Wednesday, February 29, 2012

டாஸ்மாக் கடைகளில் விற்பனை நேரம் அதிகரிப்பு: சட்டம் ஒழுங்கு சீரழிவுக்கு வழிவகுக்கும்: ராமதாஸ்

டாஸ்மாக்' கடைகளில் விற்பனை நேரம் அதிகரிப்பது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிவுக்கு வழிவகுக்கும் என்று பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.


இதுகுறித்து பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


மது விற்பனையின் மூலம் கிடைக்கும் வருமானத்தை அதிகரிக்கும் நோக்குடன், மாநிலம் முழுவதும் உள்ள மதுக்கடைகளை கூடுதலாக 2 மணி நேரம் திறந்துவைக்கும்படி தமிழக அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மக்கள் நலனுக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது.


மக்கள் நலனில் அக்கறை கொண்ட எந்த அரசும், மது குடிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்காது. ஆனால் தமிழகத்தை ஆண்ட கட்சியும், ஆளும் கட்சியும் தங்களின் இலவசத் திட்டங்களுக்கு நிதி திரட்டித்தரும் கற்பகத்தரு'வாக மதுக்கடைகளை கருதுகின்றன. எனவே இலவச திட்டங்கள் அதிகரிக்கும் போதெல்லாம், மதுவிற்பனையையும் அதிகரிக்கின்றன. இதனால் 2003 ம் ஆண்டில் சுமார் ரூ.2 ஆயிரம் கோடியாக இருந்த மது விற்பனை வருமானம், தற்போது சுமார் ரூ.20 ஆயிரம் கோடியாக உயர்ந்திருக்கிறது.


2003 ம் ஆண்டில் மதுக்கடைகளை அரசுடைமையாக்கிய அப்போதைய அரசு, காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 16 மணி நேரத்திற்கு மதுக்கடைகளை திறந்து வைத்திருந்தது. இதை எதிர்த்தும், தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய போராட்டங்கள், எடுத்த முயற்சிகள் ஆகியவற்றின் பயனாக முந்தைய ஆட்சியில் மதுக்கடைகளின் விற்பனை நேரம் 12 மணி நேரமாக குறைக்கப்பட்டது.


ஆனால், தற்போதைய அ.தி.மு.க. அரசு, மதுக்கடைகளை காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்து வைக்கும்படி வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது பொறுப்புள்ள அரசுக்கு அழகல்ல. மதுக்கடைகளை மூடி, தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்று பா.ம.க.வும், சமூக அமைப்புகளும் வலியுறுத்தி வரும் நிலையில், மதுக்கடைகள் திறந்திருக்கும் நேரத்தை அதிகரிப்பது மக்களை அவமதிக்கும் செயலாகும். மதுக்கடைகளின் மூலம் அரசுக்கு கிடைக்கும் வருவாய் அதிகரிப்பதை ஆட்சியாளர்கள் சாதனையாக கருதக்கூடாது.


தெருவுக்குத் தெரு, மதுக்கடைகள் திறக்கப்பட்டிருப்பதால், இளைய சமுதாயம் சீரழிந்து வருகிறது. லட்சக்கணக்கான குடும்பங்கள் வறுமையில் வாடிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், மதுக்கடைகள் திறந்திருக்கும் நேரத்தை அதிகரிப்பது தமிழ்நாட்டில் குடும்ப வாழ்க்கை, சட்டம் ஒழுங்கு, கலாச்சாரம் ஆகியவை சீரழிவதற்கு வழிவகுக்கும். எனவே, மதுக்கடைகளின் விற்பனை நேரத்தை அதிகரிக்கும் முடிவை கைவிட்டு, படிப்படியாக மதுக்கடைகளின் விற்பனை நேரத்தை குறைத்து, முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்த தமிழக அரசு முன்வரவேண்டும்.


இல்லாவிட்டால், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.


இவ்வாறு டாக்டர் ராமதாஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.

Monday, February 27, 2012

தனித்து போட்டியிடும் முடிவை எடுத்தது ஏன்? : ராமதாஸ்

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட பா.ம.க. செயல்வீரர்கள் கூட்டம் மதுராந்தகத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேசியபோது,

’’2016-ல் பா.ம.க. ஆட்சி அமைய புதிய செயல் திட்டமான மாற்றுக் கட்சியில் இருக்கும் வன்னியர்களை பா.ம.க-வில் சேர்க்க வேண்டும். தி.மு.க,அ.தி.மு.க. ஆகிய 2 திராவிட கட்சிகளுக்கு அடுத்து பலம் கொண்ட கட்சியாக பா.ம.க. உள்ளது.

1980-ம் ஆண்டு வன்னியர் சங்கம் 2 கொள்கைகளுக்காகத் தொடங்கப்பட்டது. ஒன்று வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு, மற்றொன்று வன்னியர் நாட்டை ஆள வேண்டும். இதில் இட ஒதுக்கீட்டை போராடி பெற்றோம்’’ என்று தெரிவித்தார்.

அவர் மேலும், ‘’தி.மு.க,அ.தி.மு.க. உடன் கூட்டணி வைத்து கொள்கையை விட்டு விட்டோம். பா.ம.க-வை ஒழிப்பதில் தி.மு.க, அ.தி.மு.க-விற்கும் கூட்டணி.

இதனை கடந்த எம்.பி. தேர்தல்,சட்டப்பேரவைத் தேர்தலில் கண்டோம். எனவே கடந்த ஆண்டு ஜூலை மாதம் 27-ம் தேதி நடைபெற்ற பொதுக் குழுவில் பா.ம.க. தனித்துப் போட்டியிடுவது என்று முடிவடுத்தோம்’’ என்றார்.

Friday, February 24, 2012

கருணாநிதி, எம்ஜிஆர், ஜானகி, ஜெயலலிதா, வைகோ தமிழர்கள் அல்ல: அன்புமணி

சிதம்பரம்: திராவிட கட்சிகளின் தலைவர்களான கருணாநிதி, எம்ஜிஆர். ஜானகி, ஜெயலலிதா, வைகோ யாருமே தமிழர் கிடையாது. தமிழன் யார் என்றால் பாமக நிறுவனர் ராமதாஸ் ஒருவர்தான் என்றார் பாமக இளைஞரணி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி.

பாட்டாளி மக்கள் கட்சியின் தமிழக மாணவர் சங்கம் சார்பில் மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் அவர் பேசுகையில்,

மாணவர்கள் அரசியல் வேண்டாம் என்று சொல்ல முடியாது. நீங்கள் அவசியம் அரசியலுக்கு வந்தாக வேண்டும். ஏனென்றால் எதிர்காலத்தை உருவாக்கும் இளைஞர்கள் நீங்கள்தான். உலக நாடுகளில் புரட்சிகள் நடைபெற்று வருவதற்கு இளைஞர்கள்தான் காரணம். அதேபோன்ற புரட்சி தமிழகத்தில் ஏற்பட வேண்டும்.

சினிமா ஒரு பொழுதுபோக்கு. அதை பார்த்து விட்டு அப்போதே மறந்துவிட வேண்டும். ஆனால் நமது மக்கள் அதை உண்மை என்று நம்பி ஏமாந்து போகின்றனர். இனி தமிழ்நாட்டை படித்தவர்கள்தான் ஆள வேண்டும்.

கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் அமைதிப் புரட்சி ஏற்பட்டது. இளைஞர்கள் அந்த புரட்சியை ஏற்படுத்தினர். அதிமுகவுக்கு அவர்கள் ஒட்டுப் போடவில்லை. திமுகவுக்கு எதிராக ஓட்டு போட்டார்கள் என்பதுதான் உண்மை.

பாமக ஒரு வித்தியாசமான கட்சி. எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். திமுக, அதிமுகவுடன் கூட்டணி வைத்த தவறை நாங்கள் மீண்டும் செய்ய மாட்டோம். பாமக தலைமையில் தனி அணி அமைப்போம்.

கேரளத்தில் நாயர், மேனன் தவிர வேறு யாரும் ஆள முடியவில்லை. ஆந்திரத்தில் ரெட்டி, நாயுடு தவிர வேறு யாரும் ஆளவில்லை.

திராவிட கட்சிகளின் தலைவர்களான கருணாநிதி, எம்ஜிஆர். ஜானகி, ஜெயலலிதா, வைகோ யாருமே தமிழர் கிடையாது. திராவிடர்கள் தான். தமிழன் யார் என்றால் பாமக நிறுவனர் ராமதாஸ் ஒருவர்தான் என்றார் அன்புமணி.

புதுவை நான் பிறந்த பூமி:

முன்னதாக பாமக இளைஞர் சங்க பொதுக்குழு கூட்டம் புதுச்சேரியில் நடந்தது. அதில் பேசிய அன்புமணி, புதுவை நான் பிறந்த பூமி. இங்குள்ள இளைஞர்களை நல்வழிப்படுத்தும் நோக்கம் எனக்கு உள்ளது. புதுவையில் இனிவரும் காலங்களில் வித்தியாசமான அரசியல் நடத்த உள்ளோம். தமிழகத்தில் புதிய செயல் திட்டத்தை உருவாக்கியுள்ளோம். திராவிட கட்சிகளுக்கு எதிரான செயல் திட்டம் அது.

45 ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் மக்களை குடிகாரர்களாக்கி விட்டார்கள். புதுவையிலும் பாமக புதிய பாதையில் செல்லப் போகிறது. இங்கு ஒரு மாற்றத்தை உருவாக்க உள்ளோம். டாக்டர் ராமதாஸ் ஊர் ஊராக சென்று விதையை விதைத்தார். உழைத்தது நாம். ஆனால் அறுவடை செய்தது என்.ஆர். காங்கிரஸ். இனிவரும் காலங்களில் நாம் அறுவடை செய்யவேண்டும்.

நமது கொள்கை வேறு எந்த கட்சியிலும் கிடையாது. வருங்காலத்தில் திராவிட, தேசிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்று டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார். பா.ம.க. தலைமையில்தான் கூட்டணி. கூட்டணி இல்லாமல் எப்படி ஜெயிக்க முடியும் என்று சிலர் நினைக்கலாம். நமது கொள்கை சரியாக இருந்தால் மக்கள் ஆதரவு அளிப்பார்கள்.

புதுவை இளைஞர்கள் குடியால் சீரழிகிறார்கள். புதுவையில் பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கினை அமல்படுத்துவோம். புதுவையில் மதுவால் பாதிக்கப்படாத குடும்பமே கிடையாது. இங்கு நாம் 20 தொகுதிகளில் கவனம் செலுத்தினால் போதும். ஆட்சியை பிடித்து விடலாம்.

தமிழகத்தில் காங்கிரஸ் 45 ஆண்டு காலமாக ஆட்சிக்கு வராதது ஏன் என்றால் திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அவர்கள் மேல் சவாரி செய்ததுதான். அவர்கள் மேல் அவர்களே நம்பிக்கை இழந்துள்ளனர். அதனால்தான் கூட்டணி வேண்டாம் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம் என்றார் அன்புமணி.

இலவசமாக தண்ணீர் கூட தராத மத்திய, மாநில அரசுகள் தேவையா?: ராமதாஸ்

சென்னை: குடி மக்களின் அடிபடை தேவையான தண்ணீரை இலவசமாக வழங்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் அரசியல் சட்டப்படியான கடமை ஆகும். இதைக்கூட அரசுகளால் செய்ய முடியாது என்றால், அந்த அரசுகள் இருப்பதில் அர்த்தமே இல்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய நீர்வள அமைச்சகத்தால் கடந்த ஜனவரி 31ம் தேதி வெளியிடபட்ட தேசிய வரைவு தண்ணீர் கொள்கை உழவர்களின் நலனையும் வாழ்வாதாரத்தையும் சிதைக்கும் வகையில் அமைந்துள்ளது. ஏழை மக்களை சுரண்டி, பன்னாட்டு நிறுவனங்களை கொழுக்க வைக்கும் கொள்கைகளை கடைபிடித்து வரும் மத்திய அரசு, இப்படி ஒரு கொள்கையை வெளியிட்டதன் மூலம் உழவர்களின் நலனில் தனக்கு சிறிதும் அக்கறை இல்லை என்பதை நிரூபித்திக்கிறது.

விவசாயத் தேவைக்கான தண்ணீருக்கு விலை நிணர்யிக்கப்பட வேண்டும், தண்ணீர் வழங்கும் பொறுப்பில் இருந்து அரசு விலகிக் கொள்ள வேண்டும், தண்ணீர் வினியோகத்தை முழுக்க முழுக்க தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தேசிய வரைவு தண்ணீர் கொள்கையில் தெரிவிக்கபட்டிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

குடி மக்களின் அடிபடை தேவையான தண்ணீரை இலவசமாக வழங்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் அரசியல் சட்டப்படியான கடமை ஆகும். இதைக்கூட அரசுகளால் செய்ய முடியாது என்றால், அந்த அரசுகள் இருப்பதில் அர்த்தமே இல்லை.

அதுமட்டுமின்றி, தண்ணீர் வினியோகத்தை தனியாரிடம் வழங்கினால் இந்தியாவின் ஒட்டுமொத்த நீராதாரங்களையும் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் கைகளில் எடுத்துக்கொண்டு உழவர்களை சுரண்டும் ஆபத்து ஏற்படும். மத்திய அரசு, விவசாயத் தேவைக்கான தண்ணீருக்கு விலை நிர்ணயிப்பது கொடுமையிலும் கொடுமையாகும். ஏற்கெனவே உரக் கொள்கையில் திருத்தம் கொண்டு வந்ததால், உரம் வாங்க முடியாமல் உழவர்கள் பெரும் இன்னலுக்குள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் தண்ணீருக்கு விலை நிர்ணயிப்பது விவசாயிகளை பெரிதும் பாதிக்கும்.

மாநில மின் வாரியங்கள் மூலம் இலவசமாக மின்சாரம் வழங்கபடுவதால் தேவைக்கும் அதிகமாக தண்ணீர் செலவிடபடுவதாகவும், இதை தவிர்க்க இலவச மின்சாரத்தையும், மானிய விலை மின்சாரத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் வரைவுக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே வறுமையிலும், கடனிலும் சிக்கித் தவிக்கும் விவசாயிகளை தற்கொலை செய்து கொள்ளத் தூண்டும் நடவடிக்கையாகும் இது.

நீர்வளம், விவசாயம் போன்ற துறைகள் பொதுப் பட்டியலில் இருக்கும் நிலையில், உழவர்களுக்கு இலவசமாக மின்சாரமோ அல்லது தண்ணீரோ வழங்கக்கூடாது என்று மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்துவது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. ஒட்டுமொத்தத்தில் விவசாயிகளின் கழுத்தை நெரிக்கும் வகையில் அமைந்துள்ள தேசிய வரைவு தண்ணீர் கொள்கையை மத்திய அரசு கைவிடவேண்டும். இந்த கோரிக்கையை மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.

தேசிய வரைவு தண்ணீர் கொள்கையை ஜனவரி 31ம் தேதி இணையத்தளத்தில் வெளியிட்ட மத்திய அரசு, அடுத்த 29 நாட்களில் கருத்து தெரிவிக்க வேண்டும் என கூறியிருப்பது சரியல்ல.

இந்தியாவில் உள்ள உழவர்கள் அனைவரும் இணையத்தளம் பார்க்கும் அளவுக்கு இன்னும் வளரவில்லை. எனவே, வரைவு தண்ணீர் கொள்கை குறித்து கருத்து தெரிவிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிப்பதுடன், நாடு முழுவதும் உழவர்களிடையே கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்தி அதன் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

Tuesday, February 21, 2012

மின்வெட்டை சரிசெய்யாமல் மக்களை திசைதிருப்புகின்றனர்: ராமதாஸ்

மின்வெட்டை கண்டித்து மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பாமக சார்பில் இன்று (20.02.2012) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மின்வெட்டைக் கண்டித்து திருச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் ஜி.கே.மணி உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



ஆர்ப்பாட்டத்தின்போது அவர் பேசுகையில்,

மின்வெட்டால் தமிழகத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரமே பாதிக்கப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்து 3 மாதத்தில் மின்வெட்டை சரிசெய்வோம் என்று அதிமுக கூறியது. ஆனால் 8 மாதங்களாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை.



மின்வெட்டு நேரம் 8 மணி நேரம், 10 மணி நேரம் என அதிகரித்துள்ளது. மின்வெட்டை சரிசெய்யாமல் தம்முடன் இருந்தவர்களை கைது செய்து மக்களை திசைதிருப்புகின்றனர். எங்களிடம் மின்வெட்டை சரிசெய்ய பல்வேறு ஆலோசனைகள் உள்ளன. ஆனால் நாம் கூறினால் யாரும் ஏற்றுக்கொள்வதில்லை எனக் குறிப்பிட்டார்.

ருபர்களுக்கு வகுப்பு எடுத்த ராமதாஸ்!

திருச்சி சங்கம் ஹோட்டலில் புதிய அரசியல் புதிய நம்பிக்கை என்ற புத்தகத்தை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டார்.



அப்போது பேசிய அவர், இதற்கு முன்பு இந்த புத்தகத்தை கோவை, சென்னை, மதுரை ஆகிய இடங்களில் வெளியிட்டுள்ளேன்.

சென்னை நிருபர்கள் மிகவும் மோசம். சின்ன சின்ன பசங்க நிருபர் என்று வந்துவிடுகிறார்கள். தினந்தோறும் செய்தித்தாள்களை படிக்காமல் கேள்வி கேட்கிறார்கள். அரசியலைப் பற்றி முழுமையாக தெரியாமல், நிருபராக இருக்கிறார்கள்.



ஆனால் திருச்சியில் அப்படி இல்லை. ரொம்ப சீனியர்ஸ் இருக்கிறீர்கள். முழு அரசியல் தெரிந்தவர்களாக இருக்கிறீர்கள். முழு பத்திரிகையாளர்களாகவே கேள்வி கேட்கிறீர்கள் என்றார்.



பின்னர் அனைவரும் முதல் பக்கத்தை திருப்புங்கள் என்றார். அதில் இரண்டு பகுதிகளாக இந்தப் புக்கத்தை பிரித்திருக்கிறோம். முதல் பகுதியில் முன்னுரையில் இதுவரை ஆண்ட திராவிட கட்சிகள் தமிழகத்துக்கு செய்த துரோகங்கள், தேசிய கட்சிகளால் தமிழகத்துக்கு நேர்ந்த கேடுகள், தமிழகத்தை தலைகுனிய வைத்த திராவிட கட்சிகளின் ஊழல்கள் ஆகியவற்றை புள்ளி விபரத்தோடு விவரித்திருக்கிறோம்.



இரண்டாவது பாகத்தில் பாமகவின் கொள்ளை, இனி அரசியலில் புதிய நம்பிக்கை, புதிய அரசியல் செயல்திட்டம் என்று 16 பாகங்களாக பிரித்து தனித்தனியாக கொடுத்திருக்கிறேன். இது அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் என்றார்.



பின்னர் புத்தகத்தின் கடைசிப் பக்கம் திருப்புங்கள் என்ற ராமதாஸ், இந்த புத்தகத்தை பத்திரிக்கையாளர்களுக்காகவே கொடுக்கிறோம். நீங்கள் சார்ந்த பத்திரிக்கை நிறுவனங்களும், ஊடக நிறுவனங்களும் வெவ்வேறு அரசியல் நிலைப்பாடுகளை கொண்டிருக்கலாம். ஆனால் உங்களுக்கு அரசியலைப் பற்றிய ஒரு தனிப்பட்ட கருத்து இருக்கும். அதனை இந்த புத்தகத்தில் கடைசிப் பக்கத்தில் கருத்து கேட்பு படிவம் என்ற பகுதி இருக்கிறது. உங்களின் கருத்துக்களை அதில் முழுமையாக எழுதி அனுப்பவும். தொலைபேசியிலோ அல்லது நேரிடையாகவோ என்னிடம் சொல்லலாம். ரகசியம் பாதுகாக்கப்படும் என்றார்.

தமிழகம் இருண்டதை மறைக்க

மின்வெட்டை கண்டித்து பாமக சார்பில் அரிக்கேன் விளக்கு ஏந்தும் போராட்டம் மற்றும் கண்டன ஆர்பாட்டம் திருச்சி புத்தூர் 4 ரோடு பகுதியில் நேற்று மாலை நடந்தது. இதில் கலந்துகொண்ட கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேசினார்.



அப்போது அவர், ‘’ தமிழகம் மின்வெட்டு காரணமாக இருண்டு கிடக்கின்றது. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிலைமையை உடனே சரிசெய்துவிடுவோம் என ஜெயலலிதா அறிவித்தார். ஆனால் மின்வெட்டை சரிசெய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.









தமிழகத்தில் மின் வெட்டு காரணமாக சுமார் 7 கோடி பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் விவசாயம், மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

தமிழகத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் சீர்குலையும் நிலையில் அதிமுகவின் ஆட்சி உள்ளது. இதை மக்களிடம் இருந்து மறைக்கவே சசிகலா குடும்பத் தாரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.



ஐந்தாண்டு திட்டங்கள் எத்தனை கொண்டு வந்தாலும் மின்வெட்டை சரிசெய்ய முடியாது. அதிமுக ஆட்சியில் நீடிக்கும் வரை இன்னும் 5 ஆண்டுகளுக்கு தமிழகம் இருண்டுதான் கிடக்கும்’’ என்று பேசினார்.

Monday, February 20, 2012

முதல்வர் கூடங்குளம் சென்று மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும்: ராமதாஸ்

முதல்வர் கூடங்குளம் சென்று மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

திருச்சியில் பாமகவின் புதிய அரசில் புதிய நம்பிக்கை என்ற நூலை பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,


கூடங்குளம் பிரச்சினை தொடர்பாக அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. தமிழக அரசு அங்கு நிபுணர் குழுவை அனுப்பியுள்ளது. அணு உலை பாதுகாப்பாக உள்ளது என்று அவர்கள் சொல்லத் தேவையில்லை. அதனை அப்துல் கலாம் சொல்லிவிட்டார்.


அந்த நிபுணர் குழு மக்களையும், எதிர்ப்புக் குழுவினரையும் சந்தித்து அவர்களது கருத்துக்களை கேட்க வேண்டும். அச்சத்தைப் போக்க வேண்டும். தமிழக அரசின் இந்நடவடிக்கை சரியானது அல்ல. முதல்வர் அங்கு நேரடியாக சென்று அந்த மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என்று கூறினார்.
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்

மின்வெட்டை சரி செய்ய என்னிடம் யோசனைகள் உள்ளன, ஆனால் யாரும் கேட்பதில்லை-ராமதாஸ்

திருச்சி: மின்வெட்டை சரி செய்யாமல்,மக்களை திசை திருப்பும் வகையில் தன்னுடன் இருந்தவர்களையெல்லாம் கைது செய்து கொண்டிருக்கிறார்கள். மின்வெட்டை சரி செய்ய என்னிடம் யோசனைகள் உள்ளன. ஆனால் யாரும் அதை கேட்பதில்லை என்று கூறியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

திருச்சியில் மின்வெட்டைக் கண்டித்து பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு டாக்டர் ராமதாஸ் பேசுகையில்,

மின்வெட்டால் தமிழகத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரமே பாதிக்கப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்து 3 மாதத்தில் மின்வெட்டை சரிசெய்வோம் என்று அதிமுக கூறியது. ஆனால் 8 மாதங்களாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை.

மின்வெட்டு நேரம் 8 மணி நேரம், 10 மணி நேரம் என அதிகரித்துள்ளது. மின்வெட்டை சரிசெய்யாமல் தம்முடன் இருந்தவர்களை கைது செய்து மக்களை திசைதிருப்புகின்றனர். எங்களிடம் மின்வெட்டை சரிசெய்ய பல்வேறு ஆலோசனைகள் உள்ளன. ஆனால் நாம் கூறினால் யாரும் ஏற்றுக் கொள்வதில்லை என்றார் அவர்.

ஆர்ப்பாட்டத்தில் பாமக தலைவர் ஜி.கே.மணி மற்றும் நூற்றுக்கணக்கான கட்சியினர் கலந்து கொண்டனர்.

Sunday, February 19, 2012

பா.ம.க. தனித்துப்போட்டி : ஜி.கே.மணி

பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே. மணி இன்று ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், ‘’இந்தியாவில் உள்ள மத்திய அரசின் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., போன்ற கல்வி நிறுவனங்களில் கல்வி பயில மாணவர்களுக்கு நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நுழைவு தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படுகிறது. இதனால் இந்தி மொழியை தாய்மொழியாக கொண்ட 9 மாநில மாணவர்கள் எளிதில் சேர முடிகிறது.



தமிழகத்தில் 2 விழுக்காடு மாணவர்கள் கூட மத்திய அரசு நடத்தும் கல்வி நிறுவனங்களில் நுழைய முடிவதில்லை. எனவே ரெயில்வே தேர்வு போன்று இந்த நுழைவு தேர்வினையும் இந்தி, ஆங்கிலம், உருது, மற்றும் அந்தந்த மாநில தாய் மொழிகளில் நடத்தப்பட வேண்டும். மின்வெட்டு மின்வெட்டின் காரணமாக ஒட்டுமொத்த தமிழகமும் ஸ்தம்பித்து போய் உள்ளது.









இதற்கு மின்வெட்டு நேரத்தை மாற்றி அமைப்பதால் எந்த தீர்வும் ஏற்படாது. தற்காலிக தீர்வாக மத்திய தொகுப்பில் இருந்து தமிழக முதலமைச்சர் கூடுதல் மின்சாரத்தை கேட்டு பெற வேண்டும்.

பிற மாநிலங்களில் இருந்து மின்சாரத்தை விலை கொடுத்து வாங்க வேண்டும். முதலமைச்சர் கேட்கும் 1000 மெகாவாட் மின்சாரத்தை பிரதமர் தமிழகத்திற்கு உடனே வழங்க வேண்டும்.



இதில் மத்திய அரசு பாராமுகமாக இருக்க கூடாது. கூடங்குளம் அணுமின் நிலையம் மனித உயிர்களுக்கு நிலைத்த கேடு விளைவிக்கும் திட்டம்.

எனவே அதை மூடிவிட்டு நீர்மின் திட்டம் போன்ற குறைந்த செலவில் ஆபத்தில்லாத மின்திட்டங்களை மத்திய- மாநில அரசுகள் தொடங்க வேண்டும். சங்கரன்கோவில் இடை தேர்தலில் பா.ம.க. போட்டியிடவில்லை. 1996-ல் பா.ம.க. தனித்து போட்டியிட்டு 4 சட்டமன்ற தொகுதிகளையும், 42 தொகுதிகளில் 2-வது இடத்தையும் பிடித்தது.



அதன்பின்னர் பா.ம.க. தனித்துவத்துடன் இயங்காமல் திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைத்ததால் தேர்தலில் சாவை சந்திக்க நேரிட்டது. தனித்து போட்டி எனவே வருகிற பாராளு மன்ற தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிடும். இதற்கிடையே ஒத்த கட்சிகள் வந்தால் பா.ம.க. தலைமையில் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம்.



தமிழகத்தில் சமீப காலமாக கொலை, கொள்ளை என சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. ஆகவே காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். சட்ட மன்ற மரபுபடி சட்டமன்றத்தில் எதிர்கட்சிகள் அதிக நேரம் பேச வாய்ப்பளிக்க வேண்டும். எதிர்கட்சிகள் மீது பொய் வழக்குகள் போட கூடாது’’என்று கூறினார்.

Saturday, February 18, 2012

இது கடுமையாக கண்டிக்கத்தக்கது;இதனை ரத்து செய்ய வேண்டும் : ராமதாஸ்

’’மனித உயிர்களுக்கும், தேசிய பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக திகழும் பயங்கரவாதத்தை வேரோடு ஒழிக்கவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. ஆனால் இதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் கூட்டாட்சி தத்துவத்திற்கு வேட்டுவைக்கும் வகையில் இருக்கக்கூடாது.



தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் ஏற்படுத்தப்படும் என்றும், மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள ஆணையின்படி, பயங்கரவாத தடுப்பு மையத்தை நிர்வகிக்கும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள், யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத செயல்கள் தடுப்புச்சட்டத்தின் கீழ், ஒருவரை கைது செய்வதற்காக மாநில உள்துறை செயலாளருக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரம் இந்த ஆணையின் மூலம் பறிக்கப்பட்டு மத்திய உளவுத்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.


இது இந்திய அரசியல் சட்டத்தின்படி, மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பறிக்கும் வகையில் உள்ளது.







இப்படியொரு சட்டத்தை பிறப்பித்திருப்பதன் மூலம், கூட்டாட்சி தத்துவத்தின் மீது பயங்கரவாத தாக்குதலை விட, மிகப்பெரிய தாக்குதலை மத்திய அரசு நடத்தியுள்ளது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது. இதனை ரத்து செய்ய வேண்டும்.



கல்வி, நிதி என பொதுப்பட்டியலில் உள்ள அனைத் துத்துறைகளிலும் மத்திய அரசு விருப்பம்போல திருத்தங்களை கொண்டு வந்து மாநில அரசுகளின் உரிமைகளை பறித்து வருகிறது.

இதன் மூலம் மாநிலங்களை அலங்கரிக்கப்பட்ட மாநகராட்சிகளாக குறைப்பதையும் தாண்டி, தாம் இட்ட கட்டளையை நிறைவேற்றும் அடிமைகளாகவும், எந்தவொரு தேவைக்கும் தங்களிடம் வந்து கையேந்தி நிற்பவர்களாகவும் சிறுமைப்படுத்த மத்திய அரசு முயல்வதாகவே கருத வேண்டி யிருக்கிறது’’ என்று கூறியுள்ளார்.

Friday, February 17, 2012

பா.ம.க., தலைமையிலான அணிகள்

சேலம்: ""சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் ஓட்டுக்கு, 2,000 ரூபாய் வரை ஏலம் விட்டு வருகின்றனர். இடைத்தேர்தல் வைப்பதை, பா.ம.க., விரும்பவில்லை. எந்த கட்சியின், எம்.எல்.ஏ., இறந்தாரோ, அந்த கட்சியை சேர்ந்தவரையே தேர்தல் ஆணையம் மூலம் வேட்பாளராக அறிவித்து, எம்.எல்.ஏ., பதவி வழங்கிட வேண்டும். இதனால், இடைத்தேர்தலில் தேவையில்லாத பண விரயம் தடுக்கப்படும் என, பா.ம.க., வலியுறுத்தி வருகிறது,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

சேலத்தில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், திராவிட கட்சிகளின் ஆட்சிச் சீர்கேட்டிலிருந்து, தமிழ்நாட்டை மீட்டெடுத்து ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான செயல்திட்டமாக, "புதிய அரசியல் புதிய நம்பிக்கை' என்ற புத்தகத்தை வெளியிட்டார். இதில், பா.ம.க., தலைவர் ஜி.கே. மணி, முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்தி, தமிழரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் ராமதாஸ் கூறியதாவது: கடந்த, 45 ஆண்டுகளாக திராவிட கட்சிகளினால் தமிழகம் சீர்கெட்டுள்ளது. திட்டமிடாததால், மின் வெட்டு பிரச்னைக்கு தீர்வு காணப்படாமல் உள்ளது. ஆட்சியில் அமர்ந்தவுடன் அடுத்த தேர்தல் பற்றியும், ஓட்டு வாங்குவது குறித்தும், மக்களுக்கு இலவசங்கள் அளிப்பது பற்றியே சிந்திக்கின்றனர். தமிழக முதல்வராக பொறுப்பேற்ற மூன்று மாதத்தில் மின் வெட்டை சீர் செய்வதாக முதல்வர் ஜெயலலிதா கூறினார். ஆனால், மின் வெட்டு பிரச்னைக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை. மின்சாரத்தின் மூலம் மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் ஓடாத நிலையில், அதை மக்களுக்கு இலவசமாக அளித்து வருகின்றனர். நெய்வேலியில், 2, 490 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்துக்கு வெறும், 30 மெகாவாட் மின்சாரம் மட்டுமே வழங்குகின்றனர். கூடுதலாக நெய்வேலியில் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை தமிழகத்துக்கு வழங்க வேண்டும். மின் வெட்டை கண்டித்து, வரும் 20ம் தேதி, பா.ம.க., சார்பில் அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் போராட்டம் நடத்தப்படும். சென்னையில் அன்புமணி, திருச்சியில் நான், சேலத்தில் ஜி.கே.மணி தலைமையில் மின் வெட்டு போராட்டம் நடத்தப்படும்.

பெரியார் பல்கலையில் ஊழல் நடந்துள்ளது. கல்வி நிறுவனங்களில் நடக்கும் ஊழலை கண்காணிக்க, விசாரிக்க தனி குழு அமைக்க வேண்டும். வரும் 27ம் தேதி ஜெனிவாவில், ஐ.நா., மனித உரிமை ஆணையத்தின், 19வது கூட்டம் நடக்கிறது. இதில் அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகள் இலங்கையில் நடந்த போர் குற்றம் மீது விசாரணை நடத்திட தீர்மானம் கொண்டு வருகிறது. இதற்கு இந்திய அரசு ஆதரவு அளிக்க வேண்டும். போர் முடிந்து மூன்று ஆண்டு கடந்தும், இலங்கை தமிழர்களின் மறுவாழ்வு, அரசியல் பகிர்வில் இலங்கை அரசு அக்கறை காட்டவில்லை. ஐ.நா., சபையில் கொண்டு வரும் தீர்மானத்தின் மீது விசாரணை நடத்தி, இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்.

சங்கரன் கோவில் இடைத்தேர்தலில், பா.ம.க., போட்டியிடவில்லை. இடைத்தேர்தலில் ஓட்டுக்கு தலா, 2,000 ரூபாய் வரை ஏலம் விட்டு வருகின்றனர். பென்னாகரத்தில் நடந்த இடைத்தேர்தலில், தி.மு.க., 100 கோடி ரூபாய் வரை செலவழித்தது. ஒரு பைசா கூட செலவழிக்காமல் பா.ம.க., 75 ஆயிரம் ஓட்டுகளை பெற்று, தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகளை, "டெபாஸிட்' இழக்க வைத்தது. இடைத்தேர்தல் நடத்துவதால் பண விரயமாகிறது. இதை தடுத்திட எந்த கட்சி எம்.எல்.ஏ., இறந்தாரோ, அந்த கட்சியை சேர்ந்தவரையே தேர்தல் ஆணையம் வேட்பாளராக அறிவித்து, எம்.எல்.ஏ., பதவி வழங்கிட வேண்டும் என, பா.ம.க., வலியுறுத்தி வருகிறது. தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி அமைத்தோம். கொள்கை ரீதியாக, பா.ம.க., தனித்தே இருந்ததே தவிர, திராவிட கட்சிகளுடன் தேர்தல் சமயத்தில் தொகுதி உடன்பாடு மட்டுமே வைத்து கொண்டோம். இனி வருங்காலத்தில், பா.ம.க., தனித்தே போட்டியிடும். சட்டசபை, பாராளுமன்ற தேர்தலில், பா.ம.க., தலைமையிலான அணிகள் சார்பில் தனித்து போட்டி என்பதில் மாற்று கருத்து இல்லை என்றார்

Tuesday, February 14, 2012

பாராளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளில் 10 தொகுதிகளில் சாதாரணமாக வெற்றி

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்,



இன்றைக்கு 30 வயதுக்கு உட்பட்டவர்களிடம் அரசியல் ஆர்வம் குறைகிறது. அரசியலில் நல்லவர்கள் குறைந்து வருகிறார்கள். தீயவர்கள் கூடாரமாக கூடி வருகிறார்கள். தமிழ்நாட்டில் 45 வருடமாக ஆண்ட திராவிட கட்சிகள் சீழ்த்துவிட்டன. அதை மீட்டெடுக்க நாங்கள் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவோம்.



முல்லைப் பெரியாறு அணை பிரச்சனைக்கு தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும். மம்தா பானர்ஜி மத்திய அரசை மிரட்டுவதைப்போல, திமுகவும் மத்திய அரசை மிரட்டி இதனை செய்ய வேண்டும்.



கூடங்குளம் அணுஉலை பற்றி ஆய்வு செய்ய தமிழக அரசு குழு நியமித்துள்ளது. அந்த குழுவில் இடம்பெற்றுள்ள சீனிவாசனை நீக்க வேண்டும். மதுரை மாநகராட்சியில் ஆளுங்கட்சியை சேர்ந்த புதிய மேயர் பதவியேற்று ஒரு மாதம் ஆகியும் எந்த பணியும் நடக்கவில்லை. மதுரை மாநகராட்சி கமிஷனர் பதவியும் நிரப்பப்படவில்லை.



சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிடவில்லை. ஜான்பாண்டியன் கட்சியினர் போட்டியிட்டால் ஆதரவு கொடுப்போம். சங்கரன் கோவில் இடைத்தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடக்காது.



வருகிற பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலிலும் திராவிடம் பெயர் கொண்ட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது. அந்தக் கட்சிகளுடன் ஒட்டும் இல்லை. உறவும் இல்லை. ஆட்சியில் இருக்கும் திராவிட கட்சிகளை ஒதுக்விட்டு தமிழ்நாட்டுடக்கு புதிய எதிர்காலத்தை கொடுப்போம்.



வரும் பாராளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளில் 10 தொகுதிகளில் சாதாரணமாக வெற்றி பெறுவோம். மற்ற இடங்களில் சமூக கூட்டணி என்ற பெயரில் போட்டியிடுவோம். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரை சஸ்பெண்ட் செய்தது தவறு. எதிர்க்கட்சிகளை ஆளும் கட்சி மதிக்க வேண்டும். சட்டசபையை சினிமா ஸ்டூடியோ போல விஜயகாந்த் மாற்றக் கூடாது.



கடந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் தான் தேமுதிக வெற்றி பெற்றது. ஆனால் தனித்து நின்றிருந்தால் ஒருஇடத்தில் கூட தேமுதிக வெற்றிப்பெற்றிருக்க முடியாது. ஆளும்கட்சிக்கு சமச்சீர் கல்வியும், மின்சார தட்டுப்பாடும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.



முதல் அமைச்சருக்கு நெருக்கமானவர்கள் சிலர் ஒதுக்கி வைக்கப்பட்டு, பிறகு கைது செய்யப்படுகிறார்கள். என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது

Sunday, February 12, 2012

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு? ராமதாஸ் பதில்

வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்,



சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் பாமக போட்டியிடப்போவதில்லை. திராவிட கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகளை நாங்கள் ஆதரிக்கவில்லை. ஜான்பாண்டியன் கட்சியினர் ஆதரவு கோரும் பட்சத்தில், அவர்களுக்கு ஆதரவு அளிக்கப்படும் என்றார்.

மின் வெட்டை கண்டித்து போராட்டம்: ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

தமிழ்நாட்டில் வரலாறு காணாத அளவுக்கு கடுமையான மின் வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் நாள்தோறும் ஒரு மணி நேரமும், மற்ற மாவட்டங்களில் நாள் தோறும் 2 மணி நேரமும் அறிவிக்கப்பட்ட மின்வெட்டு நடை முறைப்படுத்தப்படுகிறது.

இது தவிர, நாள்தோறும் 8 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை அறிவிக்கப்படாத மின்வெட்டு நடை முறைப்படுத்தப்படுவதால், தமிழகமே இருளில் மூழ்கியுள்ளது.

தொடர் மின் வெட்டால் சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள், விசைத்தறி, பஞ்சாலை, நூற்பாலை உள்ளிட்ட அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளன. பயிர்களுக்கு நீர்ப்பாய்ச்ச முடியாமல் உழவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். தேர்வு நேரம் நெருங்கிவிட்ட நிலையில், பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் படிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

இரவு நேரங்களில் மின்சாரம் இல்லாததால், உறங்குவதற்குக் கூட முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மின்சாரம் எப்போது வரும், போகும் என்பதே தெரியாததால், தொழிற்சாலைகளை இயக்க முடியாத நிலை உள்ளது. இதனால் தொழிற்சாலைகளை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதே நிலை தொடர்ந்தால், தமிழகத்தின் ஒட்டு மொத்த பொருளாதாரமும் முடங்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. தமிழக அரசு கடை பிடித்து வரும் தவறான கொள்கைகள்தான் இந்த மின் வெட்டுக்கு காரணம் ஆகும். மின் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரத்தை வாங்கி தமிழ்நாடு மின்சார வாரியம் வழங்கி வந்தது. ஆனால் நிதி நிலையை காரணம் காட்டி வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்குவது நிறுத்தப்பட்டதுதான் மின் வெட்டுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரத்தை வாங்கி, தொழில் துறையினருக்கு வழங்கினால் ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. ஆனால் மின் வெட்டால் ஒவ்வொரு நாளும் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு தொழில் உற்பத்தி பாதிக்கப்படுவதாக தொழில் துறையினர் கூறியுள்ளனர்.

இது தமிழக பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். எனவே வெளி மாநிலங்களில் இருந்தும் நடுவன் தொகுப்பில் இருந்தும் மின்சாரத்தை வாங்கி, தமிழ்நாட்டில் மின் வெட்டைப் போக்க போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு வேளை மின் வெட்டு தவிர்க்கவே முடியாததாக இருந்தால், அதை முறைப்படுத்த வேண்டும். சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு விட்டு விட்டு மின்சாரம் வழங்குவதற்கு பதில் தொடர்ந்து 10 முதல் 12 மணி நேரம் மின்சாரம் வழங்க வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ம.க. சார்பில் வருகிற 20 ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பாக மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். இப்போராட்டத்தில் பா.ம.க. நிர்வாகிகளும், அதன் துணை அமைப்புகளின் நிர்வாகிகளும் பெருமளவில் கலந்து கொள்வார்கள். இவ்வாறு அதில் கூறியுள்ளார்

Saturday, February 11, 2012

பாமக ஆட்சிக்கு வந்தால்...: அன்புமணி பேச்சு

தஞ்சை (வடக்கு) மாவட்ட பாமக சார்பில் கும்பகோணம் மகாமகக் குளம் மேல்கரையில் சனிக்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், அன்புமணி ராமதாஸ் பேசியது:


45 ஆண்டுகாலம் ஆட்சி செய்த திராவிடக் கட்சிகள் தமிழகத்தை சுரண்டி, தமிழர்களைக் குடிகாரர்களாகவும், சோம்பேறிகளாகவும் மாற்றி விட்டனர். இந்த திராவிட கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும். அரிசி, டி.வி, மிக்ஸி, ஆடு, மாடு என இலவசமாக வழங்குகிறார்கள். இனி இலவசமாக மது பாட்டில்கள் தான் வழங்கவேண்டும். அதையும் வழங்குவார்கள்.


மாற்றத்தை மற்றவர்களால் கொடுக்க முடியாது. அவர்களால் நாடு கெட்டு போய் விட்டது. வித்தியாசமான மாற்றத்தை பாமக மட்டுமே தர முடியும். பாமக ஒரு வரைவு செயல் திட்டத்தை தயாரித்துள்ளது. அதில் 16 தலைப்புகளில் வேளாண்மை, கல்வி, தொழில் வளர்ச்சி, சமூகநீதி, சுகாதாரம் உள்ளிட்டவைகளில் வளர்ச்சியடைய பாடுபடுவோம்.


பாமக ஆட்சிக்கு வந்தால் இலவசப் பொருள்கள் கிடையாது. மாறாக அனைவருக்கும் கல்வி, தரமான சுகாதாரம், விவசாயிகளுக்கு அனைத்து இடுபொருட்கள் இவை தான் இலவசமாக வழங்கப்படும்.


தமிழக மக்களின் முன்னேற்றத்தை பாமக மட்டுமே கொண்டு வரும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இளைஞர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு உருவாகும். யாரும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் இல்லை என்ற நிலைûயை ஏற்படுத்துவோம்.


மின்வெட்டு பிரச்னை உடனடியாகத் தீர்க்கப்படுமென முதல்வர் ஜெயலலிதா கூறினார். ஆட்சிக்கு வந்ததும் 2012 ல் என்றார். இப்போது அடுத்த ஆண்டு தீரும் என்கிறார்.
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும் :

Thursday, February 9, 2012

வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்குவதை நிறுத்தியது தான் மின்வெட்டுக்கு காரணம்- ராமதாஸ்

சென்னை: தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் மின்வெட்டு மீண்டும் மிக மோசமான நிலையை அடைந்திருக்கிறது. மின்வெட்டு 8 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தியை மின்வாரியம் மறுத்துள்ள போதிலும் சென்னையில் 2 மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரையிலும் மற்ற மாவட்டங்களில் 8 முதல் 10 மணி நேரம் வரையிலும் அறிவிக்கப்படாத மின்வெட்டு நடைமுறையில் உள்ளது.

மின் தட்டுப்பாட்டை சமாளிக்க இதுவரை வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்கப்பட்டது. தற்போது மின்வாரியத்தின் நிதி நிலையை காரணம் காட்டி வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்குவதை ஆட்சியாளர்கள் நிறுத்திவிட்டதுதான் மின்வெட்டு அதிகரித்ததற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

மின்வெட்டைக் கண்டித்து தொழில்துறையினரும், பொதுமக்களும் போராட்டம் நடத்த தொடங்கியுள்ள நிலையில் நிலைமை மோசமடைவதைத் தடுக்க மின்வெட்டை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.

மின்சாரம் என்பது அடிப்படை தேவை. இதை தடையின்றி வழங்குவதை சேவையாக கருத வேண்டும். லாபம் ஈட்டும் தொழிலாக பார்க்கக் கூடாது. உடனடியாக சரி செய்ய வேண்டும்.

முதல் கட்டமாக மின்வெட்டின் நேரத்தை குறைக்க வேண்டும். எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த நேரத்தில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்பதை வெளிப்படையாக அறிவித்து அதை உறுதியாக பின்பற்ற வேண்டும்.

அடுத்தகட்டமாக மின்வெட்டை அடியோடு ரத்து செய்ய வேண்டும். இதற்காக மத்திய அரசை வலியுறுத்தி மத்திய மின் தொகுப்பில் இருந்து மின்சாரம் பெறுதல், வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன் கூறியுள்ளார் ராமதாஸ்.

Saturday, February 4, 2012

தைலாபுரத்தில் அவசர ஆலோசனை :

ஒரு நாளிதழ் மீது பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் கோ.க.மணி தலைமையில் சாதி மோதலை தூண்டும் விதமாக செய்தி வெளியிட்டுள்ளார்கள் . அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு சென்னை கமிஷனர் அலுவலகத்தில் மனு தந்தனர்.




அதனையொட்டி இன்று தைலாபுரத்தில் வன்னியர் சங்கத்தின் சார்பில் அவசர கூட்டம் நடத்தியுள்ளனர். அதில் மாநில, மாவட்ட வன்னியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.









அதில் பேசிய வன்னியர் சங்க தலைவர் செ.குரு. எம்.எல்.ஏ, வன்னியர்கள் மீது தினமலர் அவதூறாக எழுதியுள்ளது.

இதை படித்துவிட்டு நமது இயக்கத்தை சார்ந்தவர்கள் யாரும் எனக்கு போன் செய்யவில்லை. அதற்கு பதிலாக வன்னிய மக்கள் நிறைய பேர் எனக்கு போன் செய்து பேசினர். என்ன செய்யலாம் என கேட்டனர்.



மாவட்டந்தோறும் வன்னியர்கள் சார்பில் அந்த நாளிதழ் மீது வழக்கு போடுங்கள் என கூறினேன். அதன் அடிப்படையில் வழக்குள் தந்து வருகின்றனர்.

அதிக பட்சமாக திருவண்ணாமலையில் 30 வழக்கு இன்று வரை தந்துள்ளனர். எல்லா மாவட்டங்களிலும் வழக்கு தாக்கலாகி வருகிறது என பேசியுள்ளார்.




அந்த நாளிதழை கண்டித்து வரும் 10 ந்தேதி ஒவ்வொரு தாலுக்கா அலுவலகம் முன்பும் போராட்டம் நடத்துவது என முடிவு செய்துள்ளனர்.




வரும் 18ந்தேதி, வன்னியர் வரலாறு என்ற குறுந்தகடு 3 பாகங்களை வெளியிடுவது எனவும் கூறப்பட்டுள்ளது.




மே 5ந்தேதி சித்திரை பெருவிழா மாமல்லபுரத்தில் நடக்கும் அதில் பெரும்பாலானவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.




நாளிதழ் மீது கடும் கோபத்தில் பாமக தலைமை உள்ளது என்பது குறிப்பிடதக்கது

Friday, February 3, 2012

தினமலர் கிருஷ்ணமூர்த்தி, லட்சுமிபதி மீது போலீஸ் கமிஷனரிடம் புகார்

சென்னை: வன்னியர் சமுதாயத்தைப் பற்றி இழிவாக செய்தி வெளியிட்டதற்காக ‘தினமலர்’ ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதன் வெளியீட்டாளர் லட்சுமிபதி ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனரிடம் வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு எம்எல்ஏ புகார் செய்துள்ளார்.
சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம், வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு நேற்று அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
நான் வன்னியர் சங்க மாநில தலைவராகவும், ஜெயங்கொண்டம் எம்எல்ஏவாகவும் உள்ளேன். வன்னியர் சங்கம், டாக்டர் ராமதாஸை நிறுவனராக கொண்டு செயல்பட்டு வருகிறது. வன்னியர் சமூகத்தின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்துக்காக எங்கள் சங்கம் பாடுபட்டு வருகிறது. தமிழகத்தில் வன்னியர்கள் தனி பெரும் சமூகத்தினராக உள்ளனர். ஆனால், ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, வெளியீட்டாளர் லட்சுமிபதி ஆகியோரால் நடத்தப்படும் தினமலர் நாளிதழில் கடந்த 29ம் தேதி சென்னை பதிப்பின் 2ம் பக்கத்தில் Ôவாழ்வாதாரத்தை உயர்த்த இப்படியும் ஐடியாÕ Ôகவுண்டர்களாக மாறிவரும் வன்னியர்கள்Õ என்ற தலைப்பில் உண்மைக்கு புறம்பான, அவதூறான இருபிரிவினரிடையே பகைமையை தூண்டும் வகையிலும் மற்ற சமூகத்தினரிடம் வன்னியர் சமூக மக்களை தாழ்த்தி, தனிமைப்படுத்தும் வகையிலும், பொதுமக்கள் மத்தியில் வன்னியர் சமூக மக்களை அவமதிக்கும் விதத்திலும் கிருஷ்ணமூர்த்தி, லட்சுமிபதி ஆகியோர் ஒரு கட்டுரையை திட்டமிட்டு, வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் வெளியிட்டுள்ளனர்.
அந்தக் கட்டுரையில், ‘வன்னியர்கள் பிற சமூகத்தினர் மத்தியில் பழகுவதை தவிர்த்து, குறிப்பிட்ட இடைவெளியை ஏற்படுத்திக் கொள்வர். வன்னியர்கள் வறுமை காரணமாக சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட காலமும் உண்டு, சமூகத்தில் தங்களை மேம்படுத்தி கொண்டவர்களாக உயர்த்திக் கொண்டாலும், இன்றளவும் அவர்கள், வம்புக்கும்(சண்டைக்கும்) அடாவடிக்கும் (அடக்குமுறைக்கும்) பெயர் போனவர்கள் என்ற எண்ணம் பிற சமூகத்திடம் உள்ளது.
அதன் காரணமாக வன்னியர்கள் என்றால் அவர்களிடம் வரவு, செலவு, கொடுக்கல் வாங்கல் கூடாது என்பதை எழுதப்படாத விதியாக பிற சமூகத்தினர் கடைபிடிக்கிறார்கள். தொழில் ரீதியான பாதிப்புகளை தவிர்க்கும் வகையில் தங்களை கவுண்டர் என சமூகத்தில் அறிமுகம் செய்து கொண்டு வலம் வருகின்றனர்.
கவுண்டர் என வலம் வரும் வன்னியர்கள் தற்போது தங்களை கொங்கு வேளாள கவுண்டர் என மாற்றிக் கொள்ளவும் துவங்கி விட்டனர். இது வன்னியர் மற்றும் கவுண்டர் சமூகத்தில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு செய்தி வெளியிட்டு வன்னிய மக்களை அவமதித்து வன்னியர், கவுண்டர் சமூகத்தினரிடையே தவறான எண்ணத்தை பரப்பி கருத்து வேறுபாட்டையும், சாதி மோதலையும், தினமலர் நாளிதழ் திட்டமிட்டு உருவாக்கியுள்ளது. அதோடு அதன் இணையதளத்திலும் இக்கட்டுரையை மேற்படி கிருஷ்ணமூர்த்தி, லட்சுமிபதி ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.
இந்தச் செய்தியினால் இரு சமூகத்தினரிடையே பிரிவினையும், வன்முறையும் ஏற்படும் சூழல் உள்ளது. எதிர்காலத்திலும் கிருஷ்ணமூர்த்தி, லட்சுமிபதி ஆகியோர் தொடர்ந்து உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுவார்கள் என உறுதியாக நம்புகிறேன். எனவே சட்டத்துக்கு விரோதமாக, உண்மைக்கு புறம்பாக, அவதூறாக செய்தி வெளியிட்ட மேற்படி எதிரிகளால் நடத்தப்படும் தினமலர் நாளிதழை தடை செய்யும்படியும், மேற்படி கிருஷ்ணமூர்த்தி, லட்சுமிபதி மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளும்படியும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் ஜெ.குரு கூறியுள்ளார்.
பாமக தலைவர் ஜி.கே.மணி நேற்று அளித்த பேட்டி:
வன்னியர் சமூகத்தை பற்றி தினமலர் பத்திரிகையில் அவதூறாக கொச்சைப்படுத்தி எழுதியிருக்கிறார்கள். எங்கள் மேல் அவர்களுக்கு என்ன காழ்ப்புணர்ச்சி என்று தெரியவில்லை. எங்கள் சமூகத்தை சேர்ந்த பலர் பல்வேறு கட்சிகளில் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் கொதித்துப் போயுள்ளனர். போனில் தொடர்பு கொண்டு, ‘மெஜாரிட்டி சமூகத்தினரான வன்னியர்களை கொச்சைப்படுத்தி தொடர்ந்து செய்தி வெளியிடும் தினமலர் நிர்வாகிகளான கிருஷ்ணமூர்த்தி, லட்சுமிபதி ஆகியோரை உடனே கைது செய்து சிறையில் அடைக்கும் வரை போராட வேண்டும்’ என எங்களை வலியுறுத்தி வருகிறார்கள். எங்கள் சமூகத்தினர் அனைவரும் உழைக்கும் வர்க்கத்தினர். அப்படிப்பட்ட எங்களை பற்றி தினமலர் பத்திரிகையில் தவறாக எழுதியுள்ளார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம். கிருஷ்ணமூர்த்தி, லட்சுமிபதியை கைது செய்ய வேண்டும். எங்கள் புகார் மீது விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸ் கமிஷனர் உறுதி அளித்துள்ளார். இவ்வாறு ஜி.கே.மணி கூறினார். இப்பேட்டியின் போது வன்னியர் சங்க மாநில தலைவர் ஜெ.குரு எம்எல்ஏ, பாமக வக்கீல்கள் சங்கத் தலைவர் பாலு ஆகியோர் உடன் இருந்தனர்.

சட்டமன்றத்தில் ஆளும்கட்சி எதிர்கட்சி நாகரீகமாக நடந்துக்கொள்ள வேண்டும்: ராமதாஸ்

திருவண்ணாமலையில் புதிய அரசியல், புதிய நம்பிக்கை என்ற புத்தக வெளியீட்டு விழாவுக்கு வந்த இராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசினார்.



அப்போது அவர் கூறுகையில், சட்டமன்றத்தில் ஆளும்கட்சி எதிர்கட்சி நாகரீகமாக நடந்துக்கொள்ள வேண்டும். சட்டமன்றத்தில் நாக்கை கடிப்பது, பல்லை கடிப்பது, கை நீட்டி பேசுவது என சினிமாவில் பேசுவது போன்று அநாகரிகமாக சட்டமன்றத்தில் நடந்துக்கொள்வது அநாகரீகமானது.



இதனை தகுதியில்லாதவர்க்கு எதிர்கட்சி தலைவர் பதவி கிடைத்துள்ளது என அந்தம்மா பேசியுள்ளார். அதில் நாங்கள் உடன் படுகிறோம், ஏற்றுக்கொள்கிறோம்.



சட்டமன்றத்தில் ஆளும்கட்சியை விட எதிர்கட்சிகளுக்கு அதிகம் பேச வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். அதுதான் உண்மையான ஜனநாயகம். இப்போது தான் வந்துள்ளார்கள். இனி அதிகம் எதிர்கட்சி உறுப்பினாகள் பேச வாய்ப்பு தருவார்கள் நம்புகிறோம். வாய்ப்பு தர வேண்டும் என்றார்.



ஜெ சசிகலா மோதல் பற்றிய உங்களது கருத்து என்ற கேள்விக்கு, அதற்க்குள் நான் போக விரும்பவில்லை. அதை மக்கள் நேரடியாக பார்த்துக்கொண்டுள்ளார்கள் என்றார்.

இடைத்தேர்தலில் போட்டியில்லை: ராமதாஸ்

புதிய அரசியல் புதிய நம்பிக்கை என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் கூட்டம் நடத்தி வருகிறது பாட்டாளி மக்கள் கட்சி. அதற்கான கருத்து கேட்புக்கான முன்வரைவு புத்தகம் ஒன்றை சென்னையில் வெளியிட்டார் அதன் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ். இன்று திருவண்ணாமலையில் அதே வெளியீட்டு நிகழ்வில் பேசிய இராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.



கேள்வி: 20 ஆண்டுகளாக அரசியல்கட்சியாக உள்ள பாமக தமிழகத்திற்க்கு என்னன்ன செய்துள்ளதாக என்னுகிறிர்கள்?.



இராமதாஸ்: சமச்சீர்கல்விக்காக போராட்டம், இடஒதுக்கீட்டுக்கான போராட்டம், தமிழ் ஆட்சிமொழிக்கான போராட்டம் போன்றவற்றை நடத்தியுள்ளோம்.



கேள்வி: வரும் சங்கரன்கோயில் சட்டமன்ற இடைத்தேர்தலில் பாமக போட்டியிடுமா?



இராமதாஸ்: சங்கரன்கோயில் இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிடவில்லை என்றார்.

Wednesday, February 1, 2012

பா.ம.க. பாதையில்... புதிய அரசியல், புதிய நம்பிக்கை

திராவிடக் கட்சிகளுடன் இனி எக்காலத்திலும் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டோம் என்று மறுபடியும் அறிவித்துள்ளார் டாக்டர் ராமதாஸ்.

பா.ம.க. பாதையில்... புதிய அரசியல், புதிய நம்பிக்கை என்ற தலைப்பிலான கொள்கை மற்றும் செயல் திட்ட அறிக்கை வெளியிட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.அதில் கலந்து கொண்டு ராமதாஸ் திட்ட அறிக்கையை வெளியிட்டார்.

பின்னர் அவர் பேசுகையில்,

புதிய அரசியல் புதிய நம்பிக்கை என்ற ஆவணத்தை வெளியிட்டு இருக்கிறோம். 110 பக்கங்களை கொண்டதாக இந்த ஆவணம் அமைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இது போல் 22 ஆவணங்களை தயார் செய்து நாங்கள் வெளியிட்டு இருக்கிறோம். இந்தியாவில் எந்தவொரு கட்சியும் இது போல் வெளியிட்டது இல்லை.

கடந்த ஆண்டு பொதுக்குழுவில் எடுத்த முடிவின்படி திராவிட கட்சிகளுடனும், தேசிய கட்சிகளுடனும் இனி எந்த காலத்திலும் கூட்டணி வைக்க மாட்டோம் என்று முடிவு செய்ததின் அடிப்படையில் இந்த ஆவணத்தை தயார் செய்து உள்ளோம். மக்களின் கருத்துக்களை கேட்பதற்கு இதை வெளியிட்டு இருக்கிறோம். இதற்காக கடைசி பக்கத்தில் கருத்து கேட்பு படிவத்தையும் இணைத்து இருக்கிறோம். அதில் மக்கள் தங்கள் கருத்துக்களை எழுதி அனுப்பலாம்.

அரசுக்கும், மக்களுக்கும் இடையேயான சமூக ஒப்பந்தத்தை திராவிட கட்சி ஆட்சியாளர்கள் மீறி விட்டனர். விடுதலை அடைந்து 65 ஆண்டுகள் ஆகியும், தமிழ்நாட்டின் சரிபாதி மக்கள் இலவசத்துக்கு கையேந்துபவர்களாக வாழ்வதே இதற்கு எடுத்துக்காட்டு. இந்த நிலை மாற்றப்பட வேண்டும் என பா.ம.க. விரும்புகிறது. புதிய பாதையை வகுத்து எல்லா மக்களும் எல்லாம் பெற்று வாழும் புதிய தமிழ்நாட்டை கட்டமைக்கும் வகையில் புதிய அரசியல் புதிய நம்பிக்கை எனும் ஆவணத்தை முன் வைக்கிறது.

திராவிட கட்சிகளின் ஆட்சி 1967-ல் தொடங்கியது. 1957, 1962, 1967 ஆகிய தேர்தல்களில் மக்கள் முன் பல வாக்குறுதிகளை அளித்தனர்.

இதில் நன்மையளிக்கும் வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை. தேவிக்குளம், பீர்மேட்டை மீட்பேன் என்று கூறி கச்சத்தீவை தாரை வார்த்தனர். திருத்தணியை ம.பொ.சி. உள்ளிட்டோர் மீட்டனர். தீமையான அணுஉலை அமைப்போம் என்பதை நிறைவேற்றினர். அவ்வாறே தமிழை அழித்து ஆங்கிலம் வளர்த்தனர்.

சமூகநீதி, ஜனநாயகம், சமத்துவம், தமிழ்தேசியம், மதச்சார்பின்மை ஆகியவற்றை முதன்மை கொள்கைகளாக கொண்டு பா.ம.க. செயல்பட்டு வருகிறது. பா.ம.க.வின் புதிய செயல் திட்டத்தின்படி, வேளாண்மை, அமைப்புசாரா தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, கட்டமைப்பு மேம்பாடு, சமூகநீதி, கல்வி, நலவாழ்வு, சமூக பாதுகாப்பு கிராமப்புற மேம்பாடு, நகர்ப்புற மேம்பாடு, சுற்றுச்சூழல், நல்ல ஆளுகை, நல்ல அரசியல், கூட்டாட்சி, பண்பாட்டு வளர்ச்சி என்ற கோட்பாடுகளுடன் புதிய நம்பிக்கையுடன் பா.ம.க. செயல்படும்.

அரசியல் கட்சிகள் அளவிலான மாற்றம் என்பது எல்லா கட்சிகளுக்கும் பொதுவானதாகும். அந்த வகையில், குறிப்பிட்ட காலத்திற்குள் பா.ம.க. மாற்றத்தை கொண்டு வரும். அது போல மற்ற கட்சிகளும் மாறுவது மக்களாட்சிக்கு கட்டாயமானதாகும்.

தமிழ்நாட்டு மக்கள் பா.ம.க.வை பெருவாரியாக ஆதரித்து, ஆளும் கட்சியாக மாற்றும் போது புதிய அரசியல், புதிய நம்பிக்கை திட்டத்தை தமிழ்நாட்டு மக்களுடனான உடன்படிக்கையின் அடிப்படையில் கொள்கைகளை, திட்டங்களை, நடவடிக்கைகளை பா.ம.க. உடனடியாக நிறைவேற்றும் என்றார்.

சரி, சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் போட்டியிடுமா பாமக என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதெல்லாம் இன்னும் முடிவு செய்யவில்லை என்றார் ராமதாஸ்.

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: