்சீட்டு என்ற அதிகாரத்தை பயன்படுத்தி மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்பதை முதல்வர் உணரவேண்டும். கூடங்குளம் பகுதி மக்களை மிரட்டுவதை விட்டுவிட்டு, முதலமைச்சர் அவர்கள் இடிந்தகரைக்கு நேரில் சென்று பொதுமக்களுடன் பேச்சு நடத்தி, பிரச்சினைக்கு சுமூகத் தீர்வு காண முன்வர வேண்டும். கூடங்குளம் அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பில் வரும் 9ம் தேதி கூடங்குளத்தில் நடைபெறவிருக்கிறது. அணு உலை முற்றுகைப் போராட்டத்துக்கு  பா.ம.க. முழு ஆதரவு அளிக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறப்படடுள்ளது.

Monday, September 3, 2012

இஸ்ரோவில் கேரளத்தினர் ஆதிக்கம்.. தமிழர்களுக்கு உரிய அங்கீகாரம் இல்லை: ராமதாஸ்

நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே மகேந்திரகிரியில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் (இஸ்ரோ) கேரள அதிகாரிகளின் ஆதிக்கமே அதிகமாக உள்ளது. இங்கு பணிபுரியும் தமிழர்களின் ஆராய்ச்சிகளுக்கும், கண்டுபிடிப்புகளுக்கும் உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
நாகர்கோவிலில் பாமக சார்பில் மது ஒழிப்பு விழிப்புணர்வு கண்காட்சி நடக்கிறது. இந்த கண்காட்சியை திறந்து வைத்து ராமதாஸ் நிருபர்களிடம் கூறுகையில்,
தமிழகத்தை இன்று மது அரக்கன் சீரழித்து கொண்டிருக்கிறான். அவனிடம் இருந்து நாட்டை பாதுகாக்க பாமக போராடி வருகிறது. கட்சி தொடங்கிய காலத்தில் இருந்தே இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளோம்.
குமரி மாவட்டத்தில் 148 டாஸ்மாக் கடைகள் உள்ளன. ஒரு நாளைக்கு ரூ.1 கோடிக்கு மது விற்பனை நடக்கிறது. கடந்த 2011ம் ஆண்டில் மட்டும் இங்கு ரூ.584 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. இந்த ஆண்டு இதனை ரூ.600 கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மகேந்திரகிரியில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் கேரள அதிகாரிகளின் ஆதிக்கமே அதிகமாக உள்ளது. இதனால் இங்கு பணிபுரியும் தமிழர்களின் ஆராய்ச்சிகளுக்கும், கண்டுபிடிப்புகளுக்கும் உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை.
இலங்கைத் தமிழர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என பாஆமக ரம்பம் முதலே குரல் கொடுத்து வருகிறது. இப்போது இவர்களுக்காக கருணாநிதி நடத்திய டெசோ மாநாட்டால் எந்த பலனும் இல்லை. அவர் கண் துடைப்புக்காகவே இந்த மாநாட்டை நடத்தினார். இலங்கை தமிழர்களுக்கு இதனால் எந்த பயனும் இல்லை.
இந்தியாவில் இலங்கை ராணுவத்தினருக்கு பயிற்சி கொடுக்க கூடாது. தமிழக மக்களின் எதிர்ப்பை மத்திய அரசு புரிந்து நடக்க வேண்டும்.
இந்தியாவுக்கு ராஜபக்சேவை அழைத்திருக்கும் பாஜகவுக்கு எங்கள் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம்.
குமரி மாவட்ட மீனவர்கள் கேரள துறைமுகங்களில் மீன் பிடிக்க படகுகளில் சென்றால் அங்கு உபயோக கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கேரள மீனவர்கள் குமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் துறைமுகத்தை பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் அவர்களிடம் தமிழக அரசு கட்டணம் வசூலிப்பது இல்லை.
நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பாக பாராளுமன்றத்தை பாஜக முடக்குவது சரியல்ல. அவர்கள் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த முன் வரவேண்டும். அதில் திருப்தி ஏற்படவில்லை என்றால் மக்கள் மன்றத்தில் தெரிவித்து போராட வேண்டும். அதை விடுத்து நாடாளுமன்றத்தை முடக்குவதை ஏற்க முடியாது என்றார் ராமதாஸ்.

Sunday, September 2, 2012

இந்தியா வரும் ராஜபக்சவை கடுமையான வார்த்தையால் எச்சரிக்க வேண்டும்: ராமதாஸ்

சென்னை: இந்தியாவுக்கு வருகை தர உள்ள இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவை மிகக் கடுமையான வார்த்தைகளால் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் எச்சரிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் வாழும் தமிழர்கள் அனைவரும் சுயமரியாதையுடனும், அரசியல் அதிகாரத்துடனும் வாழ்வதற்கு தனித் தமிழீழம் அமைப்பது தான் ஒர் தீர்வு என்ற முழக்கம் உலகம் முழுவதும் தீவிரமடைந்து வருகிறது.
இந்நிலையில், தமிழர்கள் வாழும் பகுதிகளிலிருந்து சிங்களப் படைகளை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்ட இலங்கை அரசு, அண்மைக் காலமாக போரில் பாதிக்கப்பட்ட தமிழ்ப்பெண்களையும், போருக்குப் பின்னர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட பெண் போராளிகளையும் விசாரணை என்ற பெயரில் முகாம்களுக்கு அழைத்துச் செல்லும் சிங்களப் படையினர் அவர்களை பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்குவதாகவும், இதையெல்லாம் எதிர்த்து கேட்க முடியாத தமிழ்ப்பெண்கள் நடைபிணங்களாக வாழ்ந்து வருவதாகவும், நூற்றுக்கணக்கான பெண்கள் அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழ் இனத்தை அடியோடு அழித்துவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் திட்டமிட்டு இத்தகைய கொடுமைகளை அரங்கேற்றி வருகின்றது இலங்கை அரசு. தமிழகத் தமிழர்களின் தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழ்ப்பெண்களுக்கு இழைக்கப்படும் இந்தக் கொடுமைகளுக்கு முடிவு கட்ட வேண்டிய கடமையும், பொறுப்பும் இந்திய அரசுக்கு உண்டு. வரும் 21ந் தேதி இந்தியா வரும் இலங்கை அதிபர் இராஜபக்சேவை கடுமையான வார்த்தைகளால் பிரதமர் மன்மோகன்சிங் எச்சரிக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி இம்மாதம் 10ம் தேதி முதல் 28ம் தேதி வரை ஜெனிவாவில் நடைபெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் 21வது கூட்டத்திலும் இதுகுறித்து பிரச்சினை எழுப்பி இலங்கையை உலக நாடுகள் கண்டிக்கவும், எச்சரிக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Saturday, September 1, 2012

சிறை செல்லும் போராட்டம்: ஜி.கே. மணி


மதுக்கடைகளை மூடக்கோரி டிசம்பர் மாதம் சிறைசெல்லும் போராட்டம் நடத்தப்போவதாக, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி கூறினார்.
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி சனிக்கிழமை (01.09.2012) மதுரை வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

மதுகுடிப்பது மனிதனை அழிக்கும். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கூலிப்படை, ஆள்கடத்தல், வன்முறை, தீவிரவாதம் போன்றவை மேலோங்க மதுதான் காரணம். எனவே தான் பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கியது முதல் இன்று வரை, மதுக்கடைகளை மூடவேண்டும் என்று கூறிவருகிறோம். மதுக்கடைகளால் அரசுக்கு வருவாய் கிடைக்கும் என்று அரசு கூறுகிறது.

மக்கள் நலன்கருதி மதுவை ஒழிப்பதற்கு மாற்றுத் திட்டத்தை அரசுக்கு சொல்லிவருகிறோம். மதுவை ஒழிக்க வேண்டும், மதுக்கடைகளை மூடவேண்டும் என்று பாட்டாளிமக்கள்கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.

டிசம்பர் மாதம் சிறைக்கு செல்லும் போராட்டம் நடைபெறும். மதுரை தானப்பமுதலி தெருவில் உள்ள எஸ்.எம்.எஸ்.மகாலில் வருகிற 4-ந்தேதி மதுஒழிப்பு விழிப்புணர்வு கண்காட்சி, கருத்தரங்கு நடத்தப்படுகிறது. அன்று காலை 10மணிக்கு எனது தலைமையில். நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொடங்கி வைக்கிறார் என்றார்.

பாராளுமன்றத்தேர்தலில் 15 இடங்களில் வெற்றி பெறுவோம்: ஜி.கே.மணி நம்பிக்கை

பாராளுமன்றத் தேர்த-ல் 15 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று பாமக தலைவர் ஜி.கே.மணி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி சனிக்கிழமை (01.09.2012) மதுரை வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தமிழகத்தில் மின்வெட்டால் தொழிற்சாலைகள், பொதுமக்கள், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். செயல்படாமல் உள்ள மின்திட்டங்களை உடனே செயல்படுத்த வேண்டும். நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கு வழங்க வேண்டும். புதிய மின் இணைப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்தக் கூடாது.

மழை இல்லாததால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். வறட்சி மாநிலமாக மத்திய அரசு அறிவிக்கவேண்டும். தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை மத்தியஅரசு தடுத்திடவேண்டும். கச்சத்தீவை திரும்பப்பெற வேண்டும்.

கிரானைட் முறைகேடுகளில் அனைத்து உண்மைகளையும் கண்டறிய வேண்டும். மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் குப்கைள் மலைபோல் குவிந்து விடுகின்றன. அதனால் ஏற்படும் சுகாதார கேடுகளை தடுக்க சிறப்புநிதி ஒதுக்கி அதற்கான திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.

பாட்டாளி மக்கள் கட்சி தேர்த-ல் தனித்து போட்டியிடும் என ஏற்கனவே அறிவித்துள்ளது. ஆட்சி மாற்றம் தேவை என தமிழக மக்கள் விரும்புகிறார்கள். பாராளுமன்றத்தேர்தலில் தமிழகத்தில் 39 தொகுதிகளில் 15 இடங்களில் வெற்றி பெறுவோம்.
இவ்வாறு ஜி.கே.மணி கூறினார்.

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: