Monday, November 29, 2010

கருணாநிதியுடன் பாமக தலைவர் ஜி.கே.மணி திடீர் சந்திப்பு

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தமிழக முதல்வர் கருணாநிதியை இன்று திடீரென சந்தித்துப் பேசினார்.

புனித ஜார்ஜ் கோட்டையில் இன்று காலை இச் சந்தித்து நடந்தது.

மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இச் சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய மணி,
தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உரிமைகள் மற்றும் சலுகைகளை கிடைக்கச் செய்ய ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியமாகும். இதை காலம் தாழ்த்தாமல் எடுக்க மத்திய அரசை முதல்வர் கருணாநிதி வலியுறுத்த வேண்டும். ஒருவேளை மத்திய அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த காலம் தாழ்த்தினால் தமிழக அரசே விரைவாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று முதல்வர் கருணாநிதியிடம் கோரிக்கை வைத்தேன்.

இதுதவிர உயர்நீதிமன்றத்தில் நீதிபதி பணியிடங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு போதுமான பிரதிநிதித்துவம் இல்லை. குறிப்பாக வன்னிய சமூகத்தைச் சேர்ந்த ஒரே ஒரு நீதிபதி மட்டும் உள்ளார். இந்த எண்ணிக்கையை அதிகரிக்க அரசு முயற்சி எடுக்க வேண்டும் என்றும் முதல்வரிடம் வலியுறுத்தினேன்.

பாமகவின் இந்தக் கோரிக்கைகளை முதல்வர் கனிவுடன் கேட்டுக்கொண்டார். அவருடனான சந்திப்பு திருப்திகரமாக அமைந்தது என்றார்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் பாமக இடம் பெறுமா என்று கேட்டதற்கு, இன்றைய சந்திப்பின்போது கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை. கூட்டணி குறித்து பேசுவதற்குரிய காலம் இன்னும் கனியவில்லை என்றார்.

இருப்பினும் கூட்டணி விஷயமாகவும் இருவரும் பேசியதாகவும் தெரிகிறது.

Sunday, November 14, 2010

பா.ம.க. ஆட்சி வருவது இளைஞர்கள், இளம்பெண்களான உங்கள் கையில்தான் உள்ளது

விழுப்புரம்: தமிழகத்தில் வன்னியர்கள் இரண்டரை கோடி பேர் இருந்தும் என் பேச்சை யாரும் கேட்காததால் பா.ம.க. ஆட்சிக்கு வர முடியவில்லை என்று டாக்டர் ராமதாஸ் கூறினார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி கெடார் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இளைஞர்கள், இளம் பெண்கள் பயிற்சி கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசுகையில், "விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் 2 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஒண்ணேகால் லட்சம் பேர் வன்னிய சமூத்தினர். இதில் 60 ஆயிரம் பேர் நம்முடைய வேட்பாளருக்கு வாக்களித்தாலே போதும். நாம்தான் ஜெயிப்போம். மாவட்டம் முழுவதிலும் உள்ள 11 தொகுதிகளிலும் வன்னியர்கள் மாம்பழத்திற்கு ஓட்டுப் போட்டார்களேயானால் 11 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெறுவோம்.

படுத்துக் கொண்டே ஜெயிக்கலாம்!

அதேபோல் தமிழகம் முழுவதும் வன்னியர்கள் பா.ம.க.விற்கு வாக்களித்தால் 100 தொகுதியில் கண்டிப்பாக நாம் வெற்றி பெற்றுவிடுவோம். ஆட்சி அமைக்க 17 தொகுதிதான் தேவை. அப்போது யாராவது தானாகவே முன்வந்து ஆதரவு கொடுப்பார்கள். தாழ்த்தப்பட்டவர்களும், வன்னியர்களும் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்தித்தால் 127 தொகுதிகளில் படுத்துக் கொண்டே வெற்றி பெறலாம்.

என் பேச்சை கேட்கவில்லையே...

உத்தரபிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த தலித் இனத்தின் மாயாவதி 5-வது முறையாக முதல்வராக பணியாற்றி வருகின்றார். அங்கு 20 முதல் 27 சதவீதம்தான் தாழ்த்தப்பட்டவர்கள் உள்ளனர். இங்கு நாம் 2 1/2 கோடி பேர் வன்னியர்கள் இருந்தும் நாம் ஆட்சி செய்ய முடியவில்லை. காரணம் எனது பேச்சை யாரும் கேட்பதில்லை.

பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஏழைகள் முன்னேறுவதற்காக பல்வேறு திட்டங்களை தீட்டி உள்ளோம்.

நீங்கள் பா.ம.க.விற்கு வாக்களித்தால் நான் ஏன் ஜெயலலிதாவின் தோட்டத்திற்கும், கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டிற்கும் செல்கின்றேன்.

பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் கள்ளச் சாராயத்தை ஒழிப்பதற்கான சட்ட திருத்தத்தில் முதல் கையெழுத்தையிடுவோம். ஒரு தடவை பா.ம.க.விற்கு வாய்ப்பு கொடுத்தால் பின்னர் ஆட்சியை பார்த்து தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சியை இருக்க செய்வீர்கள். பா.ம.க. ஆட்சி வருவது இளைஞர்கள், இளம்பெண்களான உங்கள் கையில்தான் உள்ளது..." என்றார்

Wednesday, November 3, 2010

பெரிய அளவில் மதுஒழிப்பு போராட்டம்-ராமதாஸ்

திருவள்ளூர்: பாமக தொண்டர்கள் கூட்டணி பற்றி கவலைப்படத் தேவையில்லை என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறினார்.

திருவள்ளூரில் பாமக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பயிற்சி முகாமில் பேசிய அவர், பாமக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. அதைப் பார்த்து மாற்றுக் கட்சியினர் பொறாமையிலும் கலக்கத்திலும் உள்ளனர்.

எங்களுக்கு பதவிகள் மீது விருப்பமில்லை. ஆனால் மாற்றுக் கட்சியினர் நமது சமுதாயத்துக்காக இடஒதுக்கீடு உள்ளிட்ட எந்தச் சலுகைகளுக்காகவும் போராடுவதில்லை. நமக்காக போராடவே நமக்கு பதவிகள் வேண்டும்.

தற்போது இளைஞர்கள் பலர் சினிமா மோகத்தில் நடிகர்களின் பின்னால் செல்கின்றனர். சினிமா வாழ்க்கை அல்ல, அது ஒரு பொழுதுபோக்கு என்பதை அவர்கள் உணர வேண்டும். சினிமா நடிகர்களை விட்டுவிட்டு சமுதாயத்துக்காக போராட வேண்டும்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுகூடி பாமகவை தோற்கடித்தனர். ஆனால் எழுச்சியுள்ள இளைஞர்கள் உள்ளவரை பாமகவை யாராலும் அழிக்க முடியாது என்றார்.

பெரிய அளவில் மதுஒழிப்பு போராட்டம்-ராமதாஸ்:

கூட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசுகையில், பல ஆண்டுகளுக்கு முன் வன்னியர் சமுதாயத்தினர் கல்வியில் மிகவும் பின் தங்கியிருந்தனர். 27 ஆண்டு போராட்டத்துக்கு பிறகு 20 சதவீத இடஒதுக்கீடு பெற்றோம். இந்த ஒதுக்கீடு மூலம் ஆண்டுதோறும் 250 மாணவர்கள் மருத்துவ படிப்பிலும், 15,000 பேர் பொறியியல் படிப்பிலும் சேர்ந்து வருகின்றனர்.

இந்த இட ஒதுக்கீட்டைப் பெற பாமக நடத்திய போராட்டங்கள், தியாகங்களை இளைஞர்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும். போராட்டத்தில் இறந்த 21 மாணவர்களின் தியாகங்களையும் நினைவு கூற வேண்டும்.

சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்தப்பின் பெரிய அளவில் மது ஒழிப்பு போராட்டத்தில் ஈடுபடப் போகிறேன். தமிழகத்தில் 15 முதல் 30 வயதுள்ள இளைஞர்கள் என்று பாமகவில் இணைகிறார்களோ அன்றைக்கு பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் என்றார்.

கூட்டணி குறித்து கவலை வேண்டாம் என்றும், தேர்தலுக்குப் பின்னரே மது ஒழிப்புப் போராட்டம் என்றும் பாமக அறிவித்துள்ளதன் மூலம் திமுகவுடன் கூட்டணிக்கு அந்தக் கட்சி தயாராகிவிட்டதாகவே தெரிகிறது

Tuesday, November 2, 2010

போக்குவரத்து தொழிலாளர்களை கருணாநிதி அரசு ஊழியராக்குவார்: ராமதாஸ்

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களை முதல்வர் கருணாநிதி அரசு ஊழியராக்குவார் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

பாமகவின் பாட்டாளி தொழிற்சங்கத்தின் சார்பில் போக்குவரத்து தொழிலாளர்கள் கலந்து கொண்ட கலந்துரையாடல் கூட்டம், சென்னையில் நடந்தது. அதில் பேசிய ராமதாஸ்,

அரசு ஊழியர் என்பது ஒரு கெளரவம். அதற்காகவே, தங்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும் என்று போக்குவரத்து தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

எனவே அனைத்து போக்குவரத்து தொழிலாளர்களையும் அரசு ஊழியர்களாக ஆக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் அரசுக்கு எந்த இழப்பும் ஏற்படப் போவதில்லை.

நான் ஒரு போராளி என்பது அனைவருக்கும் தெரியும். எனவே, போக்குவரத்து தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக ஆக்க நான் போராடவும் தயங்க மாட்டேன்.

எனினும், முதல்வர் கருணாநிதி அத்தகைய சூழலை ஏற்படுத்த மாட்டார் என்று நான் நம்புகிறேன் என்றார் ராமதாஸ்.

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: