Sunday, April 29, 2012

தமிழ்ஈழம் கோரி திமுக எம்.பிக்களுடன் உண்ணாவிரதம் இருக்கட்டுமே கருணாநிதி... ராமதாஸ்

சென்னை: எதிர்க்கட்சியாக இருக்கும்போது மட்டும்தான் தமிழ் ஈழம் குறித்துப் பேசுவார் திமுக தலைவர் கருணாநிதி. அவருக்குத் தைரியம் இருந்தால் திமுகவிடம் தற்போது உள்ள 18 எம்.பிக்களுடன் டெல்லி போய் உண்ணாவிரதம் இருக்கட்டுமே பார்ப்போம் என்று கூறியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ். சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: அன்புமணி விவகாரம் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இன்டெக்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கியது அகில இந்திய மருத்துவ கவுன்சில்தான். 2-வது ஆண்டு உரிமம் புதுப்பிக்கப்படாததால் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. பின்னர் உச்சநீதிமன்றம் அமைத்த அட் ஹாக் கமிட்டி அதாவது ஒரு கண்காணிப்புக் குழுவில் 30 பேர் இடம் பெற்றிருந்தனர். இதில் இருந்த 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்தான் அந்தக் கல்லூரிக்கு அனுமதி கொடுத்திருக்கின்றனர். அதன் பிறகுதான் அமைச்சராக இருந்த அன்புமணி கையெழுத்திட்டார். இதில் எந்தவித முறைகேடும் இல்லை. அரசியலில் வளர்ந்து வரும் அன்புமணியின் அரசியல் செல்வாக்கைத் தடுக்கும் வகையிலேயே இந்த வழக்கு போடப்பட்டிருக்கிறது. இதன் பின்னணியில் இருப்பவர் பற்றி எங்களுக்குத் தெரியும் நேரம் வரும் போது நிச்சயம் வெளியிடுவோம். இதை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம். இடைத்தேர்தல் இடைத்தேர்தலைப் பொறுத்தவரையில் தற்போதும் சரி இனிவரும் காலங்களிலும் சரி போட்டியிடப் போவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறோம். அந்த தொகுதியில் யார் வென்றிருக்கிறார்களோ அந்தக் கட்சியே அங்கு வேட்பாளரை நிறுத்திக் கொள்ளலாம் என்று அறிவிப்பதுதான் சரியாக இருக்கும். நேரம், பணம் விரயத்தை தவிர்க்கலாம் என்பதற்காக இதைக் கூறி வருகிறேன் ஈழம் தமிழீழம் ஒன்றுதான் தீர்வு என எப்போதும் சொல்லி வருகிறோம். கருணாநிதி எப்போதுமே எதிர்க்கட்சியாக இருக்கும்போதுதான் தமிழீழம் பற்றி பேசுவார். அவரிடம் இப்போது 18 எம்.பிக்கள் இருக்கின்றனர். தைரியம் இருந்தால் அவர் டெல்லியில் தமிழீழம் கோரி உண்ணாவிரதம் இருக்கட்டும் என்றார் அவர்.

அன்புமணி அரசியல் செல்வாக்கை தடுக்க வேண்டுமென்றே ஜோடித்து உள்ளனர்: ராமதாஸ்

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மத்திய பிரதேசத்தில் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கியது அகில இந்திய மருத்துவ கவுன்சில் 2 வது ஆண்டு அதை புதுப்பிக்காததால் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அதை தொடர்ந்து 30 பேர் கொண்ட குழுவை சுப்ரீம் கோர்ட்டு நியமித்தது. அந்த குழு அனுமதி வழங்க முடிவு செய்தது. அதில் இடம் பெற்றிருந்த 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் கையெழுத்து போட்டு இருக்கிறார்கள். அதன் பிறகுதான் அன்புமணி கையெழுத்திட்டு இருக்கிறார். இதில் அன்புமணி எந்தவிதமான முறைகேட்டிலும் ஈடுபடவில்லை. இந்த வழக்கை சட்டரீதியாக சந்தித்து அவர் குற்றமற்றவர் என்பதை நிரூபிப்போம். வளர்ந்து வரும் அவரது அரசியல் செல்வாக்கை தடுப்பதற்காக வேண்டுமென்றே இந்த வழக்கை ஜோடித்து உள்ளனர். இதற்கு பின்னணி யார்? என்பது தெரியும். அதைப்பற்றி நேரம் வரும்போது வெளியிடுவோம். இவ்வாறு அவர் கூறினார்

எந்த இடைத்தேர்தலிலும் நாங்கள் போட்டியிட மாட்டோம்: டாக்டர் ராமதாஸ்

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பெட்ரோலுக்கு விலையை மீண்டும் உயர்த்தப்போவதாக கூறுகிறார்கள். வரியை குறைத்தாலே விலையை உயர்த்தவேண்டிய அவசியம் இல்லை. புதுக்கோட்டை இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிடப்போவது இல்லை. இதுமட்டுமல்ல, எந்த இடைத்தேர்தலிலும் நாங்கள் போட்டியிட மாட்டோம் என்றார்.

Sunday, April 22, 2012

மைக்ரோஸ்கோப் சமூதாயத்தை சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டை ஆண்டு உள்ளார்கள்: அன்புமணி ராமதாஸ்

மைக்ரோஸ்கோப் சமூதாயத்தை சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டை ஆண்டு உள்ளார்கள்: அன்புமணி ராமதாஸ் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றிய பாட்டாளி மக்கள் கட்சியின் பாட்டாளி இளைஞர் சங்கம், இளம்பெண்கள் சங்கம், தமிழக மாணவர்கள் சங்கம், வன்னிய இளைஞர் படை என 4 அமைப்புகளின் பொறுப்பாளர்கள் பயிற்சி கூட்டம் 22.04.2012 அன்று மாலை விழுப்புரம் கரும்பு விவசாயிகள் சங்க சமூதாய கூடத்தில் நடை பெற்றது. கூட்டத்தில் மாநில பா.ம.க. இளைஞர் சங்க தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியு மான டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசுகையில் கூறியதாவது: இந்த நிகழ்ச்சி வித்தியாச மான நிகழ்ச்சியாகும். நீங்கள் பதவியேற்கும் விழா நிகழ்ச்சி யாகும். உங்களுக்கு டாக்டர் ராமதாஸ் பதவி கொடுத்துள்ளார். இன்று உங்கள் ஊரில் பதவி ஏற்கும் நீங்கள் நாளை உள்ளாட்சி பிரதிநிதி களாகவோ, எம்.எல்.ஏ., எம்.பி.க்களாகவோ, ஏன் மந்திரி களாககூட வர வாய்ப்பு உள்ளது. டாக்டர் ராமதாஸ் இனி வரும் காலத்தில் திராவிட கட்சிகளுடனோ, தேசிய கட்சிகளுடனோ கூட்டணி கிடையாது என்று கூறியுள்ளார். பா.ம.க. தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமையும். 1920 ம் ஆண்டில் இருந்து இன்று வரை 27 முதல் அமைச்சர்கள் தமிழ்நாட்டை ஆண்டுள்ளனர். அதில் ஒருவர் கூட வன்னியர் சமூதாயத்தை சேர்ந்தவர் இல்லை. மைக்ரோஸ்கோப் சமூதாயத்தை சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டை ஆண்டு உள் ளார்கள். திராவிட கட்சிகளின் சாதனை சாராயம், சினிமா, இலவசம்தான். தமிழ்நாட்டில் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கை அமல் படுத்துவதற்குதான். கடந்த 45 ஆண்டுகளாக தமிழகத்தில் சினிமா துறையை சேர்ந்தவர்கள்தான் முதல் அமைச்சர்களாக உள்ளனர். கேரளாவிலோ, கர்நாடகாவிலோ இது கிடையாது. இவ்வாறு அன்புமணி ராமதாஸ் பேசினார்.

தமிழீழத் தனிநாடு குறித்து பொதுவாக்கெடுப்பு: ராமதாஸ் வலியுறுத்தல்

மயிலாடுதுறை: இலங்கையில் தனித் தமிழீழ நாடு உருவாக்குவது தொடர்பாக ஈழத் தமிழர்களிடத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் வலியுறுத்தியுள்ளார். மயிலாடுதுறையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ்,. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இந்த வாக்கெடுப்பு நடத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார் அவர். தமிழீழம் குறித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் ஏற்கெனவே வலியுறுத்தியிருந்தனர். திமுக தலைவர் கருணாநிதி கூறிய கருத்துக்கு, இலங்கை அதிபர் ராஜபக்சேவின் தம்பி கோத்தபாய மற்றும் அந்நாட்டு அமைச்சர் சம்பிக்க ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதற்கும் கருணாநிதி சளைக்காமல் பதிலடி கொடுத்திருந்தார். தமிழீழம் தொடர்பாக பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்நாட்டில் வலுத்து வருகிறது.

Tuesday, April 17, 2012

புதுக்கோட்டை இடைத்தேர்தலில் பாமக போட்டியிடாது: ராமதாஸ்

சென்னை: புதுக்கோட்டை தொகுதி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடாது என்று அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.

சென்னையில் வேளாண் துறைக்கான நிழல் பட்ஜெட்டை வெளியிட்ட அவர் கூறுகையில், இடைத் தேர்தலில் எனக்கு நம்பிக்கை இல்லை. எனவே புதுக்கோட்டை இடைத்தேர்தலில் பாமக போட்டியிடாது என்றார்.

புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ முத்துக் குமரன் விபத்தில் பலியானதைத் தொடர்ந்து அந்தத் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Thursday, April 12, 2012

உலக அளவில் தோல்வியடைந்த மோனோ இரயில் திட்டத்தை கைவிட வேண்டும்: ராமதாஸ்

உலக அளவில் தோல்வியடைந்த மோனோ இரயில் திட்டத்தை கைவிட்டு மெட்ரோ இரயிலை விரிவுப்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் 12.04.2012 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,


உலக அளவில் தோல்வியடைந்த மோனோ இரயில் திட்டத்தை சென்னை மாநகரில் செயல்படுத்தக்கூடாது என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.


சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ இரயில் திட்டப் பணிகளை நேற்று ஆய்வு செய்த தில்லி மெட்ரோ இரயில் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஸ்ரீதரனும் இதே கருத்தை தெரிவித்திருக்கிறார்.


60 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகையை கொண்ட சென்னை மாநகரின் போக்குவரத்து தேவையை நிறைவேற்ற மெட்ரோ இரயில் திட்டம்தான் சிறந்தது என்றும் மோனோ இரயில் திட்டம் சென்னை மாநகருக்கு ஏற்றதல்ல என்றும் ஆதாரங்களுடன் ஸ்ரீதரன் விளக்கியுள்ளார்.


கடந்த 2001ஆம் ஆண்டில் ஆட்சிப் பொறுப்பேற்றதுமே சென்னையில் மோனோ இரயில் திட்டத்தை செயல்படுத்த முதலமைச்சர் ஜெயலலிதா முயற்சி செய்தார். ஆனால் பாமக தொடர்ந்த வழக்கு காரணமாக அத்திட்டம் கைவிடப்பட்டது.


அப்போது கைவிடப்பட்ட திட்டத்தை மீண்டும் செயல்படுத்த தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் வெற்றிப் பெறுவதற்கு வாய்ப்பில்லாத இத்திட்டத்தை செயல்படுத்த எந்த நிறுவனமும் முன்வரவில்லை. இதுவரை இரண்டு முறை ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டும் திட்டத்தை செயல்படுததுவற்கான நிறுவனத்தை தமிழக அரசால் தேர்வு செய்ய முடியவில்லை.


சென்னை நகரில் 4 பாதைகளில் மோனோ இரயில் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், வண்டலூரிலிருந்து புழல் வரை 54 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்படவிருந்த மோனோ இரயில் பாதை பொருளாதார அடிப்படையில் சாத்தியமற்றது என்பதை உணர்ந்து அத்திட்டத்தை தமிழக அரசு கைவிட்டுள்ளது.


மற்ற பாதைகளும் பொருளாதார அடிப்படையில் சாத்தியமற்றவை என்பது தமிழக அரசுக்கு தெரியும் என்றபோதிலும், இதை ஒரு கவுரவப் பிரச்சனையாக எடுத்துக்கொண்டு எப்படியும் செயல்படுத்திவிட வேண்டும் என்பதில் தமிழக அரசு தீவிரமாக உள்ளது.


தமிழக அரசு உணர வேண்டும்


பயனில்லாத மோனோ இரயில் திட்டத்தை செயல்படுத்துவதால் பொருளாதார இழப்புதான் ஏற்படுமே தவிர, சென்னையில் போக்குவரத்து நெரிசல் சற்றும் குறையாது என்பதை தமிழக அரசு உணர வேண்டும்.


மோனோ இரயில்களை மெட்ரோ இரயில் திட்டத்திற்கான இணைப்பு சேவையாக நடத்தலாமே தவிர, அதையே முதண்மை போக்குவரத்து சேவையாக நடத்த முடியாது. இதை உணர்ந்து கொண்டு கவுரவம் பார்க்காமல் மோனோ இரயில் திட்டத்தை கைவிட்டு, மெட்ரோ இரயில் திட்டம் விரிவுப்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.


மெட்ரோ இரயில் திட்டத்தின் முதல் கட்டப் பணிகள் அடுத்த ஆண்டு இறுதிக்குள் முடிவடைந்து சேவை தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தக்கட்ட மெட்ரோ இரயில் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்ய குறைந்தது 12 முதல் 18 மாதங்கள் தேவை.


எனவே முதல் கட்ட பணிகள் முடிவடைந்ததும், இரண்டாம் கட்ட மெட்ரோ இரயில் திட்டப் பணிகளை தொடங்குவதற்கு வசதியாக அதற்கான ஆய்வுப் பணிகளை இப்போதே தொடங்க தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

Monday, April 9, 2012

கூடன்குளம் அணு உலையை ராஜபக்சே எதிர்த்தால் ஏற்றுக்கொள்வாரா உதயகுமார் : பாமக கேள்வி

கூடன்குளம் அணு உலை எதிர்ப்பாளர்களைச் சந்திப்பதற்காக கேரளாவின் முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் வரும் 12ந் தேதி வரஉள்ளார்.

இதுகுறித்து பா.ம.க.வின் மாநில துணை பொ.செ.வான வியனரசு நெல்லையில் நிருபர்களுக்கு அளத்த பேட்டியில்,

’’குமரி மாவட்டம் நெய்யாறு இடதுகரை கால்வாயில் தண்ணீர் கிடைக்காமல் கடந்த 10 ஆண்டுகளாக 9 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாழ்பட்டுக் கிடப்பதற்கு கேரள முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தனின் நடவடிக்கையே காரணம் . அதோடு இன்றைக்கு முல்லைப்பெரியாறு அணை இழப்புகளையும்,பாதிப்புகளையும் சந்திக்க அச்சுதானந்தனின் குறுகிய மனப்பான்மையும்,மனித நேய மற்ற போக்கும் தான் காரணம்.



தமிழர்கள் என்றால் வேப்பங்காயாகவே கசக்கும் மன எண்ணம் உள்ள அச்சுதானந்தன் ஆடு நனைகிறதே என்று ஒணான் அழுத கதையாக இன்று கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்களைப் பார்க்க வருவது தமிழர்கள் ஏற்கத்தக்கதல்ல.

அணு உலைக்கெதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமாரின் அண்மைக்கால செயல்பாடுகளும்,அவர் வெளியிடும் கருத்துக்களும் உண்மையான எதிர்ப்பாளார்கள் தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. தமிழகத்திற்குள் அச்சுதானந்தனை அனுமதிப்பது குழப்பத்தை ஏற்படுத்தும்.


இலங்கையின் சுற்றுச்சூழல் நீதிக்கான நடுவத்தின் இயக்குனர் கேமந்த வித நாயக்கே, கூடங்குளம் அணு உலையை இலங்கை அரசு எதிர்க்க வேண்டுமென அதிபர் ராஜபக்சேவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

அதை ஏற்று நாளைக்கே ராஜபக்சே இடிந்தகரை வந்து போராடும் மக்களுக்கு ஆதரவு தருகிறோம் என்றால் உதயகுமார்,புஸ்பராயன்,ஏற்றுக் கொள்வார்களா.தமிழகம் தான் அனுமதிக்குமா? எனவே அச்சுதானந்தன் வருகையை பா.ம.க. கண்டிக்கிறது’’ என்றார்.

Sunday, April 8, 2012

உதயகுமாருக்கு பாமக கண்டனம்

கூடங்குளம் அணுமின்நிலையத்தை மூடக்கோரி அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக பா.ம.க. உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்தநிலையில் போராட்டத்தில் கலந்து கொள்ள கேரள மாநில முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனை போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் அழைத்துள்ளார். இதற்கு பா.ம.க. கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பா.ம.க. மாநில துணை பொதுச் செயலாளர் வியனரசு நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசியபோது,

’’கூடங்குளம் அணு உலை போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமாரின் கருத்துகள் அணு உலை எதிர்ப்பாளர்கள்,

தமிழ் இன உணர்வாளர்களிடம் பெரும் சந்தேகத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவர் கேரள மாநில முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனை இடிந்தகரைக்கு அழைத்துள்ளார்.


அச்சுதானந்தன் சார்ந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அணு உலைக்கு ஆதரவாக உள்ளது. அக்கட்சியின் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் அணு உலைக்கு ஆதரவாக பேசி வருகிறார்.

அச்சுதானந்தன் பல்வேறு பிரச்சினைகளில் தமிழக மக்களுக்கு எதிராக செயல்பட்டுள்ளார். எனவே அவர் இடிந்தகரைக்கு வருவதை எதிர்க்கிறோம். அச்சுதானந்தனை கூடங்குளம் மக்கள் புறக்கணிக்க வேண்டும்’’ என்று கூறினார்.

Friday, April 6, 2012

தமிழ் தேசியத்தை கட்டமைக்க தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைக்க வேண்டும்.:ராமதாஸ்

"தமிழ்நாடு தமிழருக்கே' என்ற தலைப்பிலான குறுந்தகடு வெளியீட்டு விழா சென்னை தியாகராய நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதனை மக்கள் மாநாடு கட்சித் தலைவர் சக்திவேல் தயாரித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்த் தேசிய பொதுவுடைமை கட்சியின் பொதுச்செயலாளர் பெ.மணியரசன், திரைப்பட இயக்குநர் வீ.சேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.


விழாவில் குறுந்தகடை வெளிட்டு பேசிய ராமதாஸ்,


தமிழை அழிக்கும் முயற்சியில் ஊடகங்கள் இறங்கியுள்ளன. ஒருவர் பத்து வார்த்தைகள் பேசினால் அதில் 8 ஆங்கில வார்த்தைகளாக உள்ளன. ஆங்கில மொழியால் தமிழ் சிதைகிறது.


இலக்கணம் என்று ஒரு படம் எடுத்தேன். ஆங்கிலக் கலப்பு இல்லாமல் முழுமையும் தமிழ் வசனங்களாகவே இடம்பெற்ற திரைப்படம் அது. ஆனால் அது 5 நாள்கள் கூட ஓடவில்லை.


எனவே, மொழியைக் காக்க, தமிழ் தேசியத்தை கட்டமைக்க தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைக்க வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு அந்த அமைப்பு இருக்க வேண்டும். நான் முன் நின்று ஒருங்கிணைத்தால் ஏதோ அரசியல் ஆதாயத்துக்காக செய்வதுபோல இருக்குமோ என்ற தயக்கம் இருக்கிறது. இருப்பினும் தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபடுவேன் என்றார் ராமதாஸ்.

Thursday, April 5, 2012

மின் கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்யாவிட்டால் மிகப்பெரிய போராட்டம்: அன்புமணி ராமதாஸ்

விழுப்புரம் மாவட்ட பாமக சார்பில் தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாநில பா.ம.க இளைஞர் சங்க தலைவரும், முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் இப்போராட்டத்தில் கலந்து கொண்டார்.


அப்போது பேசிய அன்புமணி, முதல்வர் ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்த இரண்டு மாதத்தில் மின்வெட்டு இருக்காது என தெரிவித்திருந்தார். ஆட்சிக்கு வந்தவுடன் மின்வெட்டு சரியாக 6 மாதம் ஆகும் என்றும், பின்னர் ஒரு ஆண்டு ஆகும் என்றும், தற்போது மின்வெட்டு பிரச்னை தீர இரண்டு ஆண்டுகள் தேவை என்றும் கூறியுள்ளார்.

ஆட்சிக்கு வந்த ஒரு ஆண்டு காலத்தில் வரி, பேருந்து கட்டணத்தை உயர்த்தி அரசின் வருமானத்தை அதிகரித்துள்ளார். இவ்வளவு உயர்த்தியும் மின்கட்டண உயர்வு தேவையா.

மேலும், ’2013ல் 8 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று கூறிய முதல்வர் ஜெயலலிதா, ஒரு மெகாவாட் மின்சாரம் தயாரிப்பதற்கு கூட திட்டத்தை அறிவிக்கவில்லை. தமிழகத்துக்கு 4500 மெகாவாட் பற்றாக்குறையாக உள்ளது. இதற்கு மத்திய, மாநில ஆட்சிகள் தான் காரணம். தமிழக அரசு மின் கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்யாவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்’ என்றும் அன்புமணி கூறியுள்ளார்.

Tuesday, April 3, 2012

அறிவிக்கப்பட்ட கட்டண உயர்வை முழுமையாக ரத்துசெய்ய கோரி ஆர்ப்பாட்டம்: ராமதாஸ்

மின் கட்டண உயர்வை முழுவதும் ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:


இதுவரை இல்லாத அளவுக்கு ரூ 7874 கோடி அளவுக்கு மின்கட்டணத்தை தமிழக அரசு கடந்த வாரம் உயர்த்தியதை. இதைக் கண்டித்து பாமக நாளை மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தது. இதையடுத்து மின்சார கட்டணத்தை ஓரளவு குறைப்பதாக இன்று அரசு அறிவித்துள்ளது.


ஒட்டகத்தின் மீது டன் கணக்கில் சுமைகளை ஏற்றிவைத்துவிட்டு, கடைசியில் அதை ஏமாற்ற ஓரிரு தகர டின்களை மட்டும் இறக்கிவைப்பது போன்றுதான் தமிழக அரசின் நடவடிக்கை அமைந்துள்ளது.


ரூ.7874 கோடி அளவுக்கு மின்கட்டணத்தை உயர்த்திய அரசு வெறும் ரூ 740 கோடிக்கு மின்கட்டணத்தை குறைத்துள்ளது. இந்த ஏமாற்றும் தந்திரம் இனியும் எடுபடாது.


அறிவிக்கப்பட்ட கட்டண உயர்வை முழுமையாக ரத்துசெய்ய வேண்டும். இதை வலியுறுத்தி பாமக சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும், வட்டாட்சியர் அலுவலகம் முன்பும் நாளை காலை தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும்.

இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: